எரடோசுதெனீசு
From Wikipedia, the free encyclopedia
எரடோசுதெனீசு (Eratosthenes of Cyrene, கி.மு.276–கி.மு.194) கிறித்துவிற்கு முந்தைய மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க கணிதவியலாளரும், புவியியலாளரும் வானியலாளரும் ஆவார். கி.மு. 240ஆம் ஆண்டிலிருந்து அவரது மரணம் வரை, தொன்மைக்கால உலகின் மிக முதன்மையான நூலகமாக விளங்கிய அலெக்சாண்டிரியா நூலகத்தின் தலைவராக இருந்தார்.
எரடோசுதெனீசு (Ἐρατοσθένης) | |
---|---|
எரடோசுதெனீசு | |
பிறப்பு | கிமு 276 சைரீன், லிபியா |
இறப்பு | கிமு 194 அலெக்சாந்திரியா |
இனம் | கிரேக்கர் |
பணி | கணிதவியலாளர், நூலகர், கவிஞர் மற்றும் கண்டுபிடிப்பாளர் |
10ஆவது நூற்றாண்டில் நடுநிலக் கடல் பகுதியில் விளங்கிய பைசாந்தியப் பேரரசின் கலைக்களஞ்சியமான சூடாவின்படி, உலகின் எந்தத் துறையிலும் இவர் இரண்டாவது சிறப்பு மிக்கவராக விளங்கியமையால் இவரை உடன்சகாக்கள் பீட்டா (கிரேக்க அரிச்சுவடியில் இரண்டாம் எழுத்து) என செல்லப் பெயரிட்டிருந்ததாகத் தெரிகிறது.[1] அலெக்சாண்டிரியாவில் அதே காலத்தில் வாழ்ந்திருந்த ஆர்க்கிமிடீசின் நண்பராகவும் விளங்கினார்.
எரடோசுதெனீசுவின் எழுத்துக்கள் நேரடியாகக் கிடைக்கவில்லை: அலெக்சாண்டிரியாவின் ஒப்பற்ற அந்த நூலகம் அழிந்து ஒரு படி கூட கிடைக்கவில்லை. பின்னாளில் இசுடிராபோ (~63கிமு–24கிபி) புவியியலைப் பற்றி எழுதியபோது புவியை அளப்பது குறித்து (On the measurement of the Earth) என்ற நூலையும் ஜியாக்ரபிக்கா என்ற புவியியல் குறித்த நூலையும் எரடோசுதெனீசு எழுதியதாகக் குறிப்பிட்டுள்ளார். எரடோசுதெனீசு புவியியல் குறித்த தனித்துறைக்குத் தந்தை என அறியப்படுகிறார்.
புவியின் சுற்றளவை துல்லியமாக முதன்முதலில் கணக்கிட்டவர் இவரே. மேலும் நிலநேர்க்கோடு மற்றும் நிலநிரைக்கோடு கோட்பாடுகளை அறிமுகப்படுத்தினார். புவியின் அச்சு சாய்வைத் துல்லியமாகக் கணக்கிட்டவரும் இவராவார். புவியிலிருந்து சூரியனுக்கான தொலைவைக் கணக்கிட்டிருப்பார் என நம்பப்படுகிறது. பெப்ரவரி 29ஐ கண்டறிந்தவரும் எரடோசுதெனீசாவார்.[2] உலகின் நிலப்படம் ஒன்றை அப்போதிருந்த தகவல்களைக் கொண்டு உருவாக்கினார். அறிவியல்பூர்வ நாட்குறிப்புகளை அறிமுகப்படுத்தினார்; டிராய் கைப்பற்றலில் இருந்து முதன்மையான அரசியல் மற்றும் இலக்கிய நிகழ்வுகளுக்கான நாள்களை குறிக்க எண்ணினார்.