திருச்சிராப்பள்ளி
தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஒரு நகரம்திருச்சிராப்பள்ளி, இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள மிகவும் பழமை பெற்ற தொன்மை வாய்ந்த மாநகரமாகும். இது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் தலைநகர் ஆகும். இது தமிழ்நாட்டின் பெருநகரங்களுள் ஒன்றாகும். இந்நகரம் தமிழ்நாட்டின் பரப்பளவு அடிப்படையில் மூன்றாவது பெரிய மாநகரமும் மக்கள் தொகை அடிப்படையில் நான்காவது பெரிய மாநகரமும் ஆகும். இது உள்ளாட்சி அமைப்பில் மாநகராட்சி எனும் தகுதி பெற்றது. காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி சங்க காலத்தில் முற்கால சோழர்களின் தலைநகரமாகவும், தற்போதைய தமிழகத்தின் முக்கியமான நான்காவது பெரிய நகரமாகவும் உள்ளது. இதைப் பொதுவாகத் திருச்சி (Trichy) என்று சுருக்கமாக அழைக்கிறார்கள். திருச்சிராப்பள்ளி என்பதன் பொருளானது, திரு - சிராய் - பள்ளி, அதாவது சிராய் பள்ளி கொண்ட இடம். பிரசித்தி பெற்ற மலைக் கோட்டை இந்தப் பாறையின் மேல் பகுதியில் இந்தியாவில் எவ்விடத்திலும் இல்லாத இந்து சமயத்தின் முழு முதற் கடவுளான விநாயகப் பெருமானுக்கு உச்சிப் பிள்ளையார் என்ற பெயரில் தனிக்கோயில் அமைந்துள்ளது. இந்தியாவின் தூய்மையான 10 நகரங்களில், திருச்சியும் ஒன்றாகும். முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் (1980–1984) ஆட்சி காலத்தில் அரசியல் தலைமையிடமாக திருச்சிராப்பள்ளியை தமிழ்நாட்டின் தலைநகரமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவரது மறைவிற்குப் பிறகு அத்திட்டம் நிறைவேற்ற முடியவில்லை. ஆனால் இன்றளவும் திருச்சியைத் தமிழ்நாட்டின் இரண்டாவது தலைநகராக்க தகுதி உடைய நகரமாக மாற்ற கோரிக்கை மக்கள் மத்தியில் ஓர் ஏக்கமாகவே காணமுடிகிறது.


