பேங்காக்
தாய்லாந்தின் தலைநகரம் / From Wikipedia, the free encyclopedia
பேங்காக் (Bangkok) தாய்லாந்தின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது தாய்லாந்தின் மொழியில், குருங் தேப் மஹா ந கொன் (กรุงเทพมหานคร) என வழங்கப்படுகிறது. இதில் குருங் தேப் என்ற தாய்ச் சொல்லின் பொருள், "தேவதைகளின் நகரம்" என்பதாகும். மத்திய தாய்லாந்தின் சாவோ பிரயா ஆற்றுப் படுகையில் 1,568.7 சதுர கிலோமீட்டர்கள் (605.7 sq mi) பரப்பளவில் அமைந்துள்ள பேங்காக்கில் 9 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இது தாய்லாந்தின் மக்கள்தொகையில் 12.6 விழுக்காடு ஆகும். பேங்காக் பெருநகர மண்டலம் எனப்படும் சுற்றுப்புறப் பகுதிகளையும் சேர்த்து 14 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.
பேங்காக்
กรุงเทพมหานคร | |
---|---|
பேங்காக் க்ருங் தேப் மஹா ந கொன் | |
தாய்லாந்தில் அமைவிடம் | |
நாடு | தாய்லாந்து |
தோற்றம் | அயுத்தயா இராச்சியம் |
தலைநகரம் | ஏப்ரல் 21 1782 |
அரசு | |
• வகை | சிறப்பு நிர்வாகப் பகுதி |
• ஆளுனர் | அபிராக் கொசாயொத்தின் |
பரப்பளவு | |
• நகரம் | 1,568.737 km2 (605.693 sq mi) |
• மாநகரம் | 7,761.50 km2 (2,996.73 sq mi) |
மக்கள்தொகை (2007) | |
• நகரம் | 57,14,481 |
• அடர்த்தி | 4,051/km2 (10,490/sq mi) |
• பெருநகர் | 1,00,61,726 |
• பெருநகர் அடர்த்தி | 1,296.36/km2 (3,357.6/sq mi) |
நேர வலயம் | ஒசநே+7 (தாய்லாந்து நேர வலயம்) |
Area code | 02 |
ஐஎசுஓ 3166 குறியீடு | TH-10 |
இணையதளம் | www |
15ஆம் நூற்றாண்டில் அயூத்தியா இராச்சியத்தில் சிறு வணிகத்துறையாக இருந்த பேங்காக் படிப்படியாக வளர்ச்சியுற்று இரண்டு தலைநகரங்களின் அமைவிடமாக விளங்கியது; 1768இல் தோன்புரி மற்றும் 1782இல் இரத்தனகோசின். பத்தொன்பதாம் நூற்றாண்டில் சயாம் என அழைக்கப்பட்ட தாய்லாந்தின் நவீனப்படுத்துதலின் மையமாக பேங்காக் இருந்தது. அக்காலத்தில் மேற்கத்திய தாக்கம் மிகுந்திருந்தது. இருபதாம் நூற்றாண்டில் வரையற்ற மன்னராட்சி நீக்கப்பட்டு பல புரட்சிகளை சந்தித்த தாய்லாந்தின் அரசியல் போராட்டங்களின் மையமாக பேங்காக் அமைந்திருந்தது. 1960களிலிருந்து 1980கள் வரையிலான காலத்தில் மிக விரைவான வளர்ச்சியை கண்டது. தாய்லாந்தின் அரசியல், பொருளியல், கல்வி, ஊடகம் மற்றும் நவீன சமூகம் ஆகியவற்றில் பேங்காக்கின் தாக்கம் குறிப்பிடத்தக்கதாக உள்ளது.
1980களிலும் 1990களிலும் ஏற்பட்ட ஆசிய பொருளாதார வளர்ச்சியை ஒட்டி பல பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் ஆசிய மண்டல தலைமையகங்களை பேங்காக்கில் நிறுவின. இதனால் இந்த மண்டலத்தில் பேங்காக் ஓர் முக்கிய நிதிய, வணிக விசையாக விளங்குகிறது. மேலும் பன்னாட்டுப் போக்குவரத்து மற்றும் நலத்துறை நிறுவனங்களின் அச்சுமையமாகவும் விளங்குகிறது. கலை, கவின்கலை, மனமகிழ் நிகழ்வுகளுக்கான மண்டல மையமாகவும் உருவெடுத்து வருகிறது. இங்குள்ள பரபரப்பான சாலை வாழ்க்கையும் பண்பாட்டுச் சுவடுகளும் பரவலாக அறியப்பெற்ற சிவப்பு விளக்கு மாவட்டங்களும் தனிக் கவர்ச்சியைக் கொடுத்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க மாபெரும் அரண்மனை, வாட் அருண், வாட் ஃபோ போன்ற புத்தமதக் கோவில்கள் இவற்றிலிருந்து வேறுபட்ட ஆவலைத் தூண்டுகின்றன. இவற்றால் பேங்காக் உலகின் மிகக்கூடிய சுற்றுலாப் பயணிகளை உடைய நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது. மாஸ்டர்கார்டு வெளியிடும் உலகளாவிய வருகைபெறும் நகரங்களின் பட்டியலில் இலண்டன், பாரிசை அடுத்து மூன்றாவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலாக் குறித்த உலகளாவியத் துறையிதழ் ஒன்றில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக உலகின் சிறந்த நகரமாக பெயரிடப்பட்டுள்ளது.
இன்று, தெற்கிழக்காசியாவில், மிக முக்கியமான வர்த்தக மையமாக பேங்காக் விளங்குவதோடு, பல சுற்றுலாப் பயணிகளையும் கவர்ந்துள்ள பயண நுழைவாயிலாகவும் விளங்குகின்றது. இங்கு மிகவும் உயர்ந்த செலவில் அலங்கரிப்பட்டுள்ள 400 புத்தர் கோயில்கள் காணப்படுவதோடு, ஆசியாவிலேயே மிகப் பெரியளவான விற்பனை வளாகங்களும் காணப்படுகின்றன. அத்தோடு இங்கு ஆறு பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. இங்கு காணப்படும் எண்ணிலடங்கா கால்வாய்களினால், மிதக்கும் சந்தைகள் பலதையும் உருவாக்கின்ற தளமாகவிருக்கிறது. இதனால், பேங்காக், "கிழக்கின் வெனிசு" என்று வழங்கப்படுவதுமுண்டு.
போதிய நகரமைப்பு திட்டமிடல் மற்றும் கட்டுப்பாடு இல்லாது விரைவான வளர்ந்துள்ள பேங்காக் சரியான கட்டமைப்பு அமைப்புகள் இன்றி அமைந்துள்ளது. போதிய சாலைகள் இல்லாததாலும் மிகுதியான தனியார் ஊர்திகள் பயன்பாட்டினாலும் எப்போதும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. தாய் விரைவுவழி அமைப்பு அமைக்கப்பட்டபோதும் இச்சிக்கல் இன்றும் தீரவில்லை. 1990களில் இதனால் மிகுந்த காற்று மாசடைதல் உண்டானது. இதற்கு தீர்வாக நான்கு விரைவுத் தொடருந்து வழிகள் அமைக்கப்பட்டு இயக்கத்தில் உள்ளன; மேலும் பல வழிகள் கட்டமைக்கப்பட்டும் திட்டமிடப்பட்டும் வருகின்றன.