From Wikipedia, the free encyclopedia
கோத்ரா தொடருந்து எரிப்பு (Godhra train burning) இந்திய மாநிலம் குசராத்தில் கோத்ரா ஊரில் 2002ஆம் ஆண்டு தொடருந்து நிலையத்தில் நின்றிருந்த பயணிகள் தொடருந்து வண்டியின் பயணர்பெட்டி ஒன்று இசுலாமிய[சான்று தேவை] கலகக்காரக் கூட்டத்தால் தீயிடப்பட்ட நிகழ்வைக் குறிப்பதாகும். அயோத்திவிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த 59 இந்து பயணிகள் இறந்த இந்நிகழ்வு 790 இசுலாமியரும் 254 இந்துக்களும் பரந்தளவில் கொல்லப்பட்ட குசராத் வன்முறைக்குத் தூண்டுதலாக அமைந்தது.[1][2][3] துவக்கத்தில் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் திட்டமிடப்படாத கூட்ட வன்முறை என்று விவரிக்கப்பட்டிருந்தது. ஆயினும் குசராத் காவல்படையின் சிறப்பு புலனாய்வுக் குழுவால் இது இசுலாமிய குழுவொன்று 140 லிட்டர் பெட்ரோலை நிகழ்நாளுக்கு முந்தைய நாளே சேகரித்து வைத்து,[4] "கரசேவகர்களை" கொல்லத் திட்டமிட்ட சதி எனக் கண்டறிந்து வழக்காடியது.
இக்கட்டுரையில் பிழையான தகவல்கள் இருக்கக்கூடும் என்பதால், இக்கட்டுரையை கவனித்து சீர் செய்யவும். விக்கிப்பீடியர் ஒருவர், தகவற் பிழைகள் இருக்கக்கூடிய கட்டுரைகளில் ஒன்றாக இக்கட்டுரையை கருதுகிறார். இக்கட்டுரையில் உள்ள பிழைகளை களைந்து, சீர் செய்வதைப் பற்றி இதன் பேச்சுப்பக்கத்தில் கலந்துரையாடலாம். |
கோத்ரா தொடருந்து எரிப்பு | |
---|---|
தேதி | 27 பெப்ரவரி 2002 7h43 – (UTC+5 ½) |
அமைவிடம் | கோத்ரா புகைவண்டி நிலையம் |
உயிரிழப்புகள் | |
இறப்பு(கள்) | 59 |
காயமுற்றோர் | 48 |
லாலுபிரசாத் தலைமையில் தொடருந்து அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு ஒன்று 2005ஆம் ஆண்டு இந்த எரிப்பு ஒரு தீ விபத்தே எனக் கூறியது.[5][6]; ஆயினும் இவ்வாணைக்குழு அமைக்கப்பட்டதையே குசராத் உயர்நீதிமன்றம் "சட்டம் மற்றும் அரசியலமைப்பிற்குப் புறம்பானது" எனத் தள்ளுபடி செய்தது. அதன்படி இக்குழுவின் எந்த முடிவும் செல்லுபடியாகாது. பயங்கரவாதச் செயல்களைத் தடை செய்யும் சட்டம் (பொடா)வின் கீழ் 2005ஆம் ஆண்டு குற்றங்களை ஆய்வு செய்த மற்றொரு சட்டம்சார் குழு இந்நிகழ்வுகள் பெரும்பாலும் முசுலிம் கூட்டத்தினரால் திட்டமிடப்படாது தன்னிச்சையாக நடந்திருக்கக் கூடும் எனக் கருதியது.[7] மாநில அரசால் நியமிக்கப்பட்ட மற்றொரு ஆணைக்குழு 2008ஆம் ஆண்டு சிறப்பு புலானாய்வுக் குழுவின் முதன்மை கூற்றின்படியே சதியொன்று தீட்டப்பட்டதாக நிறுவியது.[8] இது குறித்த விசாரணைகளின் முடிவில் நீதிமன்றம் பெப்ரவரி 2011இல் இந்நிகழ்வு ஒரு திட்டமிடப்பட்ட நாசவேலை என்றும் 31 நபர்கள் குற்றவாளிகள் என்றும் தீர்ப்பு வழங்கியது.[9]
கோத்ராவில் மதக் கலவரங்கள் முன்னதாக நடந்துளது. 1981 வரை நடைபெற்றுள்ள பெரும் மதக்கலவரங்களைக் குறித்து அஸ்கர் அலி எஞ்சினியர் ஆவணப்படுத்தியுள்ளார்.[10]
கோத்ராவிலுள்ள பெரும்பாலான முசுலிம்கள் எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் வறிய காஞ்சி இனத்தைச் சேர்ந்தவர்கள். இந்தியப் பிரிவினையின்போது இவர்கள் முசுலிம் லீக்கை ஆதரித்தனர்.[10] அந்நேரத்தில் பாக்கித்தானிலிருந்து சிந்திமொழி பேசும் இந்துக்கள் இங்கு புலம் பெயர்ந்து காஞ்சி முசுலிம்களின் அண்மையில் குடியேறினர்.
இந்த இரு பிரிவினரிடையே சண்டைகளும் கலவரங்களும் நடந்து வந்துள்ளன:
1948, 1953-55, மற்றும் 1985 ஆண்டுகளில் கலவரத்தை அடக்க இந்திய இராணுவம் அழைக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் இந்துக்களும் முசுலிம்களும் ஒருவருக்கொருவர் எதிராக வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். 1965 மற்றும் 1980-81 ஆண்டுகளில் நடந்த கலவரங்களில் முசுலிம் ஆண்கள் கொல்லப்பட்டும் முசுலிம் பெண்கள் பாலியல் வன்புணர்ந்தும் சீரழிக்கப்பட்டுள்ளனர். இதன் எதிரொலியாக 1980ஆம் ஆண்டில் ஐந்து பேரடங்கிய சிந்திக் குடும்பம் ஒன்று காஞ்சி முசுலிம்களால் கொளுத்தப்பட்டனர்.[10][11] இந்த வன்முறைகளில் சில இருப்புப்பாதைகளை அடுத்த சிக்னல் ஃபாடியா இடத்தில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தெகல்கா இதழ் ஆய்வின்படி, இத்தீயிடல் கூட்டத்தில் ஒருவரால் செய்யப்பட்டதாகவும் ஆனால் இது முன்கூட்டியே திட்டமிடப்படவில்லை எனவும் புது முடிவு ஒன்றைத் தருகிறது.[12] நேரில் பார்த்த சாட்சிகள் மற்றும் அறிவித்தல்களையும் ஆழ்ந்து ஆய்வுசெய்தபின்னர் பயணர் பெட்டி S-6 நெருப்பூட்டப்பட்டது ஓர் தன்னிச்சையான காலித்தனச்செயலின் தூண்டலால் கட்டுப்பாட்டை மீறி நடந்தேறிய இழிசெயல் என்பது தெளிவாகிறது. கரசேவகர்களின் மீது இருந்த வெறுப்புணர்ச்சியால், உணர்ச்சிவயப்பட்டு தொடருந்து மீது கல்லெறியத் தொடங்கிய கூட்டம், பலமும் எண்ணிக்கையும் கூடிய நிலையில், எரியூட்டப்பட்ட கந்தல்களை பயணபெட்டிக்குள் எறிந்து தீயிட்டனர்.
22 பெப்ரவரி 2011 அன்று சிறப்பு நீதிமன்றம் 31 நபர்களை இத்தீயிடல் குற்றம் புரிந்ததாக தீர்ப்பு வழங்கியது. குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களில் கோத்ரா காங்கிரசு கவுன்சிலர் ஹாஜி பில்லா மற்றும் ரஜக் குர்குர் ஆகியோரும் உள்ளனர்.[13] இந்தக் குற்றவாளிகளுக்கான தண்டனை குறித்தான வழக்காடல் 25 பெப்ரவரி 2011 அன்று துவங்கியது. நீதிமன்ற தீர்ப்பு நானாவதி அறிக்கையை நிலைநாட்டி இந்நிகழ்வு ஓர் திட்டமிடப்பட்ட சதி என்று தீர்ப்பு வழங்கியது.[13] சிறப்பு அரசுத்துறை வழக்கறிஞர் தீர்ப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்.[14]
இத்தீர்ப்பு வழங்கப்பட்டதை ஒட்டி குசராத் எங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.[14] 2011 ஆம் ஆண்டில் மார்ச்சு 1 அன்று வெளியான தண்டனையில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட 11 பேருக்கு மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் 20 பேர் ஆயுள் தண்டனை பெற்றனர்.[15]
இதைத் தொடர்ந்த வன்முறைகளை மையப்படுத்தி இரு திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. முதலாவதானது ஆவணப்படமான ஃபைனல் சொலுஷன்ஸ் . மற்றொன்று பார்சி சிறுவனொருவன் இந்த கலவரங்களின்போது காணாமல் போனதாக புனையப்பட்ட பாலிவுட் திரைப்படம் பர்சானியா.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.