ஒத்தமை நற்செய்தி நூல்கள்
From Wikipedia, the free encyclopedia
இயேசு பற்றிய வரலாற்றை வழங்குவது ஒரு நூல் மட்டுமல்ல, நான்கு நூல்கள் என்னும்போது ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது. அதாவது, அந்த நான்கு நூல்களும் ஒரே வரலாற்றை நான்கு வேறுபட்ட விதங்களில் எடுத்துக் கூறுகின்றனவா அல்லது ஒரே விதத்தில்தான் கூறுகின்றனவா? ஒரே விதத்தில்தான் கூறுகின்றன என்றால் நான்கு நூல்கள் தேவையா? வேறுபட்ட விதத்தில் கூறுகின்றன என்றால் அந்த வேறுபாடுகளைத் தம்முள் இசைவிப்பது எப்படி?
புதிய ஏற்பாட்டில் காணப்படும் முதல் நான்கு நூல்களாகிய நற்செய்தி நூல்கள் முறையே மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்பவர்களால் வடிவமைக்கப்பட்டன என்பது மரபுவழி வரும் செய்தி. இந்த நான்கு நூல்களும்தான் இயேசுவின் வாழ்க்கை, போதனை, செயல்பாடு, துன்பங்கள், சாவு ஆகியவை பற்றியும் அவர் சாவினின்று உயிர்பெற்றெழுந்தது பற்றியும் நமக்குத் தகவல் தருகின்ற அடிப்படை ஆதாரங்கள்.