கரும்புற்றுநோய்
From Wikipedia, the free encyclopedia
கரிநிறமிப் புற்றுநோய் அல்லது கரும்புற்றுநோய் அல்லது மெலனோமா (Melanoma) என்பது கரிநிறமி உயிரணுக்களில் ஏற்படுகின்ற கேடுதரும் கட்டி வகையாகும்.[1] கரிநிறமி உயிரணுக்கள் மெலனின் (கரிநிறமி) எனும் நிறமியை உற்பத்தி செய்கின்றன, இவை தோலின் நிறத்துக்குக் காரணமாக அமைகின்றன. இப்புற்றுநோய் தோலில் மிகைப்படியாக உருவாகினாலும், எங்கெங்கு கரிநிறமி உயிரணுக்கள் அமைந்துள்ளனவோ அவ்விடங்களில் எல்லாம் தோன்றக்கூடியது. சீதமென்சவ்வு, இரையகக் குடலியத்தொகுதி, கண், சிறுநீரகப் பிறப்புறுப்பு வழி போன்றவை கரிநிறமி உயிரணுக்கள் காணப்படும் ஏனைய பகுதிகளாகும்[2]
கரும்புற்றுநோய் | |
---|---|
கரும்புற்றுநோய் | |
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | புற்றுநோயியல் |
ஐ.சி.டி.-10 | C43. |
ஐ.சி.டி.-9 | 172.9 |
ஐ.சி.டி.-ஒ | M8720/3 |
ம.இ.மெ.ம | 155600 |
நோய்களின் தரவுத்தளம் | 7947 |
மெரிசின்பிளசு | 000850 |
ஈமெடிசின் | derm/257 med/1386 ent/27 plastic/456 |
ம.பா.த | D008545 |
கரும்புற்றுநோய் ஏனைய தோல் புற்றுநோய்களை விடக் குறைவான வீதத்திலேயே காணப்படுகின்றது, ஆனால் மிகவும் கேடுதரும் புற்றுநோய்களுள் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது, ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியத் தவறின் ஈற்றில் பாரதூரமான விளைவுகளை உண்டாக்ககூடியது. தோல் புற்றுநோய்களால் ஏற்படும் இறப்பு வீதத்தில் பெரும்பான்மையான (75%) பகுதியை கரும்புற்றுநோய் வகிக்கின்றது.[3] உலகளாவியநோக்கில் மருத்துவர்களால் ஆண்டுதோறும் ஏறத்தாழ 160,000 புதிய நோய்ச் சம்பவங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. ஆண்களிலும் பார்க்க பெண்களே இப்புற்றுநோயால் அதிகளவு பாதிப்படைகின்றனர். பெண்களில் பொதுவாகப் பாதிப்படையும் பகுதி கால்கள் ஆகும்; ஆண்களில் பின்புறப் பகுதி பொதுவாக பாதிப்படையும்.[4]
உலக சுகாதாரத் திணைக்களத்தின் தரவின்படி, உலகளாவியநோக்கில் ஏறத்தாழ 48,000 இறப்புகள் நிகழ்கின்றன.[5]
இதற்குரிய சிகிச்சை அறுவை மருத்துவம் ஆகும். கரும்புற்றுநோய் பரவியுள்ளதையும் ஆழத்துக்கு ஊடுருவியுள்ளதையும் வைத்துக் குணமடைவதைத் தீர்மானிக்கலாம். அறுவை மருத்துவத்தில் புற்றுநோய்ப் பகுதியும் அதை அண்மித்துள்ள சிறுபகுதியும் வெட்டி அகற்றப்படுகின்றது.