உப்பு (வேதியியல்)
From Wikipedia, the free encyclopedia
வேதியியலில் உப்பு (ஒலிப்புⓘ) (salt) என்பது ஒரு காடியும், காரமும் சேர்ந்து வேதியியல் வினைப்படும் பொழுது நடுமை அடைகையில் உருவாகும் பொருள். உப்புகள் மின்ம முனைப்படும் சேர்மங்கள் ஆகும். உப்புகளில் நேர்மின்மம் கொண்ட நேர்முனையி அல்லது கேட்டயான் (cation) பகுதியும், எதிர்மின்மம் கொண்ட எதிர்முனையி அல்லது ஆனையான் (anion) பகுதியும் கொண்ட ஆனால் மொத்தமாக மின்மம் ஏதுமற்ற, மின்மநடுநிலை கொண்ட ஒரு பொருள். பரவலாக அறிந்த, உணவில் சேர்க்கும் உப்பாகிய சோடியம் குளோரைடு (NaCl) ஓர் உப்பு. இதுபோல வேறு பல குளோரைடுகளும் கரிமமல்லா வேதிப்பொருள்களால் உருவாகும். அசிட்டேட்டு (CH3COO−) என்பன கரிம வேதியியல் வினைகளில் உருவாகும் கரிம வேதி உப்புகள்.
உப்புகளில் பல வகைகள் உள்ளன. நீரில் கரைந்திருக்கும் பொழுது மின்மக்கூறுடைய ஐதராக்சைடு (OH) உருவாக்கும் உப்புகளுக்கு கார உப்புகள் என்று பெயர். நீரில் கரைந்திருக்கும் பொழுது ஐதரோனியம் (hydronium ion, H3O+) உண்டாக்கும் உப்புகளுக்கு காடி உப்புகள் என்று பெயர். கார உப்புகளும் அல்லாமல், காடி உப்புகளும் அல்லாமல் உள்ளவற்றை நடுமை உப்புகள் என்பர். இருநிலையி அல்லது சுவிட்டரயான் (Zwitterion) எனப்பாடும் பொருட்கள் நேர்மின்ம அல்லது எதிர்மின்ம அடுப்பகுதியும் அதற்கு எதிரான மின்மம் உடைய சூழ்பகுதியும் இருந்தபொழுதும், அவை உப்புகள் எனப்படமாட்டாது. இவற்றிற்கு எடுத்துக்காட்டுகள், அமினோகாடிகளும், பெப்டைடுகளும், புரதங்களும் ஆகும்.
உப்புகள் நீரில் கரைந்திருந்தால் மின்கரைசல் எனப் பெயர் பெறும். இவை மின்சாரத்தைக் கடத்தும் பண்பு கொண்டவை. இக்கடத்தும் பண்பு உருகிய உப்புகளும் பெற்றிருக்கும். பல மின்மமுற்ற அணுக்களும், மூலக்கூறுகளும் கொண்ட கலவையான பிற சில கரைசல்களில், எடுத்துக்காட்டாக செல்கூழ்மம் (cytoplasm), குருதி, சிறுநீர், மரச்சாறு முதலானவற்றில், நீர் ஆவியாக மாறிப் பிரிந்தபின் தனியான உப்புகள் ஏதும் தங்கி நிற்காமல் இருக்கும். இவற்றில் மின்மமுற்ற அணுக்களையும் மூலக்கூறுகளையும் கொண்டு உப்புகள் வரையறை செய்யப்படுகின்றன.