சுப்பிரமணிய பாரதி
கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி / From Wikipedia, the free encyclopedia
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, 11 திசம்பர் 1882 – 11 செப்டம்பர் 1921) ஓர் கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். கவிதையில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு "பாரதி" என்ற பட்டம் வழங்கப்பட்டது. நவீன தமிழ் கவிஞர்களின் முன்னோடியாகத் திகழ்ந்த இவர், தமிழ் மொழியில் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் "மகாகவி" ("மகத்தான கவிஞர்") என்ற புனைபெயரைக் கொண்டு அறியப்படுகிறார். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது தேசபக்தியைத் தூண்டும் பாடல்கள் இவரது படைப்புகளில் அடங்கும். பெண் விடுதலைக்காகவும், சாதி மறுப்பு மற்றும் குழந்தைத் திருமணத்திற்கு எதிராகவும் போராடினார்.
மகாகவி சி. சுப்பிரமணிய பாரதி பாரதியார் | |
---|---|
சுப்பிரமணிய பாரதி | |
பிறப்பு | சுப்பிரமணியன் (1882-12-11)திசம்பர் 11, 1882 எட்டயபுரம், திருநெல்வேலி மாவட்டம், பிரித்தானிய இந்தியா (தற்போதைய தூத்துக்குடி மாவட்டம், இந்தியா) |
இறப்பு | செப்டம்பர் 11, 1921(1921-09-11) (அகவை 38) சென்னை, பிரித்தானிய இந்தியா |
இருப்பிடம் | திருவல்லிக்கேணி, சென்னை |
தேசியம் | இந்தியர் |
மற்ற பெயர்கள் | மகாகவி, பாரதியார், வீர கவி, சுப்பையா, முண்டாசுக் கவிஞன், சக்தி தாசன் |
பணி | செய்தியாளர் |
அறியப்படுவது | கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி |
குறிப்பிடத்தக்க படைப்புகள் |
|
பின்பற்றுவோர் | பாரதிதாசன் |
அரசியல் இயக்கம் | இந்திய விடுதலை இயக்கம் |
சமயம் | இந்து சமயம் |
பெற்றோர் | சின்னசாமி ஐயர் இலக்குமி அம்மாள் |
வாழ்க்கைத் துணை | செல்லம்மாள் |
பிள்ளைகள் | தங்கம்மாள் (பி: 1904) சகுந்தலா (பி: 1908) |
கையொப்பம் |
1882 இல் திருநெல்வேலி மாவட்டம் (இன்றைய தூத்துக்குடி) எட்டயபுரத்தில் பிறந்த பாரதி, தனது ஆரம்பக் கல்வியை திருநெல்வேலி மற்றும் வாரணாசி ஆகிய இடங்களில் பயின்றார். இவர் சுதேசமித்திரன், தி இந்து, பால பாரதா, விஜயா, சக்ரவர்த்தினி, மற்றும் இந்தியா உள்ளிட்ட பல இதழ்கள் மற்றும் செய்தித்தாள்களில் எழுதி வந்தார். பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாப்பா பாட்டு, பதஞ்சலி யோகசூத்திரம் (தமிழ் மொழிபெயர்ப்பு), பகவத் கீதை (தமிழ் மொழிபெயர்ப்பு), சின்னஞ்சிறு கிளியே, விநாயகர் நான்மணிமாலை, விடுதலை பாடல்கள் மற்றும் புதிய ஆத்திசூடி உள்ளிட்ட பல நூல்கள் மற்றும் பாடல்களை இயற்றியுள்ளார். இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமை ஆக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும்.
1908 ஆம் ஆண்டில், பிரித்தானிய அரசாங்கம் பாரதியைக் கைது செய்ய ஆணை பிறப்பித்ததால், இவர் பிரெஞ்சு கட்டுப்பாட்டில் இருந்த பாண்டிச்சேரியில் 1918 வரை ஏறத்தாழ பத்து ஆண்டுகள் வாழ்ந்தார். இவர் தினமும் உணவளிக்கும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் யானையானயால் தாக்கப்பட்ட பிறகு உடல் நலம் குன்றிய இவர், சில மாதங்களுக்குப் பிறகு 1921 செப்டம்பர் 11 அன்று அதிகாலை இறந்தார்.
இவர் விவேகானந்தரின் சீடரான, சகோதரி நிவேதிதையைத் தமது குருவாகக் கருதினார்.பல மொழிகளில் புலமை பெற்ற பாரதி தமிழ் மொழியின் மீது தீர பற்றுக் கொண்டிருந்தார். இவரது படைப்புகள் அரசியல், சமூக மற்றும் ஆன்மீகக் கருப்பொருள்களை உள்ளடக்கியதாக விளங்கின. பாரதி இயற்றிய பாடல்கள் மற்றும் கவிதைகள் தமிழின் இலக்கியம், இசை மற்றும் அன்றாட வாழ்க்கையில் பெருவாரியாகப் பயன்படுத்தப்படுகின்றன.