சிஞ்சியாங்
From Wikipedia, the free encyclopedia
சிஞ்சியாங் அல்லது சின்ச்சியாங் உய்கர் (Xinjiang) என்பது சீன மக்கள் குடியரசில் சீனாவின் வடமேற்குப் பகுதியிலுள்ள ஒரு தன்னாட்சிப் பகுதி ஆகும்.[1] இதுவே சீனாவின் மாகாணங்களில் பரப்பளவில் மிகப்பெரியதும் உலக நாடுகளில் பரப்பளவு அதிகம் கொண்ட நாடுகளில் எட்டாவதாகவும் உள்ளது. இதன் பரப்பளவு 16 லட்சம் சதுர கி.மீ. வீகெர் அல்லது உய்குர் இன மக்கள் பெரும்பான்மையினோராக உள்ள சின்ச்சியாங்கின் மேற்கு பகுதியும், வடக்கு பகுதியும், ரசியா, மங்கோலியா, இந்தியா, பாகிஸ்தான், கசாக்ஸ்தான், தஜிகிஸ்தான் கிர்கிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய 8 நாடுகளுடன் ஒட்டியமைந்துள்ளதான் அந்நாடுகளுடன் பொதுவான எல்லைகளைக் கொண்டுள்ளது. இந்நாட்டின் எல்லை நீளம் 5400 கிலோமீட்டராகும். சீனாவில் மிக நீளமான எல்லை மற்றும், மிக அதிகமான பிற நாடுகளின் நுழைவாயில்களைக் கொண்ட பகுதி சின்ச்சியாங் ஆகும்.
மிகவும் கரடு முரடான காரகோரம், குன்லுன் மலை, தியேன் சான் மலை ஆகியன ஆசியாவின் மையப்பகுதியில் உள்ள சின்ச்சியாங்கின் வடக்கிலிருந்து தெற்கு வரையான எல்லைகளை பெருமளவில் ஆக்கிரமிக்கின்றன. இதனால் பல்வேறு நாடுகளுடனான சாலை மற்றும் தொடர்வண்டிப் போக்குவரத்து சற்று கடினமானதாக உள்ளது. ஆயினும் இதன் காரணமாகவே இப்பகுதிகளில் தனிப்பட்ட வரலாறு மற்றும் கலாச்சாரங்கள் நிலவுகின்றன. மேலும் சின்ச்சியாங் தெற்கே திபெத்துடன் நீண்ட எல்லைப் பகுதியைக் கொண்டுள்ளது. உலகின் மிகவும் வரலாற்றுப் புகழ்பெற்ற பட்டுப்பாதை இதன் கிழக்கிலிருந்து வடமேற்கு எல்லை வரை அமைந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் இங்கு ஏராளமான எண்ணெய் வளம் மற்றும் கனிமவளங்கள் கண்டறியப்பட்டுள்ள்ன. சீனாவின் ஆகப்பெரிய இயற்கை எரிவாயு உற்பத்தி சின்ச்சியாங்கில் நடைபெறுகிறது.
சின்ச்சியாங் உய்கர் அல்லது வீகர் இனம், ஹான் இனம், கசக்கு இனம், தாஜிக்கு இனம், ஹூயி இனம், கிர்கிஸ் இனம், மங்கோலிய இனம் ஆகிய இனக்குழுக்களின் மூலமாக விளங்குகிறது[2]. பன்னிரண்டிற்கும் மேற்பட்ட தன்னாட்சிப் பிரதேசங்களும் சிறுபான்மையோர் மாவட்டங்களும் இங்குள்ளன. பழைய ஆங்கில மொழிக் குறிப்பொன்று இந்தப் பகுதியை சீனாவின் துருக்கிஸ்தான் என வழங்குகிறது.[3] சின்ச்சியாங்கிலுள்ள மலைத்தொடர்கள் அதனை வடக்கில் சுன்க்காரியா வடிநிலம், தெற்கே தாரிம் வடிநிலம் என இரண்டாகப் பிரிக்கின்றன. சின்ச்சியாங்கில் 4.3 விழுக்காடு பகுதியே மக்கள் குடியேற்றத்திற்கு உகந்ததாக உள்ளது.[4] சீனாவின் 2,500 ஆண்டுகால வரலாற்றுப் பதிவுகளின் படி இப்பகுதி பல்வேறு அரசர்களால் ஆளப்பட்டும் கட்டுப்பாட்டிற்குள்ளும் இருந்து வந்துள்ளது. இருபத்தொன்றாம் நூற்றாண்டுக்கு முன்பு வரை இப்பகுதி முழுதும் அல்லது இதன் ஒருசில பகுதிகள் பிற மாநிலங்களின் கட்டுப்பாட்டில் இருந்து வந்துள்ளன. 1949 இலிருந்து சின்ச்சியாங் சீன மக்கள்குடியரசின் பகுதியாக உள்ளது.