மனித உடல்
From Wikipedia, the free encyclopedia
உயிரியலில் மனித உடல் (human body) என்பது மனிதனின் முழுமையான கட்டமைப்பாகும். இது பல்வேறுபட்ட உயிரணுக்களையும், ஒரே வகை உயிரணுக்கள் இணைந்து உருவாகும் இழையங்களையும், இழையங்களின் கூட்டால் உருவாகும் உடல் உறுப்புக்களையும், உறுப்புக்கள் இணைந்து உருவாக்கும் மண்டலம் அல்லது தொகுதிகளையும் உள்ளடக்கியதாக இருக்கும். இவை அனைத்தும் இணைந்து செயற்படுவதன் மூலம், மனிதனில் உயிர் இருப்பதுடன், ஒருசீர்த்திடநிலையும் பேணப்படும்.
மனித உடல் | |
---|---|
விளக்கங்கள் | |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | corpus humanum |
MeSH | D018594 |
TA98 | A01.0.00.000 |
TA2 | 96 |
FMA | 20394 |
உடற்கூற்றியல் |
மனிதனில் வெளிப்புறமான அமைப்பை தலை, கழுத்து, மார்பு, வயிறு என்ற பகுதிகளாகப் பிரிக்கலாம். அத்துடன் கைகள், கால்கள் போன்ற அங்கங்களும் இணைந்தே மனித உடலை உருவாக்கும். இப்பகுதிகளின் உட்புறமாகக் காணப்படும் பல்வேறுபட்ட உள்ளுறுப்புக்களும் இணைந்தே உடலை இயங்கச் செய்கிறது.
புறவணியிழையம், தசையிழையம், நரம்பிழையம் மற்றும் குருதி, எலும்பு போன்ற இணைப்பிழையம் ஆகியவற்றை உள்ளடக்கிய இழையங்கள் இணைந்தே பல உள்ளுறுப்புக்களை உருவாக்குகிறது.[1] வேறுபட்ட இழையங்கள், குறிப்பிட்ட ஒரு தொழிலைச் செய்வதற்காக இணைந்து உறுப்புக்களை உருவாக்கும். ஒவ்வொரு உறுப்புக்களிலும், பொதுவாக இழையங்கள் முதன்மையான இழையம், இடையிட்ட இழையம் என இரு வகையாகக் காணப்படுகின்றன. குறிப்பிட்ட உறுப்பிற்கெனத் தனித்துவமான இழையம் முதன்மை இழையமாகும். எடுத்துக்காட்டாக, இதயத்தின் முதன்மை இழையம் இதயத்தசை ஆகும். இதயத்தில் காணப்படும் இரத்தம், நரம்பு முதலியன இடையிட்ட இழையங்களாகும்.
உடலில் குறிப்பிட்ட ஒரு தொழிலைச் செய்வதற்காக பல உள்ளுறுப்புக்கள் இணைந்து ஒரு தொகுதியாகச் செயற்படும். இவை மனித உடல் தொகுதிகள் எனப்படுகின்றன.[2][3]
மனித உடல் பற்றிய படிப்பில் உடற்கூற்றியல், உடலியங்கியல், இழையவியல், முளையவியல் என்பன அடங்குகின்றன.