வலிய இடைவினை
From Wikipedia, the free encyclopedia
துகள் இயற்பியலில் வலிய இடைவினை என்பது, இயற்கையின் நான்கு அடைப்படை இடைவினைகளுள் ஒன்று. ஏனைய மூன்றும் மின்காந்தம், வலிகுறை இடைவினை, ஈர்ப்பு என்பனவாகும். வலிய இடைவினையை, வலிய விசை, வலிய அணுக்கரு விசை, குவார்க்கிடை விசை போன்ற பெயர்களாலும் அழைப்பர். அணுவின் அளவு மட்டத்தில் வலிய இடைவினை, மின்காந்த விசையிலும் 100 மடங்கு வலுவானது. மின்காந்த விசை, வலிகுறை இடைவினையிலும் வலுவானது. ஈர்ப்பு விசையே ஏனைய மூன்றிலும் வலுக் குறைந்தது. 10−15 மீ (பெம்டோமீட்டர்]]) நெடுக்கத்தில், வலிய விசை மின்காந்த விசையை விட ஏறக்குறைய 137 மடங்கு வலிமை உடையதாகும்; வலிகுறை இடைவினையை விட மில்லியன் மடங்கு வலிமை கொண்டதாகும்; ஈர்ப்பை விட 1038 மடங்கு பெரியதாகும். இடைவினையின் சார்பு வலிமை இடையில் நிலவும் தொலைவைப் பொறுத்தமைகிறது. எடுத்துகாட்டாக, மேட் சுட்டிராசிலர் கட்டுரையான, "அறிந்த விசைகளின் வலிமை" என்பதைக் காணலாம்.வல்விசை குவார்க்குகளை இணைத்து முதன்மி, நொதுமி போன்ற வன்மிகளை (இருகுவார்க்குகளை) சிறைப்படுத்துவதால் இது இயல்பான பொருண்மத்தைப் பிணிக்கிறது. அதோடு கூட, வல்விசை நொதுமிகளையும் முதன்மிகளையும் பிணித்து அணுக்கருவை உருவாக்குகிறது. பொதுவாஅ முதன்மி அல்லது நொதுமியின் பொருண்மை-ஆற்றல் சமன், வல்விசைப் புல ஆற்றலில் இருந்து விளைகிறது அல்லது கிடைக்கிறது; முதன்மியின் பொருண்மையில் தனிக்குவார்க்குகள் 1% பங்களிப்பையே தருகின்றன.
வலிய இடைவினையை இரண்டு நெடுக்கங்களில் கவனிக்க முடியும். பெரிய அளவு மட்டத்தில் (1 முதல் 3 பெம்டோமீட்டர் (பெமீ)) வரை, இவ்விசையே புரோட்டான்களையும் (முதன்மிகளையும்) நியூட்ரான்களையும் (நொதுமிகளையும்) இணைத்து அணுக்கருவை உருவாக்குகிறது. சிறிய அளவு மட்டத்தில் (0.8 பெமீ இலும் குறைவான அணுக்கருவன் ஆர மட்டத்தில்) இந்த விசையே குவார்க்குகளை இணைத்து புரோட்டான்கள் (முதன்மிகள்), நியூட்ரான்கள் (நொதுமிகள்), மற்ற ஆட்ரான்கள் (வன்மிகள்) போன்றவற்றை உருவாக்குகிறது. பிந்தைய நிலையில் இது வண்ண விசை எனப்படுகிறது.வல்விசை மிகவும் உயர்வலிமையைப் பெற்றிருப்பதால், இதனால் பிணிக்கப்படும் வன்மிகள் மேலும் புதிய உயர்பொருண்மைத் துகள்களை உருவாக்குகிறது. எனவே, உயராற்றல் துகள்களால் வன்மிகளை மொத்தும்போது கட்டற்ற நகர்கதிர்வீச்சுகளான பசையன்கள் உமிழப்படாமல், புதிய வன்மிகளே உருவாகின்றன. வல்விசையின் இந்த இயல்பு வண்ணச்சிறைப்பு எனப்படுகிறது. இதுவல்விசையின் கட்டற்ற உமிழ்வைத் தவிர்க்கிறது. மாறாக, நடைமுறையில், உயர்பொருண்மைத் துகள்களின் தரைகள் பொழிகின்றன.
முதன்மிகளையும், நொதுமிகளையும் இணைத்து அணுக்கருவை உருவாக்கும்போது, வலிய இடைவினை, அணுக்கரு விசை எனப் பெயர் பெறுகிறது.இந்நேர்வில், முதன்மிகளையும் நொதுமிகளையும் குவார்க்குகளின் இடையில் நிகழும் எச்ச வல்விசையே உருவாக்கும். இந்நிலையில், அதாவது அணுக்கருவன்களுக்கு இடையில் வன்மிகளைப் பிணிக்கும்போது, அவற்றிடையே எச்ச வல்விசை முற்றிலும் வேறுபட்ட தொலைவு சார்ந்த நடத்தையைப் பின்பற்றுகிறது. அணுக்கரு பிளவுறும்போது வெளியிடப்படும் பகுதி பிணைப்பு ஆற்றல் எச்ச வல்விசையைச் சார்ந்ததே ஆகும். இந்தப் பிளவு ஆற்றல் அணுமின் திறனாக்கத்திலும் அணுக்கருப் படைக்கலங்களிலும் பயன்படுகிறது .[1][2]
வலிய இடைவினை குவார்க்குகளிடையில் செயல்படும் பொருண்மையற்ற துகள்களாகிய பசையன்கள், எதிர்த்துகள்கள், பிற பசையன்களுக்கு இடையிலான பரிமாற்றத்தின் ஊடாக நிகழ்கிறது.பசையன்கள் குவார்க்குகளுடனும் பிற பசையன்களுடனும் வண்ண ஊட்டம் எனும் ஒருவகை ஊட்ட்த்தினூடாக இடைவினை புரிகின்றன. வண்ண ஊட்டமும் மின்காந்த ஊட்டங்களைப் போன்றதே. ஆனால், அது ஒன்றாக இல்லாமல், (+/− சிவப்பு, +/− பச்சை, +/− நீலம்) என மூன்று வகைகளாக அமைகிறது. இவை முற்றிலும் வேறுபட்ட விசையை வேறுபட்ட நட்த்தை விதிகளுடன் விளைவிக்கின்றன. இந்த விதிகள். குவார்க்கு-பசையன் இடைவினைகளின் கோட்பாடான குவைய வண்ண இயங்கியலில் விவரிக்கப்படுகின்றன (QCD).
பெரு வெடிப்புக்குப் பின்னரான புடவியின் மின்மெலிவு ஊழியின்போது, மின்மெல் விசை வல்விசையில் இருந்து தனியாகப் பிரிந்தது. இதை விளக்கும் பேரொருங்கிணைப்புக் கோட்பாடு நிலவியதாக கருதுகோள் வாஇக்கப்பட்டாலும், இதுவரையில் வெற்றிகரமாக உருவாக்கப்படவில்லை. இந்த ஒருங்கிணைப்பு இயற்பியலின் தீர்வெட்டாத நிலையிலேயே இன்னமும் உள்ளது.