செவி
ஒலி உணரும் உறுப்பு / From Wikipedia, the free encyclopedia
காது அல்லது செவி (Ear) என்பது ஒரு புலனுறுப்பு ஆகும். இது இரு முக்கிய ஆனால் வேறுபட்ட புலன்களை நமக்கு அளிக்கிறது. அவை கேட்டல், சமநிலைப் படுத்துதல் என்பவையாகும். செவிகளால் உணரப்படும் ஒலி நமது சுற்றுப்புறத்தைக் குறித்த தகவல்களை நமக்கு அளிக்கிறது. நாம் அதனுடன் தொடர்பு கொள்ள உதவுகிறது. நாம் கீழே விழாமல் நிமிர்ந்த நிலையில் நிற்பதற்கு தேவையான சமநிலையை காதுகள் நமக்கு அளிக்கின்றன.
பாலூட்டிகளின் காது பொதுவாக மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை புறச்செவி, நடுச்செவி, உட்செவி என்பனவாகும். புறச்செவியானது செவிமடல், புறச்செவி குழாய் என்ற இரு பகுதிகளால் ஆக்கப்பட்டு பார்க்கக்கூடிய வகையில் வெளிப்புறமாக அமைந்துள்ளது[1]. காது என்ற சொல் பெரும்பாலும் வெளிப்புறமாகத் தெரியும் புறச்செவியையே குறிப்பதாகக் கருதப்படுகிறது. செவிப்பறை குழி மற்றும் மூன்று செவிக் குருத்தெலும்புகளால் நடுச்செவி ஆக்கப்பட்டுள்ளது. எலும்புச்சிக்கல் வழியில் உட்செவி அமைந்துள்ளது. பல முக்கியமான உணர்வுகளுக்குக் காரணமான கட்டமைப்புகள் இங்குதான் உள்ளன. நகர்ந்து செல்லும்போது அரைவட்டக் குழாய்கள் சமநிலையையும் கண்களைத் தொடரவும் செய்கின்றன. நிலையாக ஓரிடத்தில் நிற்கையில் காற்றுப் பைகளும், உணர்வு செல் படுகையும் சமநிலையைக் காக்கின்றன. செவிக்குழாய் திரவமான காக்லியா கேட்கும் தன்மையையும் அளிக்கின்றது.
முதுகெலும்புள்ள விலங்குகளின் காதுகள் அவற்றின் தலையின் இருபுறத்திலும் சற்றே சமச்சீர் நிலையில் அமைந்துள்ளன. இவ்வமைப்பு ஒலி பரவலை ஓரிடத்தில் சேர்ப்பதற்கான ஓர் ஏற்பாடு ஆகும். ஆரம்ப வளர் கருவில் வளர்ந்த சிறிய ஆறு மூலத் தடிப்புகள் மற்றும் தொண்டைப்பையிலிருந்து காது தொடங்குகிறது. இவை புறத்தோற் படையிலிருந்து உருவானவையாகும்.
காதுகளில் ஏற்படும் குறைபாடுகளினால் காது கேளாமை அல்லது செவிடாகும் நிலை ஏற்படும். நோய்த்தொற்று, தலைக்காயம், வெடிச்சத்தம், கனத்த சத்தம் கேட்டல் ஆகியவற்றால் காது நோய்கள் ஏற்படும். புறச்செவி அல்லது நடுச்செவியில் கோளாறு ஏற்பட்டால் கடத்தல் குறைபாடு உண்டாகி கேளாத்தன்மை ஏற்படும். காக்லியாவில் உள்ள சிறிய மயிரிழை செல்கள் பாதிக்கப்படுவதால் உணர்தல் வகை கேளாத்தன்மை உண்டாகும். காக்லியாவிற்கும் மூளைக்கும் உள்ள தொடர்பில் ஏதேனும் பிரச்சினை என்றால் உணர்நரம்பியல் காது கேளாத்தன்மை ஏற்படுகிறது. காது நோய்களால் செரிமான இழப்பு, காது இரைச்சல், மற்றும் சமநிலைச் சீர்குலைவால் மயக்கம் போன்ற பாதிப்புகள் உண்டாகலாம். மூளையும் நரம்பியல் பாதைகளில் பாதிப்பும் ஏற்படலாம்.
பல நூற்றாண்டுகளாகக் காதுகள் கலாச்சாரங்களுக்காக காதணிகள் மற்றும் பிற நகைகளால் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக அறுவை சிகிச்சை மூலம் சில பல திருத்தங்களுக்கும் இவை உட்படுகின்றன.