திருமலை நாயக்கர் அரண்மனை
இந்தியாவின், தமிழ்நாட்டில், மதுரை நகரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அரண்மனை.திருமலை நாயக்கர் அரண்மனை அல்லது திருமலை நாயக்கர் மகால் என அழைக்கப்படும் அரண்மனை, மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களில் ஒருவரான திருமலை நாயக்கரால் பொ.ஊ. 1636 ஆம் ஆண்டில் கட்டுவிக்கப்பட்டது. மதுரையில் அமைந்துள்ள இக் கட்டிடம், புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து, சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில், தென்கிழக்குத் திசையில் அமைந்துள்ளது. இத்தாலியக் கட்டிடக் கலைஞர் ஒருவரால் இந்தோ சரசனிக் பாணி கட்டிட கலைநயத்தில் வடிவமைக்கப்பட்டதாகக் கருதப்படும் இக்கட்டிடத்தின் நான்கில் ஒரு பகுதியே, தற்போது எஞ்சியுள்ளதாகக் கருதப்படுகின்றது. பிரித்தானிய இந்தியாவின் சென்னை ஆளுநர், பிரான்சிஸ் நேப்பியர் பொ.ஊ. 1872-இல் இவ்வரண்மனையைப் புதுப்பித்தார். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை பராமரிக்கும் மூன்று அரண்மனைகளில், இந்த அரண்மனையும் ஒன்றாகும். இவ்வரண்மனையின் நீட்சியாக, பத்துத் தூண் பகுதி இருந்தது.



