சால்வடோர் அயேந்தே
From Wikipedia, the free encyclopedia
சால்வடோர் கியேர்மோ அயேந்தே (Salvador Guillermo Allende Gossens, 26 சூன் 1908 – 11 செப்டம்பர் 1973) என்பவர் சிலி நாட்டு மார்க்சிய அரசியல்வாதியும், மருத்துவரும் ஆவார். இலத்தீன் அமெரிக்க நாடொன்றில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது மார்க்சிய அரசுத்தலைவர் என இவர் அறியப்படுகிறார்.[1]
சால்வடோர் அயேந்தே Salvador Allende | |
---|---|
1970 இல் அரசுத்தலைவராக இருந்த போது. | |
சிலியின் 29வது அரசுத்தலைவர் | |
பதவியில் 4 நவம்பர் 1970 – 11 செப்டம்பர் 1973 | |
முன்னையவர் | எதுவார்டோ மொன்டால்வா |
பின்னவர் | ஆகுஸ்தோ பினொச்சே |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1908-06-26)26 சூன் 1908 வல்பெய்ரசோவ், சிலி |
இறப்பு | 11 செப்டம்பர் 1973(1973-09-11) (அகவை 65) சான் டியேகோ, சிலி |
தேசியம் | சிலி |
அரசியல் கட்சி | சமத்துவக் கட்சி |
துணைவர் | ஓர்ட்டென்சியா புசி (1914–2009) |
பிள்ளைகள் | பீட்ரிசு (1943–1977) கார்மன் பாசு (b. 1944) இசோபெல்(b. 1945) |
முன்னாள் கல்லூரி | சிலி பல்கலைக்கழகம் |
தொழில் | மருத்துவர் அரசு அதிகாரி |
கையெழுத்து | |
இணையத்தளம் | ww.fundacionsalvadorallende.cl |
ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் சிலி நாட்டின் அரசியலில் ஈடுபட்டிருந்த அலண்டே, சமத்துவக் கட்சியின் உறுப்பினராகவும், மேலவை உறுப்பினராகவும், அமைச்சரவை உறுப்பினராகவும் இருந்தவர். 1952, 1958, 1964 அரசுத்தலைவர் தேர்தல்களில் இவர் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். 1970 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று அரசுத்தலைவரானார்.
இவருடைய ஆட்சிக் காலத்தில், தொழிற்துறைகளை தேசியமயமாக்கும் கொள்கையைக் கடைப்பிடித்தார். இதனால், நாட்டில் அரசியல் குழப்ப நிலை தோன்றியது. தேர்தலில் இவருக்கு ஆதரவாக இருந்த கிறித்தவ சனநாயகவாதிகள் உட்படப் பல நடுத்தர-இடதுசாரிக் கட்சிகள் இவரது ஆட்சியை அரசியலமைப்புக்கு முரணானதெனக் கூறி, ஆட்சிக் கலைப்புக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். 1973 செப்டம்பர் 11 இல் இராணுவம் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பில் அலண்டேயின் பதவி பறிக்கப்பட்டது.[2][3] அரசுத்தலைவர் மாளிகையை இராணுவம் சுற்றி வளைத்த போதிலும், தான் பதவியைத் துறக்கப் போவதில்லை என அலண்டே சூளுரைத்தார்.[4] அதே நாளில் அவர் மர்மமான முறையில் இறந்தார்.
அலண்டே பதவியில் இருந்து அகற்றப்பட்டதை அடுத்து, இராணுவத் தலைவர் ஆகுஸ்தோ பினொச்சே ஆட்சியைக் கைப்பற்றி நாட்டை 1973 முதல் 1990 வரையில் இராணுவ ஆட்சியில் வைத்திருந்தார். சிலியின் 41 ஆண்டுகள் சனநாயக ஆட்சி இதனால் முடிவுக்கு வந்தது. அலண்டே தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக இராணுவம் அறிவித்தது. சிலியின் காங்கிரசைக் கலைத்த பினோச்சே, அலன்டேயின் ஆதரவாளர்களைக் கைது செய்து ஆயிரக்கணக்கானோரைப் படுகொலை செய்தார். அலண்டேயின் ஆட்சியில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த ஒர்லாண்டோ லாடெலியர், பிரதி அரசுத்தலைவர் கார்லோசு பிராட்சு ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.[5]