இன்ஃபுளுவென்சா
From Wikipedia, the free encyclopedia
இன்ஃபுளுவென்சா (influenza) எனப்படுவது ஃபுளூ எனப் பொதுவாக அழைக்கப்படும் ஒரு தொற்று நோயாகும். இந்நோய் இன்ஃபுளுவென்சா வைரசால் உண்டாக்கப்படுகிறது. நோய்க்கான அறிகுறிகள் மிதமானது முதல் கடுமையானதாகவும் இருக்கும் [1]. அதிக காய்ச்சல், ஒழுகும் மூக்கு, தொண்டை வலி, தசை வலி, தலைவலி, இருமல், சோர்வாக உணர்தல் போன்றவை இந்நோய்க்கான மிகவும் பொதுவான அறிகுறிகள் ஆகும். வைரசு பாதிப்பு ஏற்பட்ட இரண்டு நாட்களுக்குப் பின்னர் இந்த அறிகுறிகள் தென்படும். குறைந்தது ஒரு வாரத்திற்கு இவ்வறிகுறிகளுடன் நோயின் தாக்கம் இருக்கும். இருமல் இரண்டு வாரங்களுக்கும் மேலாக நீடிக்கும். குழந்தைகளிடத்தில் குமட்டல் மற்றும் வாந்தியெடுத்தல் போன்ற அறிகுறிகள் இருக்கலாம், ஆனால் இவை பெரியவர்களில் பொதுவாக இல்லை. தொடர்பற்ற இரைப்பைக் குடல் அழற்சியினாலும் குமட்டல் மற்றும் வாந்தியெடுத்தல் போன்ற அறிகுறிகள் தோன்றுவதுண்டு. இதனை சில நேரங்களில் வயிற்று காய்ச்சல் அல்லது 24-மணிநேர காய்ச்சல் எனத் தவறாக பரிந்துரைத்து விடும் அபாயமும் உள்ளது [2]. வைரசு நிமோனியா, இரண்டாம் நிலை பாக்டீரிய நிமோனியா, சைனசு நோய்த்தாக்கம், மற்றும் ஆசுதுமா அல்லது இதய செயலிழப்பு போன்ற முந்தைய சுகாதார பிரச்சினைகளால் மோசமடைதல் போன்றவையும் இன்ஃபுளுவென்சா காய்ச்சலின் சிக்கல்களாகும் [1].
இன்ஃபுளுவென்சா | |
---|---|
100,000 மடங்கு பெரிதாக்கப்பட்ட இன்ஃபுளுவென்சா வைரசு | |
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | குடும்ப மருத்துவர், pulmonology, infectious diseases, அவசர மருத்துவம் |
ஐ.சி.டி.-10 | J10., J11. |
ஐ.சி.டி.-9 | 487 |
நோய்களின் தரவுத்தளம் | 6791 |
மெரிசின்பிளசு | 000080 |
ஈமெடிசின் | med/1170 ped/3006 |
பேசியண்ட் ஐ.இ | இன்ஃபுளுவென்சா |
ம.பா.த | D007251 |
ஏ வகை, பி வகை, சி வகை என மூன்று வகையான இன்ஃபுளுவென்சா வைரசுகள் மக்களைத் தாக்குகின்றன [3]. பொதுவாக வைரசுகள் காற்று அல்லது இருமல் வழியாக பரவுகின்றன. இப்பரவல் ஒப்பீட்டளவில் பெரும்பாலும் குறுகிய தொலைவில் உள்ளவர்களிடத்திலேயே நிகழும் என நம்பப்படுகிறது [4]. இது வைரசு மூலம் பாதிக்கப்பட்ட அசுத்தமான சூழல்களைத் தொடுவதன் மூலமும் வாய் அல்லது கண்களைத் தொடுவதன் மூலமும் பரவும் [4]. முன் அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பும் பின்னரும் ஒரு நபர் மற்றவர்களுக்கு தொற்றுநோயை பரப்புவராக இருக்கலாம்.தொண்டை சளி அல்லது மூக்கு பரிசோதனையின் மூலம் தொற்று நோய் பாதிப்பை உறுதிப்படுத்தப்படலாம். இதற்காக பல்வேறு வகையான துரிதச் சோதனைகள் மருத்துவமனைகளில் உள்ளன. இத்தகைய சோதனைகளில் எதிர்மறை முடிவுகள் கிடைத்தாலும் கூட நோய்த் தொற்று இருப்பதற்கான வாய்ப்பு உண்டு. பாலிமெரேசு சங்கிலி வினை என்ற வகை சோதனையால் மிகத் துல்லியமாக இத்தொற்றைக் கண்டறிய இயலும்.
அடிக்கடி கை கழுவுதல் தொற்று ஆபத்தைக் குறைகிறது. ஏனெனில் வைரசு கிருமி சோப்பு மூலம் செயலிழக்கப்படுகிறது [5]. ஒரு அறுவை சிகிச்சை முகமூடியை அணிவது கூட பயனுள்ளதாக இருக்கும் [5].
அதிக ஆபத்தில் இருக்கும் வாய்ப்புள்ளவர்களுக்கு இன்ஃபுளுவென்சா காய்ச்சலுக்கு எதிரான வருடாந்திர தடுப்பூசிகள் போடுவதை உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது. இத்தடுப்பூசி மூன்று அல்லது நான்கு வகையான இன்ஃபுளுவென்சா காய்ச்சல்களுக்கு எதிராக சிறப்பாகச் செயல்படுகிறது. பொதுவாக இத்தடுப்பூசியை நன்கு பொறுத்துக் கொள்ள முடியும். ஒரு வருடத்திற்குப் போடப்படும் இன்ஃபுளுவென்சா தடுப்பூசி அடுத்த வருடத்தில் பயனுள்ளதாக இருக்காது. ஏனென்றால் வைரசுகள் விரைவாக உருவாகின்றன. நியூராமினிடேசு தடுப்பு மருந்து, ஒசெல்டாமிவிர் போன்ற வைரசு எதிர்ப்பு மருந்துகள் இன்ஃபுளுவென்சாவுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படுகின்றன. தொற்று இல்லையெனில் ஆரோக்கியமானவர்களுக்கு இத்தடுப்பூசியால் எந்த பாதிப்பும் இல்லை [6]. இதைத்தவிர இதர நோய் உள்ளவர்களுக்கும் இத்தடுப்பூசியால் எந்த பயனும் கிடையாது [6][7]. உலகெங்கும் இக்காய்ச்சல் ஆண்டு முழுவதும் பரவுகிறது, இதன் விளைவாக சுமார் மூன்று முதல் ஐந்து மில்லியன் மக்கள் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். சுமார் 250,000 முதல் 500,000 மரணங்கள் ஏற்படுகின்றன [8]. உலகின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் பிரதானமாக குளிர்காலத்திலும், நிலநடுக்கோட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆண்டு முழுவதும் எந்த காலத்திலும் ஏற்படக்கூடும் [8]. மரணம் பெரும்பாலும் இளம் பருவத்தினருக்கும் வயதானவர்களுக்கும் பிற நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மட்டுமே ஏற்படுகிறது.[8]
உலகம் முழுவதும் பாதிக்கும் கொள்ளை நோயாக இந்நோய் அடிக்கடி வருவதில்லை. 20 ஆம் நூற்றாண்டில் மூன்று முறை இன்ஃபுளுவென்சா கொள்ளை நோய் தாக்குதல் நிகழ்ந்திருக்கிறது. 1918 ஆம் ஆண்டு ஏற்பட்ட எசுப்பானிய இன்ஃபுளுவென்சா காய்ச்சலால் ஏறக்குறைய 50 மில்லியன் இறப்புகளும், 1957 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆசிய இன்ஃபுளுவென்சா காய்ச்சலால் சுமார் 2 மில்லியன் இறப்புகளும், 1968 இல் ஏற்பட்ட ஆங்காங்கு இன்ஃபுளுவென்சா காய்ச்சலால் சுமார் ஒரு மில்லியன் இறப்புகளும் நிகழ்ந்துள்ளன[9]. புதுவகையான இன்ஃபுளுவென்சா காய்ச்சல் 2009 இல் தாக்கும் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது.[10]. பன்றிகள், குதிரைகள், பறவைகள் போன்ற விலங்குகளுக்கும் இத்தகைய காய்ச்சல் உண்டாகலாம்[11].