ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்
From Wikipedia, the free encyclopedia
ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் என்பது இரு நாட்டு துடுப்பாட்ட அணிகளுக்கிடையே வரையிட்ட நிறைவுகள் கொண்டதாக விளையாடப்படும் துடுப்பாட்ட வகையாகும். இது வரையிட்ட நிறைவுப் போட்டி எனவும் அழைக்கப்படுவதுண்டு. காலநிலை கோளாறு காரணமாக போட்டிகள் தடைப்பட்டு போட்டி ஒரே நாளில் முடிவுறாமல் போகும் நிலையைத் தவிர்ப்பதற்காக ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகளின் போது மேலதிக நாள் ஒதுக்கப்படும்.
ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் இருபதாம் நூற்றாண்டின் கடைசிப்பகுதியில் வளர்ச்சி பெற்றது. 1971 ஆம் ஆண்டு ஆத்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான தேர்வுத் துடுப்பாட்டத் தொடரின் மூன்றாவது போட்டியின் முதல் மூன்று நாட்கள் மழை காரணமாகத் தடைப்படவே, போட்டியைக் கைவிட நடுவர்களால் தீர்மானிக்கப்பட்டபோது குழுமியிருந்த பார்வையாளருக்காக 40 நிறைவுகளுடன் ஒருநாள் போட்டியொன்றை விளையாட இரண்டு அணிகளும் தீர்மானித்தன. இதன்படி முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட போட்டி ஜனவரி 5 1971அன்று ஆத்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே மெல்போன் துடுப்பாட்ட மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆத்திரேலியா 5 இழப்புகளால் வெற்றிபெற்றது. 1970களில் ஆத்திரேலியப் பதிப்பாளர் கேரி பார்கர் என்பவர் உலகத் தொடர் ஒன்றை ஆரம்பித்தார். இதில் வண்ணச் சீருடைகள், வெள்ளைப் பந்து, செயற்கை ஒளி, இலக்கு ஒலிவாங்கி போன்ற இன்றைய ஒருநாள் போட்டிகளில் உள்ள பல்வேறு அம்சங்களை அறிமுகப்படுத்தினார்.