உடுக்கை
இசைக் கருவி / From Wikipedia, the free encyclopedia
உடுக்கை (ஆங்கிலப்பெயர்கள்:Udukai, Udukku) என்பது பல்வேறு தமிழக நாட்டுப்புறச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் கிராமிய இசைக் கருவிகளில் ஒன்றாகும். கிராமப்புற கோயில்களிலும் முக்கியமாக மாரியம்மன் கோவில் சமயச் சடங்குகளிலும் இது ஒலிக்கப்படும். தோல் இசைக்கருவியான இதைக் கைகளைக் கொண்டு இசைக்கலாம். உலோகத்தால் அல்லது மரத்தால் செய்யப்பட்ட இரு பக்கங்களும் விரிந்து இடை சிறுத்துப் பருத்திருப்பதால் இதை இடை சுருங்கு பறை என்றும் துடி என்றும் அழைப்பர். கரகம் ஆடும் போதும், பஜனைகளின் போதும், பூசாரியை உருவேற்றுவதற்காகவும் இது முழக்கப்படுவதுண்டு.
இது ஒரு இந்திய பாரம்பரிய தாள இசைக் கருவி ஆகும். இது, தமிழ்நாட்டில், தோன்றியதாக கருதப்படுகிறது. இது, முறையே தமிழ்நாடு, கேரளா மற்றும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பிரபலமாக பயன்படுத்தப்படுகிறது. டமாரம் மற்றும் இடக்கை போன்ற தாள இசைக் கருவிகள் உடுக்கையை ஒத்ததாக உள்ளது. ஆனால் அளவில் வேறுபடுகிறது.