கோயம்புத்தூர்
இது தமிழக மாநகராட்சிகளில் இரண்டாவது மிகப்பெரிய பெருநகர மாநகராட்சி மற்றும் தொழில்நகரம் ஆகும் / From Wikipedia, the free encyclopedia
கோயம்புத்தூர் (Coimbatore, சுருக்கமாக கோவை) தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள முக்கிய பெருநகரங்களில் ஒன்றாகும். இது மேற்கு தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்டு, நொய்யல் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்நகரமானது மக்கள்தொகை அடிப்படையில் சென்னைக்குப் பிறகு தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய மற்றும் இந்தியாவின் பதினாறாவது பெரிய மாநகரம் ஆகும். இதே பெயரைக் கொண்ட மாவட்டத்தின் தலைமையிடமான இது, தொழில் வளர்ச்சியிலும், கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியிலும், மேம்பட்ட நிலையில் உள்ள நகரமாகும்.
கோயம்புத்தூர்
கோவை கோயமுத்தூர் | |
---|---|
அடைபெயர்(கள்): தென்னிந்திய மான்செஸ்டர் | |
ஆள்கூறுகள்: 11°01′00.5″N 76°57′20.9″E | |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கோயம்புத்தூர் |
பகுதி | கொங்கு நாடு |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | கோயம்புத்தூர் மாநகராட்சி |
• மக்களவை உறுப்பினர் | பி. ஆர். நடராஜன் |
• சட்டமன்ற உறுப்பினர் | அம்மன் கே. அர்ஜுனன் (கோயம்புத்தூர் வடக்கு) வானதி சீனிவாசன் (கோயம்புத்தூர் தெற்கு) |
• மாநகர முதல்வர் | கல்பனா |
பரப்பளவு | |
• பெருநகர மாநகராட்சி[2] | 257.04 km2 (99.24 sq mi) |
• மாநகரம் | 696.25 km2 (268.82 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 2 |
ஏற்றம் | 427 m (1,401 ft) |
மக்கள்தொகை (2011) | |
• பெருநகர மாநகராட்சி[3] | 16,01,438 |
• தரவரிசை | 24வது |
• பெருநகர் | 21,36,916 |
• பெருநகர தரம் | 16வது |
இனம் | தமிழர் |
மொழிகள் | |
• அலுவல்மொழி | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீடு | 641 XXX |
தொலைபேசி குறியீடு | +91-422 |
வாகனப் பதிவு | TN 37 (தெற்கு), TN 38 (வடக்கு), TN 66 (மத்திய), TN 99 (மேற்கு) |
இணையதளம் | www |
மக்கள்தொகை குறிப்பு: நகர விரிவாக்கத்திற்கு முந்தைய நகரத்தின் பரப்பளவு 105.60 சதுர கி.மீ. ஆக இருந்த போது 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கணக்கிடப்பட்ட மக்கள்தொகை 1,050,721 ஆக இருந்தது.[4] நகர எல்லைகள் 257.04 சதுர கிலோமீட்டராக விரிவாக்கப்பட்ட பிறகு, இந்திய அரசாங்கத்தால் அளிக்கப்பட்ட தகவலின்படி புதிய நகர எல்லைகளுக்கு உட்பட மக்கள் தொகை 1,601,438 ஆக இருந்தது.[5][6] |
சங்க காலத்தில் கோயம்புத்தூரைச் சுற்றியுள்ள பகுதி சேரர்களால் ஆளப்பட்டது. இந்த நகரமானது மேற்குக் கடற்கரைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான முக்கிய வர்த்தகப் பாதையில் அமைந்திருந்தது. தென்னிந்தியாவில் முசிறி முதல் அரிக்கமேடு வரை நீண்டிருந்த பழங்கால வர்த்தகப் பாதையான ராசகேசரி பெருவழியில் இது அமைந்திருந்தது. கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் சோழர்கள் கொங்கு நாட்டை கைப்பற்றினர். இப்பகுதி 15 ஆம் நூற்றாண்டில் விசயநகரப் பேரரசால் ஆளப்பட்டது. அதைத் தொடர்ந்து நாயக்கர்கள் பாளையக்காரர் முறையை அறிமுகப்படுத்தினார், இதன் கீழ் கொங்கு நாடு 24 "பாளையங்களாக" பிரிக்கப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், கோயம்புத்தூர் பகுதி மைசூர் இராச்சித்தின் கீழ் வந்தது. திப்பு சுல்தானின் வீழ்ச்சிக்குப் பிறகு பிரித்தானியர்களால் 1799 இல் கோயம்புத்தூர் சென்னை மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. கோயம்புத்தூர் பகுதியானது தீரன் சின்னமலை தலைமையிலான பிரித்தானிய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தது.
1804 ஆம் ஆண்டில், கோயம்புத்தூர் புதிதாக உருவாக்கப்பட்ட கோயம்புத்தூர் மாவட்டத்தின் தலைநகராக நிறுவப்பட்டது மற்றும் 1866 இல் நகராட்சி அந்தசுது வழங்கப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பம்பையில் பருத்தித் தொழிலின் வீழ்ச்சியைத் தொடர்ந்து இந்நகரத்தின் சவுளி வர்த்தகம் ஏற்றத்தை சந்தித்தது. சுதந்திரத்திற்கு பிறகு இந்நகரம் விரைவான தொழில் வளர்ச்சியைக் கண்டது. "கோயம்புத்தூர் ஈர மாவு இயந்திரம்" மற்றும் "கோவை கோரா பருத்தி" ஆகியவை இந்திய அரசாங்கத்தால் புவியியல் குறியீடுகள் என அங்கீகரிக்கப்பட்டுள்ளன. தென் இந்தியாவில் சவுளித் தொழிலின் மையமாக இருப்பதால், இந்த நகரம் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகின்றது.
கோயம்புத்தூர் 2014 ஆண்டு இந்தியா டுடே வார இதழ் நடத்திய கணக்கெடுப்பில் இந்தியாவின் சிறந்த வளர்ந்து வரும் நகரமாக தரவரிசைப்படுத்தப்பட்டது. இந்நகரமானது இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலில் முதலீட்டு சூழலில் இந்திய நகரங்களில் நான்காவது இடத்தையும் மற்றும் தோலோசு வெளியிட்ட சிறந்த உலகளாவிய புறத்திறனீட்ட நகரங்களில் 17வது இடத்தையும் பிடித்தது. இந்திய அரசாங்கத்தால் சீர்மிகு நகரங்கள் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும் இந்திய நகரங்களில் ஒன்றாக கோயம்புத்தூர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டின் அறிக்கையின்படி, இந்தியாவில் வாழ்வதற்கான பத்து சிறந்த நகரங்களில் இடம்பெற்றது.