நீர் ஆற்றல்
From Wikipedia, the free encyclopedia
நீர் ஆற்றல் (Hydropower, அல்லது water power ) கீழே விழுகின்ற அல்லது விரைந்து செல்கின்ற நீரின் ஆற்றலிலிருந்து வலு பெறுவதாகும். இந்த வலுவை பல பயன்பாடுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். தொன்மைக் காலத்திலிருந்தே நீராற்றல் கொண்டு நீராலைகள் இயக்கப்பட்டு வந்துள்ளன; நீர்ப்பாசனத்திற்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றலாக பயன்பட்டுள்ளது. மாவு அரவை இயந்திரங்கள், மரமரறுக்கும் ஆலைகள், துணி ஆலைகள், சாய்வுச் சம்மட்டிகள், துறைமுக பாரந்தூக்கிகள், வீட்டு உயர்த்திகள், கனிமூல ஆலைகள் போன்ற பல இயந்திரங்கள் நீராற்றல் கொண்டு இயக்கப்பட்டுள்ளன. கீழே விழுகின்ற நீரிலிருந்து அமுக்கப்பட்ட காற்றை உற்பத்தி செய்யும் இயந்திரங்கள் தொலைவில் இருந்த மற்ற இயந்திரங்களை இயக்க பயன்படுத்தப்பட்டன.[1][2]
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் |
---|
உயிரி எரிபொருள் உயிர்த்திரள் புவிவெப்பம் நீர்மின்சாரம் சூரிய ஆற்றல் நீர்ப்பெருக்கு ஆற்றல் அலை ஆற்றல் காற்றுத் திறன் |
19ஆம் நூற்றாண்டின் இறுதிகளில் நீராற்றல் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்வது கூடுதலாயிற்று. 1878இல் நார்தம்பர்லாந்திலுள்ள கிராக்சைடு மின்நீராற்றல் நிலையமே முதலில் அமைக்கப்பட்ட நீர் மின்நிலையமாகும்.[3] முதல் வணிகமய நீர்மின்னாற்றல் நிலையம் 1879இல் நயாகரா அருவியில் திறக்கப்பட்டது. 1881இல் நயாகரா நகரின் சாலை விளக்குகள் இந்த நீர்மின்னாற்றலால் இயங்கின.
இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் நீராற்றல் என்பது தற்கால நீர் மின்னாற்றலையே குறிப்பதாக அமைந்தது. உலக வங்கி போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் நீராற்றலை பொருளியல் மேம்பாட்டின் வழிவகையாக கருதுகின்றன; சுற்றுச்சூழலுக்கு கரிமத்தின் அளவை கூட்டாத தூய்மையான வழிவகையாக குறிப்பிடுகின்றனர்.[4] ஆனால் அணைகள் கட்டுவது குறிப்பிடத்தக்க எதிர்மறை சமூக மற்றும் சூழலியல் தாக்கங்களை ஏற்படுத்தும் என ஆய்வுகள் கூறுகின்றன.[5]