1915 சிங்களவர் முசுலிம்கள் கலவரம்
From Wikipedia, the free encyclopedia
சிங்கள முசுலிம் கலவரம் என்பது 1915 இல் இலங்கையில் சிங்களவர்களுக்கும் முசுலீம்களுக்கும் இடையேயான கலவரம் ஆகும். இலங்கை வரலாற்றில் முதன் முறையாக ஏற்பட்ட அரசியல் அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்ட முதல் இனக்கலவரமாக 1915 சிங்கள-முசுலிம் இனக்கலவரமே கருதப்படுகிறது. கலவரத்தின் போது பாதிக்கப்பட்டவர்கள் சிறுபான்மையினரான முசுலிம்கள்.[1] இக் கலவரம் 1915, மே 29 ஆம் நாள் ஆரம்பமாகி 1915 சூன் 5 இல் முடிவுக்கு வந்தது. மே 29, 1915 இல் கண்டியில் பெரும்பான்மை சிங்கள பெளத்த கும்பல் ஒன்று பள்ளிவாசல் ஒன்றைத் தாக்கியதுடன், பல முசுலீம்களின் வணிக நிறுவனங்களையும் சூறையாடினர்.[2]
இக்கலவரத்தை அடக்கும் பொருட்டு அன்றைய குடியேற்றவாத பிரித்தானிய ஆட்சியாளர்கள் படைத்துறைச் சட்டத்தை அமுல்படுத்தினர். இதனைத் தொடர்ந்து பல நூறு சிங்களவர்கள் கொல்லப்பட்டனர்.
இக் கலவரத்தில் அன்றைய இலங்கைத் தமிழ் தலைவராக இருந்த பொன் இராமநாதன், சிங்களவர்களுக்கு சார்பான செயற்பாடுகளில் ஈடுபட்டார் என்றும், அதனால் தமிழ் பேசும் முசுலீம்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட ஒரு காரணமாக அமைந்தது.[3]
இக்கலவரம் பெரும்பான்மை சிங்கள இன மக்களுக்கும் சிறுபான்மையினரான முசுலிம் இன மக்களுக்கும் இடையே ஏற்பட்டது. இதுதொடர்பில் ஆங்கிலேயே அரசு தீவிரமாகச் செயற்பட்டு இடீ. எசு. சேனானாயக்கா, ஆர் இடயசு பண்டாரநாயக்கா, இடீ. எசு. விசேவர்தனா, உடொட்டர் நெயிசர் பெரேரா, ஈ. இடீ. த சில்வா, எச்சு. அமரசூரிய, ஏ. எச்சு. மொலமூறே பல சிங்களத் தலைவர்களைக் கைது செய்தது. பொன்னம்பலம் இராமநாதன் இங்கிலாந்து சென்று பேச்சுவார்த்தைகள் நடத்தி அச்சிங்களத் தலைவர்களை விடுவித்தார். இராமநாதன் நாடு திரும்பியபோது சிங்களத் தலைவர்கள் துறைமுகத்தில் அவரை வரவேற்றதோடு அவரது குதிரை வண்டியின் குதிரைகளைக் கழற்றிவிட்டுத் தாமே காலி வீதி வழியாக அவரது வீடுவரை இழுத்துச் சென்றனர்.