தீங்குயிர்கொல்லி
From Wikipedia, the free encyclopedia
தீங்குயிர்கொல்லிகள் அல்லது பீடைகொல்லிகள் எனப்படுபவை தீங்குயிர்/பீடைகளையும் களைகளையும் கட்டுப்படுத்தும் அல்லது அழிக்கும் அல்லது விலகச் செய்யும் (repelling) அல்லது அவற்றின் தாக்கத்தைத் தணித்து வைக்கும் தன்மை கொண்ட சில பொருட்களின் கலவையாகும்[1][2] தீங்குயிர்கொல்லிகள் என்ற சொல் களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி (இவற்றில் பூச்சி வளர்ச்சி கட்டுபடுத்திகள், கரையான்கொல்லிகள் அடங்கும்), புழுக்கொல்லி, மெல்லுடலிக்கொல்லி, மீன்கொல்லி, பறவைக்கொல்லி, கொறிப்பிக்கொல்லி, குச்சுயிரிக்கொல்லி, பூச்சி விரட்டுவன, விலங்கு விரட்டுவன, நுண்ணுயிர்க்கொல்லி, பூஞ்சைக்கொல்லி ஆகியவற்றை அடக்கும்.[3] தீங்குயிர்கொல்லிகளில் 80% மானவை களைகொல்லிகளாகும்.[4] பெரும்பாலான தீங்குயிர்கொல்லிகள் பயிர் பாதுகாப்புக்கானவையே. இவை பொதுவாக பயிரைக் களைகள், பூஞ்சைகள், பூச்சிகள் ஆகியவற்றில் இருந்து காப்பாற்றுகின்றன. இவை வேளாண்மையில் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன.
பொதுவாக, ஒரு தீங்குயிர்கொல்லி என்பது வேதிப்பொருளாகவோ அல்லது நச்சுயிரி, குச்சுயிரி, பூஞ்சை போன்ற உயிரியாகவோ அமையலாம். இது தீங்குயிரிகளை விலக்கிவைத்தோ தணியச் செய்தோ, கொன்றோ, அதன் செயலூக்கம் நீக்கியோ செயலிழக்கச் செய்யும். தீங்குயிரிகளில் பூச்சிகளும் தாவர நோயீனிகளும் களைகளும் மெல்லுடலிகளும் பறவைகளும் பாலூட்டிகளும் மீன்களும் புழுக்களும் வலயப் புழுக்களும் நுண்ணுயிரிகளும் அடங்கும். இவை பொருளை சிதைக்கலாம் அல்லது தொல்லைதரலாம் அல்லது நோயைப் பரப்பலாம் அல்லது நோயீனிகளைப் பரப்பலாம். இம்மேம்பாடுகளைத் தவிர தீங்குயிரிகளால் தீங்குகளும் ஏற்படுகின்றன. அவை சுற்றுச்சூழல் உயிரினங்களுக்கும் மாந்தருக்கும் நச்சூட்டி விடுகின்றன.