கிறித்தவ இறையியல்
From Wikipedia, the free encyclopedia
கிறித்தவ இறையியல் (Christian Theology) என்பது கடவுள் தம்மை இயேசு கிறிஸ்து வழியாக வெளிப்படுத்தியுள்ளார் என்னும் உண்மையை மையப் பொருளாகக் கொண்டு, அதன் உட்கிடக்கையை அறிவியல் முறைப்படி ஆய்ந்து விளக்குதல் ஆகும். கடவுளின் வெளிப்பாட்டை மக்கள் தங்கள் வாழ்வில் அனுபவித்து அறிந்து உணர்ந்து ஏற்று அதனடிப்படையில் கிறித்துவின் சீடர்களாக வாழ்ந்திட இறையியல் துணைபுரிகிறது [1].
கிறித்தவ இறையியல் விவிலிய விளக்கம், பகுத்தறிவு ஆய்வு, கருத்து மெய்ப்பித்தல் ஆகிய வழிமுறைகளைக் கையாண்டு, கிறித்தவ நம்பிக்கையை விளங்கிக்கொள்கிறது; விளக்குகிறது; விமர்சிக்கிறது; வளர்த்தெடுக்கிறது. கிறித்தவ இறையியலை ஆக்குவோர் அச்செயல் வழியாகத் தம் கிறித்தவ நம்பிக்கையை ஆழப்படுத்தவும் இயலுகிறது.
கிறித்தவ நம்பிக்கையைப் பிற சமய மரபுகளோடு ஒப்பிட்டும், அதை மறுப்பாரின் கருத்துகளுக்குப் பதிலளித்து அதைக் காத்தும், கிறித்தவம் தூய்மையடையச் செய்தும், கிறித்தவ நம்பிக்கை பரவிட வழிசெய்தும், கிறித்தவ மரபுச் செல்வங்களை ஆழ்ந்து ஆய்ந்து அவற்றின் ஒளியில் இன்றைய சிக்கல்களுக்குத் தீர்வு காணவும் இறையியலார் உதவுகின்றனர்.