கொல்லைப்படுத்தல்
From Wikipedia, the free encyclopedia
கொல்லைப்படுத்தல் (Domestication) அல்லது வீட்டிற் பழக்குதல் அல்லது வீட்டினமாக்கம் என்பது ஓர் உயிரினக்குழு (மாந்தர்), தான் முன்கணிக்கும் வளங்களைப் பெற, மற்றொரு உயிரினக்குழுவின் (விலங்கு அல்லது தாவரம் அல்லது பூஞ்சை) இனப்பெருக்கத்திலும் கவனிப்பிலும் முதன்மையான தாக்கம் செலுத்தும் தொடர்ந்த பல தலைமுறைச் செயல்பாடு ஆகும். குறிப்பாக இது, விலங்குகள் அல்லது தாவரங்கள் அல்லது பூஞ்சைகள் கட்டுப்பாடான சூழலுக்கு தகவமையச் செய்யும் செயல்முறையைக் குறிக்கும்.[1] சார்லசு டார்வின் காட்டு மூதாதைகளில் இருந்து வீட்டு விலங்குகள் சில பண்புகளில் வேறுபட்டு இருத்தலை முதலில் கண்டுணர்ந்தார். இவர் தான் முதலில் மாந்தர் வேண்டிய பண்புகளை நேரடியாக நனவோடு தேர்ந்தெடுக்கும் செயற்கைத் தேர்வுமுறை வளர்ப்பிற்கும் இயற்கைத் தேர்வின் விளைபொருளாகப் படிமலர்ந்து சில பண்புகள் உருவாகும் முறைக்கும் இடையே உள்ள வேறுபாட்டையும் கண்டுணர்ந்தார்.[2][3][4] காட்டு, வீட்டு உயிரினத் திரளிடையே மரபியல் வேறுபாடும் அமைகிறது. காட்டுவகையில் இருந்து வீட்டு வகைகள் உருவாகிய தொடக்கநிலைக் கட்டங்களுக்கும் பின்னர் பின்னவை காலப்போக்கில் பெற்ற பண்பு மேம்பாடுகளுக்கும் இடையில் கூட பெருத்த வேறுபாடு அமைதலை அறிவியல் அறிஞர்கள் கண்டுணர்ந்துள்ளனர்.[5][6][7] வீட்டினவாக்கத்தின் தொடக்கத்தில் உருவாகிய வீட்டினவாக்கப் பண்புகள அனைத்து வீட்டினவாக்க உயிரிகளிலும் அமையும். ஆனால், தனி வளர்ப்புயிரிகளைக் கருதினாலும் அல்லது வட்டார உயிரினத்திரள்களைக் கருதினாலும், பின்னர் ஏற்பட்ட மேம்பாட்டுப் பண்புகள் குறிப்பிட்ட விகித உயிரிகளில் மட்டுமே, நிலவும்.[6][7][8]
நாய் தன் முதலில் வீட்டிற் பழக்கிய முதுகெலும்பியாகும்.[9][10][11] இந்த நிகழ்வு ஐரோப்பாசியாவில் வேளாண்மை வளர்ச்சிக்கும் பிற விலங்குகளின் வீட்டினவாக்கத்துக்கும் முன்பே நிறைவேறிவிட்டது. இது பிந்தைய பிளிசுட்டோசீன் காலத்துக்கு முன்பே ஏற்பட்டதாகும்.[10] தொல்லியல் விவரங்களும் மரபியல் விவரங்களும் காட்டு, வீட்டு வளரினங்களுக்கு இடையே நெடுங்காலமாகவே மரபன் பாய்வு தொடர்ந்து இருந்துவந்துள்லதைக் காட்டுகின்றன. இந்த நிலைமை கழுதைகள், குதிரைகள், பழைய புதிய உலக ஒட்டகங்கள், வெள்ளாடுகள், செம்மறியாடுகள், பன்றிகள் ஆகிய அனைத்து விலங்கினங்களுக்கும் பொருந்தும்.[7][12]வீட்டினவாக்கம் மாந்தரினத்துக்குப் பெரும்பயன் நல்குவதாலும் படிமலர்ச்சி, மாந்தச் செயற்கைப் படிமம் ஆகவும் விளங்குவதால், தொல்லியல், தொல்லுயிரியல், மாந்தரினவியல் (மானிடவியல்), தாவரவியல், விலங்கியல், மரபியல், சுற்றுச்சூழலியல் ஆகிய பல்வேறு புலங்கள் சார்ந்த அறிவியலாளர்களையும் இது ஈர்க்கிறது.[13]
பறவைகளில் கோழி விட்டினவாக்க உயிரியாகும். இது இறைச்சியும் முட்டையும் தருகிறது. பறவைகள் கூண்டுப் பறவைகளாகவும் வளர்க்கப்படுகின்றன. இவ்வகைக் கூண்டுப் பறவைகளாக பாடும் பறவைகளும் பேசும் கிளிகளும் வளர்க்கப்படுகின்றன.
முதுகெலும்பில்லாத வீட்டினவாக்க விலங்குகளில் தேனீயும் பட்டுப்புழுவும் நெடுங்காலமாகவே பயனில் உள்ளன. நிலவாழ் நத்தைகள் உணவுக்காக வளர்க்கப்படுகின்றன. பல்வேறு உயிரினத் தொகுதிகளில் இருந்து, சில உயிரினங்கள் ஆராய்ச்சிக்காகவும் சில உயிரியல் கட்டுபாட்டிற்காகவும் வளர்க்கப்படுகின்றன.
தாவரங்கள் வீட்டுப் பயன்பாட்டுக்கு 12,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கொணரப்பட்டன. வடகிழக்குப் பகுதியில் கூலங்களும் ஆசியாவில் சுரைக்காயும் பயன்பாட்டுக்கு வந்தன. வேளாண்மை, உலகின் வெவ்வேறான பதினொரு பகுதிகளில் தோன்றி, பல்வேறு பயிரினங்களையும் கால்நடைகளையும் பயன்பாட்டில் கொணர்ந்தது.