ஒருவித்திலை
From Wikipedia, the free encyclopedia
ஒருவித்திலைத் தாவரம் அல்லது ஒருவித்திலையி (தாவர வகைப்பாட்டியல்: Monocotyledonae[1], ஆங்கிலம்:Monocotyledon) என்பது பூக்கும் தாவர (அங்கியோஸ்பேர்ம்கள்) வகையைச் சேர்ந்த இரு பெரும் பிரிவுகளுள் ஒன்றைச் சேர்ந்த தாவரம் ஒன்றைக் குறிக்கும். மற்றப் பிரிவைச் சேர்ந்தவை இருவித்திலைத் தாவரங்கள் ஆகும். ஒருவித்திலையிகள், பல்வேறு வகைப்பாட்டு நிலைகளிலும், பல்வேறு பெயர்களின் கீழும் அடையாளம் காணப்பட்டுள்ளன. வகைப்பாட்டியலில், அங்கியோஸ்பேர்ம்கள் தொடர்பான புதிய வகைப்பாட்டு முறைமையான ஏபிஜி II முறைமை, ஒருவித்திலையிகள் என்னும் ஒரு பிரிவை (clade) ஏற்றுக்கொண்டுள்ளது எனினும், இதற்கு ஒரு வகைப்பாட்டியல் தரநிலை (rank) ஒதுக்கப்படவில்லை.
ஒருவித்திலைத் தாவரம் | |
---|---|
ஹெமேரோகாலிஸ் தாவரத்தின் பூ | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | ஒருவித்திலைத் தாவரம் |
ஒழுங்கு | |
சுமார் 10 |
உயிரியத் தொகுதியில் உண்டாகும் வேளாண்மைத் தாவரங்களில் பெரும்பாலானவை ஒருவித்திலையிகள் ஆகும். இப் பிரிவுள் 50,000 தொடக்கம் 60,000 வரையிலான சிறப்பினங்கள் (species) இருப்பதாகத் தெரிகிறது. அனைத்துலக இயற்கை மற்றும் இயற்கை வளங்கள் காப்பு ஒன்றியத் (IUCN) பரணிடப்பட்டது 2006-06-30 at the வந்தவழி இயந்திரம் தகவல்களின்படி இவ்வெண்ணிக்கை 59,300 ஆகும். இப் பிரிவிலும், பூக்கும் தாவரங்கள் அனைத்திலும், சிறப்பினங்களின் எண்ணிக்கை அடிப்படையில், மிகப் பெரிய தாவரக் குடும்பம் ஆர்க்கிட்டுகள் (orchids) ஆகும். சுமார் 20,000 சிறப்பினங்கள் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ள இவை ஆர்க்கிடேசியே குடும்பத்தைச் சேர்ந்தவை. இக் குழுவில் பொருளியல் அடிப்படையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தாவரக் குடும்பம், போவாசியே குடும்பத்தைச் சேர்ந்த புற்கள் ஆகும். இக் குடும்பத்தில், தானியங்கள் (நெல், சோளம், கோதுமை போன்றவை), மேய்ச்சற் புற்கள், மூங்கில் போன்றவை அடங்குகின்றன. இவை காற்றினாலான மகரந்தச் சேர்க்கைக்காகக் கூர்ப்பு (evolution) அடைந்துள்ளன. மிகவும் சிறிய புற்களின் பூக்கள், தெளிவாகத் தெரியக்கூடிய வகையில் பூங்கொத்துகளாக அமைந்துள்ளன. தென்னை முதலியவற்றை உள்ளடங்கிய பாம் குடும்பம் (அரகேசியே), வாழைக் குடும்பம் (முசேசியே), வெங்காயக் குடும்பம் (அலியேசியே) போன்றவை இக் குழுவில் உள்ள, பொருளியற் சிறப்புக் கொண்ட பிற தாவரக் குடும்பங்களாகும்.
பூக்களுக்காகப் பயிரிடப்படும் பல தாவரங்களும் ஒருவித்திலையிகளே. லில்லிகள், ஐரிசுகள், ஆர்க்கிட்டுகள், மணிவாழைகள், துலீப்புகள் என்பவை இவ்வாறானவை.