இதயம்
மனிதர், விலங்கு போன்ற்றற்றின் குருதியை உடல் முழுவதும் பாய்ச்சும் உறுப்பு / From Wikipedia, the free encyclopedia
இதயம் (ஒலிப்புⓘ) அல்லது இருதயம் (ஒலிப்புⓘ) அல்லது உயிர்முதல் (அதாவது உயிர் வாழ்வதற்கான முதலான ஒன்று அல்லது முதன்மையான ஒன்று) (மாற்றுச்சொற்கள்: நெஞ்சு, நெஞ்சாங்குலை ) என்பது குருதிச் சுற்றோட்டத் தொகுதி கொண்டுள்ள எல்லா உயிரினங்களிலும் காணப்படும் ஒரு நாரியத் தசையாலான ஓர் உறுப்பாகும்.[1] இதன் தொழில் தொடர்ச்சியான சீரான முறையில் சுருங்கி விரிதலின் மூலம் உடல் முழுவதும் குருதியைக் குருதிக் குழாய்களின் வழியாகச் செலுத்துவது ஆகும். இதன் மூலம் குருதி உடலுக்குத் தேவையான உயிர்வளி மற்றும் ஊட்டப் பொருட்களை வழங்கி வளர்சிதைக் கழிவுப் பொருட்களை அகற்ற உதவுகின்றது.
இதயம் | |
---|---|
மனித இதயம் | |
விளக்கங்கள் | |
அமைப்பு | சுற்றோட்டத் தொகுதி |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | cor |
கிரேக்கம் | kardía (καρδία) |
MeSH | D006321 |
TA98 | A12.1.00.001 |
TA2 | 3932 |
உடற்கூற்றியல் |
இக்கோப்பைக் கேட்பதில் பிரச்சினையா? ஊடக உதவியைப் பார்க்கவும்.
முதுகெலும்பிகளில் இதயமானது இதயத்தசை என்னும் தானே இயங்கும் வரித்தசையால் ஆனது. இது இதயத்தில் மட்டுமே காணப்படுகிறது. சராசரி ஒரு மனிதனின் இதயத்துடிப்பானது நிமிடத்திற்கு 72 அடிப்புகள் ஆகும். ஓர்
66 வயது முதிர்ந்த ஒருவருக்கு அவரது வாழ் நாளில் ஏறக்குறைய 2.5 பில்லியன் தடவை துடிக்கும். இதயம் பெண்களில் சராசரியாக 250 – 300 கிராமும் (9 – 11 அவுன்சு) ஆண்களில் 300 – 350 கிராம் (11 – 12 அவுன்சு) எடை கொண்டுள்ளது.[2]
இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு வரும் குழாய்கள் சிரைகள் அல்லது நாளங்கள் எனவும் இதயத்தில் இருந்து உடலின் மற்ற பாகங்களுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்கள் தமனிகள் அல்லது நாடிகள் எனவும் அழைக்கப்படுகின்றன. இதயமானது ஒரு பாதுகாப்புப் பையினுள் அமைந்துள்ளது, இது இதய வெளியுறைப்பை அல்லது பெரிகார்டியம் எனப்படும். இதய வெளியுறைப்பையுள் காணப்படும் நீர்மமானது இதயத்தை அதிர்ச்சிகளில் இருந்தும் இதயம் சுருங்கி விரியும் போது மற்ற பாகங்களுடன் உராய்வதைத் தடுக்கவும் உதவுகிறது. மேல் இதயவுறைப்படை (இதய வெளியுறையின் ஒருபகுதி), இதயத்தசைப் படை, இதய அகவுறைப்படை எனும் படைகளால் இதயத்தின் சுவர் ஆக்கப்பட்டுள்ளது. இதயம் சீரான நிலையில் இயங்கிட இதய மின்கடத்துகை ஒருங்கியம் உதவுகின்றது.