காந்தம்
From Wikipedia, the free encyclopedia
காந்தம் (magnet) (கிரேக்கம் μαγνήτις λίθος magnḗtis líthos, "மகனீசியக்கல்" என்பது காந்தப் புலத்தை உருவாக்கும் பொருளாகும். இந்தக் காந்தப் புலம் கண்ணுக்குப் புலப்படாவிட்டாலும் காந்தத்தின் குறிப்பிடத்தகுந்த இயல்பான காந்த விசைக்குப் பொறுப்பாகிறது: காந்தவிசை இரும்பைப் போன்ற இரும்பியல் காந்தப் பொருள்களை இழுக்கிறது.மேலும், மற்ற காந்தங்களை ஈர்க்கிறது அல்லது விலக்குகிறது.
நிலைக்காந்தம் (permanent magnet) என்பது காந்தமுற்று நிலையான காந்தப் புலத்தை தரவல்ல பொருளால் செய்ததாகும். அன்றாட வாழ்க்கை எடுத்துகாட்டாக, உறைபதனக் காந்தத்தைக் கூறலாம். இது உறைபதனியின் கதவில் குறிப்புகளைப் பிடித்துவைக்க உதவுகிறது. சிலவகைப் பொருள்களுக்குக் காந்தமேற்றினால் அவை காந்தங்களை ஈர்க்கும். இத்தகைய பொருள்கள் இரும்பியல் காந்தப் பொருள்கல் அல்லது இரும்பயல் காந்தப் பொருள்கள் என வழங்கப்படுகின்றன. இவற்றில் இரும்பு, நிக்கல், கோபால்ட் ஆகியனவும் அருமண் தனிமங்களின் பொன்மக் கலவைகளும் காந்தக்கல் போன்ற சில இயற்கை கனிமப் பொருள்களும் அடங்கும். காந்தப் பொருள்களாக வழக்கில் கருதப்பட்ம் அளவுக்கு இரும்பியல் பொருள்களும் இரும்பயல் பொருள்களும் மட்டுமே காந்தங்களோடு வலிவோடு ஈர்த்தாலும் காந்தப் புலத்தால் மெலிவாக ஈர்க்கப்படும் பல பிற பொருள்களும் காந்த ஈர்ப்பு வகைமைகளும் இயற்கையில் நிலவுகின்றன.
இரும்பியல் காந்தங்களை மென்வகையாகவும் வன்வகையாகவும் இரண்டாகப் பிரிக்கலாம். மென்வகையைக் காந்தமேற்றினால் காந்தமாகும். ஆனால் அதில் காந்த இயல்பு நிலைத்திருக்காது. பதனாற்றிய இரும்பு இவ்வகைக்கு எடுத்துகாட்டாகும். வன்வகையைக் காந்தமேற்றினால் அதை காந்த இயல்பு நிலைத்திருக்கும். நிலைக்காந்தங்கள் வன்காந்தப் பொருள்களால் செய்யப்படுகின்றன. இதற்கு அல்நிக்கோவும், பெர்ரைட் எனும் இரும்பகிகளும் பயன்படுகின்றன. நிலைக்காந்தங்களைச் செய்யும்போது வலிய காந்தப்புலங்களுக்கு ஆட்படுத்தி, அவற்றின் அகப் படிகக் கட்டமைப்பு திசையொருங்க வைக்கப்படுகிறது.[சான்று தேவை] எனவே இவற்றைக் காந்தமிறக்கம் செய்தல் அரிதாகும். நிறைவுற்ற காந்த்த்தைக் காந்தமிறக்கம் செய்ய போதுமான அளவு காந்தப் புலம் தேவைப்படுகிறது. இந்த வாயில் காந்தப் புல அளவு, அந்தப் பொருளின் முரண்மை (Coercivity) அல்லது முரண்திறம் எனப்படுகிறது. வன்காந்தங்கள் உயர்முரண்மை கொண்டவை. மென்காந்தங்கள் தாழ்முரண்மை கொண்டுள்ளன.
மின்காந்தம் கம்பிச் சுருளால் செய்யப்படுகிறது. இதில் மின்னோட்டம் பாயும்போது காந்தம் போலச் செயல்படுகிறது. மின்னோட்டம் நின்றுவிட்டால் காந்த இயல்பை இழந்துவிடுகிறது. வழக்கமாக இந்தக் கம்பிச் சுருள் எஃகைப் போன்ற மென்வகை இரும்பியல்காந்த அகட்டிம் மீதுசுற்றப்படுகிறது. இந்த எஃகு சுருள் விளைவிக்கும் காந்தப் புலத்தை மிகவும் செறிவாக்குகிறது
காந்தத்தின் ஒட்டுமொத்த வலிமை அதன் காந்த்த் திருப்புமையால் அளக்கப்படுகிறது அல்லது அது உருவாக்கும் காந்தப் பெருக்கால் (பாயத்தால்) அளக்கப்படுகிறது. காந்த்த்தின் கல வலிமை அதன் காந்தமாக்கத்தால் அளக்கப்படுகிறது.