விஷ்ணு
திருமால் / From Wikipedia, the free encyclopedia
விஷ்ணு (சமக்கிருதம்: विष्णु; பொருள்: எங்கும் நிறைந்தவர்) என்பவர் இந்து சமயத்தின் முக்கியமான கடவுள்களில் ஒருவரும் வைணவ சமயத்தின் முழுமுதற் கடவுளும் ஆவார். மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணு மூவுலகையும் காப்பவராக இருக்கிறார். இவர் பிறப்பும், இறப்பும் இல்லா பரம்பொருளாக இருப்பதால் பரப்பிரம்மன், பரமாத்மா என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார்.
விஷ்ணு | |
---|---|
விஷ்ணு—நான்கு கரங்களுடன் | |
அதிபதி | காத்தல் யாவற்றுக்கும் |
தேவநாகரி | विष्णु |
சமசுகிருதம் | viṣṇu |
வகை | முழுமுதல், மும்மூர்த்திகள் |
இடம் | வைகுந்தம் |
ஆயுதம் | சங்கு, சக்கரம், வில், கதாயுதம், மற்றும் நந்தகம் |
துணை | இலக்குமி, பூமாதேவி, நீளாதேவி |
குழந்தைகள் | பிரம்மா, காமதேவன், செவ்வாய் |
விஷ்ணு என்ற சொல்லுக்கு எங்கும் நிறைந்திருப்பவர் என்று பொருள். வைணவ சமயத்தின் படி, பரப்பிரம்மனான விஷ்ணு, உலகில் அதர்மம் தலைதூக்கும் போது தர்மத்தை நிலைநாட்ட பல்வேறு அவதாரங்கள் எடுப்பார் என்று கூறப்படுகிறது. அதன்படி அவர் எடுத்த தசாவதாரங்களில் இராம மற்றும் கிருஷ்ண அவதாரங்கள் குறிப்பிடத்தக்கனவாகும்.
நாராயணன், வாசுதேவன், செகன்நாதர், விதோபர், ஹரி, திருமால் என்று பல பெயர்களால் விஷ்ணு அறியப்படுகிறார். இவர் நீல நிற தோற்றத்தில் கீழ் வலது கையில் கௌமேதகியும் கீழ் இடது கையில் பத்மாவும் மேல் வலது கையில் சுதர்சனமும் மேல் இடது கையில் பாஞ்சசன்யமும், தாங்கிய தோற்றத்துடன் காணப்படுகிறார். மேலும் இவர் பாற்கடலில் லட்சுமி தேவியுடன் ஆதிசேஷன் என்ற நாக படுக்கையில் படுத்திருப்பதாக நம்பப்படுகிறது.[1]
விஷ்ணுவின் வாகனமாக கருடனும், அருவ வடிவமாகக் சாளக்கிராமமும் கருதப்படுகிறது.
இந்துக்கோவில்களில் சயனக் கோலத்தில் மூலவராக இருக்கும் ஒரே இறைவன் இவரே. திருவரங்கம் போன்ற வைணவத்தலங்களில் இந்தத் திருக்கோலமுள்ளது.[2] விஷ்ணு படைத்தலுக்காக பிரம்மனையும் அழித்தலுக்காக சிவனையும் படைத்ததாக வேதவியாசர் கூறுகின்றார். வேதங்கள் விஷ்ணுவையே பரம்பொருள் என விவரிக்கின்றன.
இதிகாசங்களான மகாபாரதம் இவருடைய கிருஷ்ண அவதாரத்தினையும், இராமாயணம் இராம அவதாரத்தினையும் விளக்குகிறது. பாகவத புராணம், ஹரி வம்சம், விஷ்ணு புராணம், மச்சபுராணம், வாமன புராணம் உள்ளிட்ட பன்னிரு புராண நூல்கள் விஷ்ணுவின் பெருமைகளை விவரிக்கின்றன.[3]