தொலைநோக்கி
From Wikipedia, the free encyclopedia
தொலைநோக்கி (இலங்கை வழக்கு: தொலைக்காட்டி) தொலைவில் இருக்கும் பொருட்களைத் தெளிவாகப்பார்க்கப் பயன்படும் கருவி ஆகும். குறிப்பாக வானியல் பொருட்களையும் நிகழ்வுகளையும் நோக்க/அவதானிக்க இது உதவுகிறது. கருவி ஒன்றில் பயன்படுத்தப்படுவதற்கான உருப்பெருக்கும் வில்லையொன்றை பயன்படுத்தும் முதல் ஒளியியல் ஆய்வு, ஈராக்கியரான இபின் அல்-ஹேதம் என்பவரால் எழுதப்பட்ட ஒளியியல் நூல் என்னும் நூலில் காணப்படுகின்றது. இவரது தகவல்கள், பிற்காலத்து, ஐரோப்பிய தொலைநோக்கித் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அடிப்படைகளை அமைத்துக் கொடுத்தன எனலாம். அத்துடன், ஒளிமுறிவு, பரவளைவு ஆடிகள் போன்றவை தொடர்பான இவரது ஆய்வுகளும் அறிவியல் புரட்சிக்கு உதவின.
கலீலியோ கலிலி தான் மேம்படுத்திய தொலைநோக்கியைக் கொண்டு வானியல் நிகழ்வுகளை அவதானித்து சூரிய மையக் கோட்பாட்டை அறிவியல் நோக்கில் நிறுவினார்.[1][2][3] கிறிஸ்தவ சமய நிறுவனங்களின் எதிர்ப்புக்கு மத்தியில் நிகழ்ந்த இந்தத் திருப்பம் ஐரோப்பிய அறிவியற் புரட்சிக்கு வித்திட்டது.
தொடக்ககாலத் தொலைநோக்கிகள் லியோர்னாட் டிக்கெஸ், தாகி அல்-டின் போன்றோரால் 16 ஆம் நூற்றாண்டிலேயே விபரிக்கப்பட்டிருந்த போதும், நடைமுறையில் செயல்பட்ட தொலைநோக்கியை முதலில், 1608 ஆம் ஆண்டில் உருவாக்கியவர், ஜெர்மன்-ஒல்லாந்த கண்ணாடி வில்லை செய்வோரான ஹான்ஸ் லிப்பர்ஷே என்பவராவார். தொலைநோக்கி என்னும் பெயர் பொதுவாகக் கட்புலனாகும் ஒளியுடனேயே தொடர்புபடுத்தப்படினும், இது, மின்காந்த நிறமாலையின் பெரும்பகுதிகளை அவதானிக்க உதவும் பலவகைக் கருவிகளையும் குறிக்கப் பயன்படுகிறது.