வயநாடு வனவிலங்கு காப்பகம்
இந்தியாவில் உள்ள வனவிலங்கு காப்பகம் / From Wikipedia, the free encyclopedia
வயநாடு வனவிலங்கு காப்பகம் (Wayanad Wildlife Sanctuary) என்பது இந்தியாவின் கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள விலங்குகள் சரணாலயமாகும் [3]சுல்தான் பத்தேரி, முத்தாங்கா, குரைச்சாத்தி மற்றும் தோல்பெட்டி ஆகிய நான்கு பிரிவுகளுடன் 344.44 சதுர கி.மீ. பரப்பளவில் இச்சரணாலயம் அமைந்துள்ளது. இக்காப்பகத்தில் காட்டுப்பன்றி, யானை, மான் மற்றும் புலி போன்ற பெரிய காட்டு விலங்குகள் காணப்படுகின்றன. சரணாலயத்தில் அசாதாரண பறவைகள் சிலவும் உள்ளன. குறிப்பாக மயில்கள் இங்கு மிகப்பொதுவாகக் காணப்படுகின்றன. வயநாடு வனவிலங்கு சரணாலயம் பசுமையான காடுகளையும், வன உயிரினங்களையும் கொண்டுள்ள கேரளாவின் இரண்டாவது மிகப் பெரிய வனவிலங்கு சரணாலயமாகும். தாவர மற்றும் விலங்கினங்களின் அரிதான மற்றும் ஆபத்துநிலையிலுள்ள இனங்கள் இங்குள்ளன. 1973 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்தச் சரணாலயம் இப்போது நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தின் ஓர் உட்பகுதியாகும். வடகிழக்கில் கர்நாடக மாநிலத்தின் பந்திப்பூர் தேசியப் பூங்கா மற்றும் நாகர்ஹோளே தேசியப் பூங்கா|நாகர்கோளே தேசியப் பூங்காக்களாலும்]], தென்கிழக்கில் தமிழ்நாட்டின் முதுமலை தேசியப் பூங்காவாலும் சூழப்பட்டுள்ளது.
வயநாடு வனவுயிர் காப்பகம்
Wayanad Wildlife Sanctuary | |
---|---|
அமைவிடம் | வயநாடு, கேரளம், இந்தியா |
அருகாமை நகரம் | சுல்தான் பத்தேரி, மானந்தவாடி |
ஆள்கூறுகள் | 11.646°N 76.364°E / 11.646; 76.364[1] |
பரப்பளவு | 344 km2 (133 sq mi) |
நிறுவப்பட்டது | 1973 |
தக்காண பீடபூமியின் ஒரு பகுதியே வயநாடு வனவிலங்கு சரணாலயமாகும். இப்பகுதியில் தென்னிந்திய மரமான ஈர இலையுதிர் தேக்கு மரங்கள் அதிகம் காணப்படுகின்றன. மேலும் மேற்குக்- கடற்கரையின் அரைப்-பசுமைமாறா மரங்களடர்ந்த மேய்ச்சல்வெளியைக் கொண்டுள்ளது. யானைப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இச்சரணாலயம் பாதுகாக்கப்படுகிறது. இப்பகுதியில் கூட்டம் கூட்டமாக யானைகளைக் காண முடியும். கேரள வனத்துறையால் யானைச் சவாரிகளும் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
கேரள ஆதிவாசி மக்கட்தொகையின் பெரும்பகுதி வயநாடு மாவட்டத்தில் உள்ளது. பணியர், குரும்பர், ஆடியர், குறிச்சியர், ஊராளியர், காட்டுநாய்க்கர் உள்ளிட்ட பழங்குடியின மக்கள் இங்கு வாழ்கின்றனர்.
2126 சதுர கிமீ பரப்பளவைக் கொண்ட வயநாட்டுக்குச் சக்திவாய்ந்த வரலாறு உள்ளது. வயனாட்டில் பல்வேறு பகுதிகளில் காணப்படும் எச்சங்கள் மற்றும் சாசனங்கள் வயநாட்டின் முக்கியமான வரலாற்றுக்கு முந்தைய காலத்தை பற்றிப் பேசுகின்றன. கிறித்துவிற்கு முன்பு குறைந்தபட்சம் 10 நூற்றாண்டுகளுக்கு முன்னரே இப்பகுதியில் மனிதர்கள் வாழ்ந்திருக்க வேண்டுமென வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர்.
இந்த சரணாலயம் நீலகிரி உயிர்க் கோளகத்தின் ஒரு பகுதியாகும். மேற்குத் தொடர்ச்சி மலைகளில், நீலகிரி உப-தொகுதி (6,000+ சதுர கிலோமீட்டர்) உட்பட சரணாலயத்தின் அனைத்து பகுதிகளும் ஓர் உலக பாரம்பரியக் களமாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு உலக பாரம்பரியக் குழுவால் பரிசீலிக்கப்படுகிறது.[4]