இனம் (உயிரியல்)
From Wikipedia, the free encyclopedia
உயிரியலில், இனம் (அல்லது சிற்றினம்[1]) (ஒலிப்புⓘ) என்பது உயிரியல் வகைப்பாடு மற்றும் பெயரீட்டுத் தரநிலை தொடர்பிலான அடிப்படை அலகுகளில் ஒன்றாகும். பொதுவாக இனம் என்பது, தங்களுக்குள் கலந்து இளம் உயிரிகளை உருவாக்கக் கூடிய உயிரிகளின் தொகுதி என வரையறுக்கப்படுகின்றது.[2] பெரும்பாலான தேவைகளுக்கு இந்த வரைவிலக்கணம் போதுமானது என்றாலும் நுண்ணுயிரினம், வலய உயிரினம் போன்றவற்றைக் கருதும்போது இது அவ்வளவு தெளிவாக அமைவதில்லை. எனவே, டிஎன்ஏ அல்லது மரபன் ஒப்புமை, புறத்தோற்ற ஒப்புமை, சூழல் வாழிட ஒப்புமைகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு துல்லியமாக இனம் என்பதற்கு வரையறை தருவது உண்டு.[3] அதாவது, மரபன் வேறுபாடுகளும் இனங்களுக்குள் காணப்படும் சூழல் வாழிடம் சார்ந்த இயல்பு வேறுபாடுகளும் புறத்தோற்ற வேறுபாடுகளும், அவற்றைப் பல்வேறு இனங்களாகவும் துணையினங்களாகவும் பிரிப்பதற்கு வழி வகுக்கின்றன.
உயிரினங்களுக்கு வழங்கிவரும் பொதுப் பெயர்கள் சில வேளைகளில் இனங்களுக்கான அறிவியல் பெயராகவும் வழங்கப்படுவது உண்டு. ஒன்றுக்கு மேற்பட்ட நெருக்கமான உறவுடைய இனங்கள் சேர்ந்து பேரினம் என்னும் பகுப்பு உண்டாகின்றது. ஒவ்வொரு இனத்துக்கும் ஒரு இருசொற் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இப்பெயரின் முதற்சொல் பேரினத்தையும், மற்றது இனத்தையும் குறிக்கின்றன.
அரிசுடாட்டில் காலம் முதல் 18 ஆம் நூற்றாண்டு வரை இனங்கள் நிலையானவைகளாகக் கருதப்பட்டன. மாபெரும் உயிர்ச்சங்கிலி எனும் அமைப்பில் இவை படிநிலையில் வைத்து ஒழுங்குபடுத்தப்பட்டன. 19 ஆம் நூற்றாண்டில், நாளடைவில் போதுமான கால இடைவெளியில் இனம் படிமலரலாம் என உயிரியலாளர்கள் உணரத் தொடங்கினர். சார்லசு டார்வின் 1859 இல் வெளியிட்ட The Origin of Species (உயிரினத் தோற்றம் எனும் நூலில் அவர் இயற்கைத்தேர்வால் எப்படி உயிரினம் படிமலர வாய்ப்புள்ளது என விளக்கினார். இனங்களுக்கிடையில் மரபன்கள் கிடைநிலையாக பரிமாறப்படுவதுண்டு; பல்வேறு காரணங்களால் இனம் அழிந்தொழிதலும் உண்டு.