விஜயமங்கலம் சமணக்கோவில்

தமிழ்நாட்டில் அமைந்துள்ள கோவில் From Wikipedia, the free encyclopedia

விஜயமங்கலம் சமணக்கோவில்map
Remove ads

விஜயமங்கலம் சமணகோவில், தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம் விஜயமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள சமணக் கோவிலாகும். கொங்கு மண்டலத்திலேயே தொன்மைமிக்க கோவிலாக இக்கோவில் கருதப்படுகிறது.[1] ஈரோடு மாவட்டத்தின் எல்லையில் அமைந்திருக்கும் விஜயமங்கலம் விஜயபுரி, செந்தமிழ் மங்கை ஆகிய பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளது.

விரைவான உண்மைகள் {{{building_name}}}, அடிப்படைத் தகவல்கள் ...
Remove ads

அமைவிடம்

விஜயமங்கலம் ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், விஜயமங்கலம் பஞ்சாயத்திற்குட்பட்ட விஜயமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ளது. இவ்வூர் ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்கள் எல்லையில் அமைந்ள்ளது.[2] இவ்வூர் பெருந்துறையிலிருந்து 8 கி.மீ. தொலைவிலும், சென்னிமலையிலிருந்து 18.0 கி.மீ. தொலைவிலும், கொடுமணலில் இருந்து 18.8 கி.மீ. தொலைவிலும், திருப்பூரிலிருந்து 24.3 கி.மீ. தொலைவிலும், அறச்சலூரிலிருந்து 31.4 கி.மீ. தொலைவிலும், ஈரோடு மாவட்டத் தலைமையகத்திலிருந்து மேற்கு நோக்கி 32 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

இவ்வூரின் புவியமைவிடம் 11.23°N 77.5°E / 11.23; 77.5 ஆகும்.[3] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 303 மீட்டர் (994 அடி) உயரத்தில் இருக்கின்றது.

Remove ads

வரலாறு

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் வாழ்ந்த பகுதி இது. கொங்கு நாடு 24 நாடுகளாகப் பிரிக்கப்பட்டு இருந்தன. இவ்வூர் குரும்பநாடு என்ற நாட்டில் இடம்பெற்றிருந்தது. கல்வெட்டுகளில் இந்நாடு குறுப்பு நாடு என்று என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.[4] இப்பகுதி சமணர்களின் தொன்மைமிக்க வாழ்விடமாகக் கருதப்படுகிறது.[5]

கொங்கு வேளிர்,விஜயமங்கலத்தைத் தலைநகராகக் கொண்டு இப்பகுதியை ஆண்டு வந்துள்ளனர்.[1][6][7] இவர்கள் பெருங்கதை என்ற பெருங்காப்பிய நூலை இயற்றியுள்ளனர். இவர்கள் சமண சமயத்தைச் சேர்ந்தவராவர்.[8] கொங்குவேளிர் ஒரு தமிழ் சங்கத்தையும் நிறுவியுள்ளனர். விஜயமங்கலம் கோவில் ஒரு காலத்தில் தமிழ்ச்சங்கமாகவும் திகழ்ந்துள்ளது. இதனுடன் தொடர்புடைய இடம் சங்குவடம் என்றும் சங்கு இடம் என்றும் அழைக்கப்பட்டுள்ளது. இந்தச் தமிழ் சங்கம் தொடுத்த வினாவிற்கு தகுந்த விடையளித்த கிருத்தி எனும் கொங்குவேளிர் அரசரின் பணிப்பெண்ணை கொங்குமண்டல சதகங்கள் என்னும் நூல், போற்றுகிறது. இது காரணமாக விஜயமங்கலத்தை மங்கை மாநகரம் என்றும் தமிழ் மங்கை என்றும் போற்றியுள்ளனர்.[9] விஜயமங்கலம் பஸ்திபுரம் பகுதியில் அமைந்துள்ள இந்தச் சமணர் கோவில், இப்பகுதியிலேயே உயர்ந்த மூன்றடுக்கு இராஜகோபுரத்தைக் கொண்டிருந்ததால், உள்ளூர் மக்கள் இக்கோவிலை நெட்டை கோபுரம் என்று அழைக்கிறார்கள்.[10] சங்குவடம் என்ற இடத்தில் அமைந்துள்ள இசசமணப் பள்ளி வீரசங்காதப் பெரும் பள்ளி என்று பெயர் பெற்றுள்ளது.[9]

இந்த கோவில் கி.பி.3-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சமணகோவிலாகும். பின்னாளில் சாமுண்டராயன் என்பவரும், சோழ மன்னர்களும் கோவில் பணிகள் செய்து உள்ளனர்.

Remove ads

கோவில் அமைப்பு

இக்கோவில் மேலைக்கங்கர்களின் கலைப்பாணியைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. கருவறை மற்றும் அர்த்தமண்டபம் என்ற அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது. கருவறை விமானம் சுண்ணாம்பு மற்றும் சுதையால் ஆனது. கோவிலைச் சுற்றி சுற்று மதில் அமைக்கப்பட்டுள்ளது.[1] இக்கோவில் இராஜ கோபுரம் மூன்று நிலைகள் கொண்டது. கோவிலின் முன்பு ஒரே கல்லால் ஆன மானஸ்தம்பம் நிறுவப்பட்டுள்ளது. சமண சமயத்தின் எட்டாவது தீர்த்தங்கரர் ஆன சந்திரபிரபா இவ்வாலயத்தின் மூலவர் ஆவார்.[11] மூலவர் சிலை திருடப்பட்டதால் இவருக்கான பீடம் மட்டும்காணப்படுகிறது. இங்குள்ள அர்த்தமண்டபத்தில், நிறுவப்பட்டுள்ள சமண சமயத்தின் முதலாம் தீர்த்தங்கரரான ஆதிநாதரின் சிலை சிதைந்து காணப்படுகிறது. இந்த சிலைகளுக்கான கால அளவீட்டை அறிய இயலவில்லை. இக்கோவில் முன்மண்டபத்தில், மேலே குறிப்பிட்ட தமிழ் சங்கத்தில் இடம்பெற்றிருந்த ஐந்து தமிழ் புலவர்களின் சிலைகளும், தமிழ் சங்கம் எழுப்பிய வினாவிற்கு விடையளித்துப் புகழ்பெற்ற கிருத்தியை எனும் பணிப்பெண்ணின் சிலையும் இடம்பெற்றுள்ளன.

Thumb
கொங்கு வேளிர் அரசர், பணிப்பெண் கிருத்தியா, தமிழ்சங்கப் புலவர்களின் சிற்பங்கள்

இங்குள்ள் உள்மண்டபத்தில் ரிஷபநாதர் என்னும் ரிஷபதேவரின் வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகள் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. இவை மட்டுமின்றி இக்கோவிலில் இடம்பெற்றுள்ள அரிய சிற்பங்கள் தொன்மையானவை மற்றும் தனித்துவம் மிக்கவை.[9]

சமண மதம் என்பது வடநாட்டில் இருந்து தமிழகத்துக்கு வந்தது. அதுவும் சந்திரகுப்த மௌரியர், அவரது குரு பத்திரபாகுவுடன் தென் இந்தியாவில் 3 ஆயிரம் சீடர்களுடன் வந்து சமண மதத்தை போதித்தார்.

கல்வெட்டுகள்

இக்கோவில் முன் மண்டபத்தில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு, சரவணபெளகுளாவில் இடம்பெற்றுள்ள கோமதீசுவரர் சிலையை நிறுவிய சாமுண்டராயனின் தங்கையான புல்லப்பை எனபவள், இக்கோவிலில் வடக்கிருந்து (சல்லேகனா) நோன்பு நோற்று உயிர்துறந்த செய்தியினைப் பதிவு செய்துள்ளது.[9] பெருங்கதையின் அழகை விளக்கும் மற்றொரு கல்வெட்டு கோவிலுக்குள் இடம்பெற்றுள்ளது. சமணர்கள் மூலம் தமிழுக்கு பல நூல்கள் கிடைத்தன. நிகண்டுகள், காப்பியங்கள், இலக்கண-இலக்கிய புத்தகங்கள் கிடைத்தன. அப்படி இயற்றப்பட்ட ஒரு காப்பியம்தான் பெருங்கதை. இந்த காப்பியத்தை இயற்றியவர் கொங்குவேளிர் என்பவர். இவர் வடநாட்டு மொழியான பைசாச மொழியில் உதயணன் வரலாற்றை கூறும் ஸ்ரீபிருகத்கதா என்னும் காப்பியத்தை, தமிழில் பெருங்கதை என்ற பெயரில் நூலாக எழுதினார்.

தமிழ் இலக்கண நூலான நன்னூலை இயற்றிய பவணந்தி முனிவர் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணதுறவியாவார். இவர் விஜயமங்கலத்தில் பிறந்தவர் ஆவார்.[1]

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

புகைப்படக் காட்சி

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads