வள்ளியம்மை சுப்பிரமணியம்

ஈழத்து எழுத்தாளரும், சமூக உணர்வாளரும், நெசவு ஆசிரியரும் ஆவார் From Wikipedia, the free encyclopedia

வள்ளியம்மை சுப்பிரமணியம்
Remove ads

வள்ளியம்மை சுப்பிரமணியம் (7 அக்டோபர் 1938 – 26 சூன் 2025) ஈழத்து எழுத்தாளரும், சமூக உணர்வாளரும், நெசவு ஆசிரியரும் ஆவார். இவர் இலங்கையின் பொது உடமை இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான கே. ஏ. சுப்பிரமணியத்தின் மனைவி ஆவார்.[1][2]

விரைவான உண்மைகள் வள்ளியம்மை சுப்பிரமணியம், பிறப்பு ...
Remove ads

வாழ்க்கைக் குறிப்பு

Thumb
திருமணத்தில் கே. ஏ. சுப்பிரமணியம் வள்ளியம்மைக்கு கட்டிய அரிவாளும் சம்மட்டியும் மாங்கல்யத் தாலி

வள்ளியம்மை சுப்பிரமணியம் யாழ்ப்பாண மாவட்டம், சுழிபுரம் பத்திரகாளி கோவிலடியைப் பிறப்பிடமாக‍க் கொண்டவர். பண்ணாகம் மெய்கண்டான் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றவர். கற்கும் காலத்திலேயே எழுத்தார்வம் மிக்கவராய் திகழ்ந்த இவர் பண்டிதர் படிப்பினை மேற்கொண்டு பால பண்டிதர் தேர்வில் சித்திபெற்றார். நெசவுக் கற்கை நெறியில் பயின்று நெசவு ஆசிரியராக பல்வேறு ஊர்களில் பணிபுரிந்தார். 1962 இல் கொல்லங்கலட்டியைச் சேர்ந்த பொதுவுடமைவாதியான கே. ஏ. சுப்பிரமணியம் என்பவரைக் காதலித்து கலப்புத் திருமணம் புரிந்த இவரது திருமணம் சீர்திருத்த திருமணமாக அமைந்த‍து. அரிவாளும் சம்மட்டியுமே தாலியாக அமைந்த‍து. சத்தியராசன் (மீரான் மாஸ்டர்), சத்தியமலர், சத்தியகீர்த்தி என மூன்று பிள்ளைகளைப் பெற்றார். ஒரு சமூகப் போராளியாக சாதியத்திற்கெதிரான போராட்டத்தில் தலைமை தாங்கிய துணைவருக்கு உற்ற துணையாக இருந்து பல இன்னல்களையும் சுமைகளையும் சுமந்து வாழ்ந்து வந்தவர்.[3][4] இனப்போர்க் காலத்தில் மூத்த மகன் மீரான் மாஸ்டர் இனவிடுதலைப் பாதையில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் அமைப்புடன் இணைந்தார். இதனால் 1984 டிசம்பரில் இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டார். இந்திய-இலங்கை ஒப்பந்தம், 1987க்குப் பிறகும் அவர் விடுவிக்கப்படவில்லை. வள்ளியம்மையின் தொடர்ச்சியான முயற்சிகள் மற்றும் கோரிக்கைகள் மூலம் பன்னாட்டு மன்னிப்பு அவை தலையிட்டு அவரை விடுவித்தது.[5] [6] பின் தமிழகத்தில் நடந்த வாகன விபத்தில் மீரான் மாஸ்டர் இறந்துபோனார். வள்ளியம்மை சிங்கப்பூரில் வசித்தபோது தனது எழுத்து பணியை மீண்டும் ஆரம்பித்தார்.[7] 82 வயதில் மீள வந்து, தனது மகளுடன் இலங்கை சுழிபுரம் சத்தியமனையில் வசித்தபோது, கே.ஏ.எஸ் சத்தியமனை நூலகத்தை அமைத்தார்.[8][3]

Remove ads

எழுத்துலகில்

பாடசாலையில் படிக்கும் காலத்திலேயே எழுத்தாற்றலை விருத்திசெய்த இவர் பண்டிதர் தேர்வுக்காய் கற்றகாலத்தில் எழுதிய சிறுகதைகள் வீரகேசரி, கலைமதி, கலைச்செல்வி, ஜனசக்தி ஆகிய இதழ்களில் வெளிவந்தன. சிங்கப்பூரில் கடற்கரைச் சாலை கவிமாலை அமைப்புடன் இணைந்து பல கவிதைகளை யாத்து வாசித்துள்ளார்.[9] விவாத அரங்குகளில் உரையாற்றியுள்ளார். இவரது பள்ளிக்கூட அனுபவங்களைத் தொகுத்து "பசுமையான நினைவுகளின் பண்ணாகம் மெய்கண்டான்" எனும் நூலை 2019 இல் எழுதியுள்ளார். இவரது கவிதைகளையும் சிறுகதைகளையும் தொகுத்து நவம்பர் 2019 இல் தேசிய கலை இலக்கியப் பேரவை, "வெற்றிக்கு வலிகள் தேவை" என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளது. "ஆயிரம் கவிஞர்கள் கவிதைகள்" நூலிலும் இவரது கவிதை பிரசுரமானது. தொடர்ந்தும் தனது துணைவருடனான வாழ்க்கைப் பயணத்தை "வாழ்வின் சந்திப்புகள்" என்ற தலைப்பில் தொடராக முகநூலில் எழுதியுள்ளார்.[10][11][12]

Remove ads

சமூகப் பணிகள்

நெசவு ஆசிரியையாக பணியாற்றியபோது செல்லும் கிராமங்களிலெல்லாம் தனது மாணவிகளை வழிப்படுத்துவதில் ஆற்றல் மிக்கவராக திகழ்ந்துள்ளார். கணவரின் தலைமறைவு வாழ்வில் பல இன்னல்களையும் தாங்கியவர். இளமையில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினராக இருந்துள்ளார். தேசிய கலை இலக்கியப் பேரவையின் செயற்பாடுகளிலும் தாயகம் இதழின் ஆசிரியர் குழுவிலும் இருந்து செயற்பட்டுள்ளார்.[1][2][3]

வெளியான நூல்கள்

  • பசுமையான நினைவுகளில்...பண்ணாகம் மெய்கண்டான்
  • வெற்றிக்கு வலிகள் தேவை
  • கற்க கசடற
  • பாட்டி சொன்ன கதைகள்
  • ஒரு கம்யூனிஸ்ட் இணையர் வாழ்வின் சந்திப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads