யால தேசிய வனம்
இலங்கையிலுள்ள ஒரு தேசிய வனம் / From Wikipedia, the free encyclopedia
யால தேசிய வனம் (Yala National Park) இலங்கையிலுள்ள தேசிய வனங்களுள் ஒன்றாகும்.மிகுந்த சுற்றுலாப் பயணிகள் செல்லும், பரப்பளவில் இரண்டாவது பெரிய தேசிய வனம் இதுவே ஆகும் ஆகும். ஐந்து பிரிவுகளைக் கொண்ட இத்தேசிய வனத்தில் இரண்டு பிரிவுகளே பொதுமக்கள் பார்வைக்காகத் திறந்து விடப்பட்டுள்ளன. இக்காட்டினை அண்டியதாக வேறு சில காடுகளும் காணப்படுகின்றன. யால தேசிய வனத்தின் ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனிப் பெயர்கள் காணப்படுகின்றன. அதன் முதலாவது பிரிவு உறுகுண தேசிய வனம் எனப்படுகிறது. அதனுடன் சேர்ந்தாற் போல இருக்கும் காடு குமண தேசிய வனம் அல்லது யால கிழக்கு வனம் ஆகும்.
Yala National Park | |
---|---|
යාල ජාතික වනෝද්යානය யால தேசிய வனம் | |
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
பாத்தனன்கல, யால கடலோரப் பாறையொன்று | |
அமைவிடம் | தென் மாகாணம் மற்றும் ஊவா மாகாணம், இலங்கை |
அருகாமை நகரம் | அம்பாந்தோட்டை |
ஆள்கூறுகள் | 6°22′22″N 81°31′01″E |
பரப்பளவு | 978.807 km2 (377.919 sq mi) |
நிறுவப்பட்டது | 1900 (வனவிலங்கு சரணா) 1938 (தேசியப் பூங்கா) |
நிருவாக அமைப்பு | வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் (இலங்கை) |
வலைத்தளம் | www |
யால தேசிய வனம் இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில், அதாவது தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இருக்கிறது. இலங்கையின் தலைநகரான கொழும்பிலிருந்து 300 கிலோமீட்டர் (190 மைல்) தொலைவில் காணப்படும் இக்காடு மொத்தமாக 979 சதுர கி.மீ (378 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டது. யால தேசிய வனமும் வில்பத்து தேசிய வனமும் 1900 ஆம் ஆண்டில் வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டன. பின்னர் 1938 இல் தேசிய வனங்களாக அறிவிக்கப்பட்ட இவையிரண்டுமே இலங்கையின் புகழ்பெற்ற முதலிரண்டு தேசிய வனங்களாகும். இக்காடு இங்கு வசிக்கும் ஏராளமான வனவிலங்குகளுக்காக பெயர்பெற்றதாகும். இத்தேசிய வனம் இலங்கை யானை மற்றும் நீரியற் பறவைகளின் பாதுகாப்பில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.
யால தேசிய வனத்தைச் சூழ்ந்துள்ள பகுதிகளில் பிற தேசிய வனங்கள் ஆறும் வனவிலங்கு சரணாலயங்கள் மூன்றும் காணப்படுகின்றன. இலங்கையின் அரைகுறை வறள் வலயம் எனப்படும் காலநிலை வலயத்தினுள் அமைந்திருக்கும் இக்காடு முக்கியமாக வடகிழக்குப் பருவப் பெயர்ச்சியின் போதே மழையைப் பெறுகிறது. இவ்வனம் ஈரலிப்பான பருவப் பெயர்ச்சிக் காடுகள், நன்னீர் ஈரநிலங்கள் மற்றும் கடல்சார் ஈரநிலங்கள் போன்ற பல்வேறு வகையான சூழலியற் பகுதிகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இலங்கையின் முக்கிய பறவைகள் வாழிடங்கள் எழுபதில் இதுவும் ஒன்றாகும். யால தேசிய வனத்தில் வாழும் 215 பறவையினங்களுள் ஆறு இனங்கள் இலங்கைக்குத் தனிச் சிறப்பானவையாகும். இக்காட்டில் பதியப்பட்டுள்ள முலையூட்டி இனங்களின் எண்ணிக்கை 44 ஆகும். அதே வேளை, உலகில் சிறுத்தைகள் செறிவு மிக்க இடங்களுள் யால தேசிய வனமும் ஒன்றாகும்.
யால தேசிய வனத்தைச் சூழவுள்ள பகுதிகள் சில பழங்கால நாகரிகங்களின் களங்களாகக் காணப்பட்டுள்ளன. இத்தேசிய வனத்தினுள்ளேயே பௌத்த புனிதப் பயணத் தலங்களான சிதுல்பாகுவ மற்றும் மகுல் விகார ஆகிய இரண்டும் அமைந்துள்ளன. 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடற்கோளின் காரணமாக இத்தேசிய வனத்துக்குப் பெருஞ் சேதங்கள் விளைந்ததுடன் இதனை அண்டிய பகுதிகளில் வாழ்ந்த இருநூற்றைம்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 2009 ஆம் ஆண்டு இக்காட்டின் உட்பகுதியின் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்ட பின்னர் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு கூடியுள்ளது.