தேங்காய்
தென்னைமரத்தின் பழம் ஆகும் / From Wikipedia, the free encyclopedia
தேங்காய் என்பது தென்னைமரத்தின் பழம் ஆகும். இதனைத் தெங்கம் பழம் என்றும் கூறுவதுண்டு. இது கெட்டியாக இருப்பதால், பழமாக இருப்பினும், வழக்கத்தில் காய் என்றே அழைக்கப்படுகின்றது. தென்னை மரம் தெற்கில் இருந்து வருவதால், அதன் பழம் ("காய்"), தெங்கு + "காய்" = தேங்காய் (நன்னூல்.187) என அழைக்கப்படுகின்றது. தேங்காயின் புறத்தே பச்சையாக இருப்பினும் பழுப்பு நிறத்தில் அடர்த்தியாக நார்கள் உள்ளே இருக்கும். இந்த நார்களை உரித்தால் உள்ளே மண்பழுப்பு நிறத்தில் மிகக்கெட்டியான ஓட்டுடன், ஒரு பெரிய கொட்டை போல் இருப்பதுதான் தேங்காய். அந்தத் தேங்காய்க்குள் தேங்காய்நீர் இருப்பதை ஆட்டிப் பார்த்தால் உணரலாம். அளவாக முற்றிய தேங்காயை நெற்று என்பர். அந்தக் கெட்டியான ஓட்டை உடைத்தால் உள்ளே வெள்ளை நிறத்தில் ஏறத்தாழ 1 செ.மீ பருமனுக்குப் பருப்பு காணப்படும். இந்தப் பருப்புதான் சமையலுக்குப் பெரிதும் பயன்படுகிறது. தேங்காய் மிக இளசாக இருந்தால் அதனுள் நிறைய தேங்காய்நீர் இருக்கும். இதனை இளநீர் என்பர். கோடை காலங்களில் வெயிலின் வெக்கையைத் தணிக்க இளநீரை அருந்துவர்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |