தில்லியியல் உள்ள கட்டிடம் From Wikipedia, the free encyclopedia
சப்தர்ஜங்கின் கல்லறை (ஆங்கிலம்:Tomb of Safdar Jang) என்பது இந்தியாவின் தில்லியில் உள்ள ஒரு மணற்கல் மற்றும் பளிங்கு கல்லறை ஆகும். இது 1754 ஆம் ஆண்டில் மறைந்த முகலாயக் கட்டிடக்கலை பாணியில் நவாப் சப்தர்ஜங்கிற்காக கட்டப்பட்டது . இந்த நினைவுச்சின்னம் விசாலமான சூழலையும், அதன் குவிமாடம் மற்றும் வளைந்த சிவப்பு பழுப்பு மற்றும் வெள்ளை நிற அமைப்புகளையும் கொண்டுள்ளது. 1748 இல் அகமது ஷா பகதூர் அரியணையில் ஏறியபோது, அவத்த்தின் நவாப் சப்தர்ஜங்முகலாய பேரரசு (வசீர் உல்-மாமல்க்-இ-இந்துஸ்தான்) பிரதமராக நியமிக்கப்பட்டார்.
இந்த கல்லறை லோதி சாலையின் டி சந்திப்பில் உள்ள சப்தர்ஜங் விமான நிலையம் மற்றும் புது தில்லியில் அரவிந்தோ மார்க் (முந்தைய பெயர் மெஹ்ராலி சாலை) அருகே அமைந்துள்ளது. [1]
இந்த அமைப்பு 1754 ஆம் ஆண்டில் மறைந்த முகலாயக் கட்டிடக்கலை பாணியில் சப்தர்ஜங்கிற்காக கட்டப்பட்டது .
அவத் மீது ஆட்சி செய்த சபதர்ஜங் என்று பிரபலமாக அறியப்பட்ட மிர்சா முகிம் அபுல் மன்சூர் கான், முகமது ஷாவின் ஆளுனராக அவத்தின் சுதந்திரமான ஆட்சியாளராக இருந்தார். இவர் மிகவும் பெரிய செல்வந்தராகவும், மிகவும் சக்திவாய்ந்தவராகவும் இருந்தார். முகலாய சாம்ராஜ்யத்தின் பேரரசர் முஹம்மது ஷா இறந்தவுடன், இவர் டெல்லிக்கு குடிபெயர்ந்தார். [2] முகமது ஷா அகமது ஷா 1748 இல் டெல்லியில் முகலாயப் பேரரசின் அரியணையில் ஏறியபோது, சப்தர்ஜங் பேரரசின் பிரதமராக (வசீர்) வசீர் உல்-மாமல்க்-இ-இந்துஸ்தான் என்ற பட்டத்துடன் நியமிக்கப்பட்டார். அந்த நேரத்தில் பேரரசு வீழ்ச்சியடைந்தது. அவர்களின் ஆட்சி வட இந்தியாவில் மட்டுமே நீட்டிக்கப்பட்டிருந்தது . [3]
அரசர் ஒரு கைப்பாவையாக இருந்தார். மது, அபின் மற்றும் பெண்களுடன் வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருந்தார். எனவே சப்தர்ஜங் அனைத்து அதிகாரங்களையும் கைப்பற்றினார். சக்கரவர்த்தியின் குடும்பத்தின் மீதான அவரது கட்டுப்பாடு மிகவும் கொடூரமானது. எனவே சப்தர்ஜங்கிடமிருந்து தங்களை விடுவிக்க பேரரசர் மராத்தியர்களை உதவிக்கு அழைத்தார். 1753 இல் மராத்தியர்கள் சப்தர்ஜங்கை டெல்லியில் இருந்து வெளியேற்றினர். [2] [4] அதன்பிறகு 1754 இல் சப்தர்ஜங் இறந்தார். அவரது மரணத்திற்குப் பிறகு அவரது மகன் நவாப் சுஜாத் தௌலா முகலாய பேரரசரிடம் டெல்லியில் தனது தந்தைக்கு ஒரு கல்லறையை அமைக்க அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டார். பின்னர் அவர் ஒரு கல்லறையை கட்டினார். இது ஒரு எத்தியோப்பியக் கட்டிடக் கலைஞரால் வடிவமைக்கப்பட்டது. [4]
இந்த கல்லறையின் தெற்கே உள்ள ஒரு இடம் 1386 ஆம் ஆண்டில் மங்கோலியின் திமூர் மற்றும் முகமது பின் துக்ளக் ஆகியோருக்கிடையே நடந்த போரில் முகமது பின் துக்ளக் தோற்கடிக்கப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும்.
முகலாயர்களின் கடைசி நினைவுச்சின்ன கல்லறை தோட்டமான சப்தர்ஜங் கல்லறை, உமாயூனின் சமாதியின் பாணிக்கு ஏற்ப ஒரு மூடப்பட்ட தோட்ட கல்லறை போல திட்டமிடப்பட்டு கட்டப்பட்டது. இது 1754 இல் நிறைவடைந்தது. [5] அப்துல் ரகீம் கான்கானாவின் கல்லறையிலிருந்து பலகைகள் கொண்டுவரப்பட்டு இந்தக் கல்லறையின் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்டன. [6]
கல்லறையில் நான்கு முக்கிய அம்சங்கள் உள்ளன: மையத்தில் கல்லறையுடன் கூடிய சார் பூங்காத் திட்டம், ஒன்பது அடுக்கு மாடித் திட்டம், ஐந்து பகுதி முகப்பு மற்றும் மறைக்கப்பட்ட படிக்கட்டுடன் கூடிய பெரிய மேடை ஆகியன. [7]
கல்லறையின் பிரதான நுழைவு வாயில் இரண்டு மாடி மற்றும் அதன் முகப்பில் பூசப்பட்ட மேற்பரப்புகளில் மிகவும் விரிவான அலங்காரங்கள் உள்ளன. அவை அலங்கரிக்கப்பட்ட ஊதா நிறத்தில் உள்ளன. மேற்பரப்பில் அரபியில் ஒரு கல்வெட்டு உள்ளது. அதன் மொழிபெயர்ப்பு "தெளிவான, துணிச்சலான ஒரு கதாநாயகன் இடைக்காலத்திலிருந்து புறப்படும்போது, அவர் கடவுளின் சொர்க்கத்தில் வசிப்பவராக ஆகட்டும்" என்று எழுதப்பட்டுள்ளது. நுழைவாயிலின் உள்ளே நுழைந்த பின் காணப்படும் முகப்பின் பின்புறம் பல அறைகள் மற்றும் நூலகங்களைக் கொண்டுள்ளது. வாயிலின் வலதுபுறத்தில் மசூதி ஒன்று உள்ளது, இது மூன்று கோபுர அமைப்பு கொண்டதாகும். [1] [2]
பிரதான வாயில் வழியாக நுழைவது கல்லறையின் சரியான காட்சியை வழங்குகிறது. [4] அதன் சுவர்கள் உயரமாக கட்டப்பட்டுள்ளன மற்றும் சப்தர்ஜங்கின் முக்கிய கல்லறையாக இருக்கும் மத்திய குவிமாடம் ஒரு மொட்டை மாடியில் கட்டப்பட்டுள்ளது. சிவப்பு மற்றும் பஃப் கற்கள் கொண்டு கட்டப்பட்ட பிரதான கல்லறை 28 மீட்டர் (92 அடி) சதுரத்தை அளவில் உள்ளது. மைய அறை, சதுர வடிவத்தில், எட்டு பகிர்வுகளுடன் நடுவில் ஒரு கல்லறையைக் கொண்டுள்ளது. இங்கே செவ்வக வடிவத்தில் பகிர்வுகள் உள்ளன. மேலும், மூலையின் பகிர்வுகள் எண்கோண வடிவத்தில் உள்ளன. கல்லறையின் உட்புறம் அலங்காரங்களுடன் ரோகோக்கோ பிளாஸ்டரால் மூடப்பட்டுள்ளது. மூலைகளில் பிரதான கல்லறையைச் சுற்றி நான்கு கோபுரங்கள் உள்ளன, அவை பலகோண வடிவத்தில் உள்ளன .அவை கியோஸ்க்களுடன் வழங்கப்பட்டுள்ளன. அவை மங்கலான பளிங்கு மேற்கூரைகளைக் கொண்ட வளைவுகளைக் கொண்டுள்ளன. கல்லறையில் நிலவறை ஒன்று உள்ளது, அதில் சப்சர்ஜங் மற்றும் அவரது மனைவியின் கல்லறைகள் உள்ளன. மசூதியின் மேற்கூரை, வர்ணம் பூசப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. [2]
முகப்பு, தாஜ்மகாலின் பாணியில் கட்டப்பட்டிருந்தாலும், செங்குத்து அச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதால் சமச்சீர்மை இல்லை. இதன் விளைவாக கல்லறைக்கு சமநிலையற்ற தோற்றம் ஏற்பட்டது. குவிமாடம் இன்னும் நீளமானது; மையப் பகுதியில் உயரமான செவ்வக முகப்பு உள்ளது. நான்கு மூலைகளிலும் உள்ள நான்கு தூபிகள் பிரதான கல்லறையின் ஒரு பகுதியாகும். இது தாஜ் மகாலைஒப்பிடும்போது உயரத்தில் முற்றிலும் மாறுபட்ட கருத்தாக இருக்கிறது. அங்கு கோபுரங்கள் பிரிக்கப்பட்டு கல்லறையின் முகப்பிலிருந்து விலகி உள்ளன. [7]
கல்லறையின் கட்டிடக்கலை பாராட்டப்படுகிறது. அதேசமயம் கேலியும் செய்யப்படுகிறது; அதன் பல்வேறு அலகுகளின் விகிதாச்சாரம் மற்றும் கட்டுமானத்திற்காக மோசமான பொருள்களைப் பயன்படுத்தியது ஆகியவற்றால் இது கேலி செய்யப்படுகிறது. 1823 மற்றும் 1826 க்கு இடையில் கொல்கத்தாவின் பிஷப்பாக இருந்த ரெஜினோல்ட் ஹெபர், பயன்படுத்தப்பட்ட கல்லின் வெளிர் பழுப்பு நிறத்தை அடிப்படையாகக் கொண்டு, கல்லறையில் "பானை இறைச்சியின் நிறம்" இருப்பதைக் கவனித்தார். கோபுரங்களில் அலங்காரத்திற்காகப் பயன்படுத்தப்படும் பளிங்கு மகிழ்வளிக்கும் என்றாலும் " சற்று வனப்பு குறைவாக" இருக்கிறது என்பதை இந்திய தொல்பொருள் ஆய்வு கூட கவனித்துள்ளது. [8] மற்றொரு கவனிப்பு என்னவென்றால், கல்லறையை தாஜ்மகால் அல்லது உமாயூன் கல்லறையுடன் ஒப்பிட முடியாது. ஏனெனில், அது கட்டப்பட்ட நேரத்தில், முகலாய சாம்ராஜ்யம் வீழ்ச்சியடைந்து. மணற்கல் பயன்படுத்தப்பட வேண்டியிருந்தது. மேலும், கோடுகள் முறையற்ற முறையில் அமைக்கப்பட்டன. இதன் தரம் "இழிவான தோற்றம்" என்று தோன்றியது. [2]
கல்லறையைச் சுற்றியுள்ள பெரிய சதுர தோட்டம் ஒவ்வொரு பக்கத்திலும் சுமார் 280 மீட்டர் (920 அடி) நீளமுள்ள ஒரு சுவரால் சூழப்பட்டுள்ளது. தளவமைப்பு நான்கு சதுரங்களின் வடிவத்தில் அகலமான பாதைகள் மற்றும் நீர் தொட்டிகளுடன் உள்ளது. அவை மேலும் சிறிய சதுரங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த தோட்டம் முகலாய சர்பாக் தோட்ட பாணியில் உள்ளது, மேலும் இது உமாயூன் கல்லறையின் தோட்டத்தின் சிறிய பதிப்பாகும். இது தில்லியில் கட்டப்பட்டுள்ளது. ஒரு கால்வாய் நுழைவு வாயிலுக்கும் மற்றொன்று மூன்று அரண்மனைகளுக்கும் செல்கிறது. கல்லறை கட்டப்பட்ட முக்கிய மேடை ஒவ்வொரு பக்கத்திலும் 50 மீட்டர் (160 அடி) அளவிலுள்ளது. [4] உயரமான சுவர்கள் இடிந்த கல் கொத்துக்களில் கட்டப்பட்டுள்ளன. உட்புறத்தில் குறைக்கப்பட்ட வளைவுகள் உள்ளன. கோபுரங்கள் எண்கோண வடிவத்தில் உள்ளன. அதன் ஒட்டுமொத்த தளவமைப்பு நான்கு அறைகளைக் கொண்டுள்ளது. அவை பல அறைகளைக் கொண்டுள்ளன. மேலும் கிழக்கு நோக்கியுள்ள நுழைவாயில் சுவாரஸ்யமாக உள்ளது. வாயிலை ஒட்டிய கிழக்கு பக்கத்தில் பல குடியிருப்புகள், ஒரு மசூதி, மற்றும் ஒரு முற்றம் உள்ளன. அரண்மனைகள் மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு திசைகளில் அமைக்கப்பட்டுள்ளன. அவை முறையே ஜங்லி மகால் (காட்டிலுள்ள அரண்மனை), மோதி மகால் (முத்து அரண்மனை) மற்றும் பாதுசா பசந்த் (அரச்னுக்கு பிடித்தவை) என்று பெயரிடப்பட்டுள்ளன. நவாபின் குடும்பத்தினர் இந்த அரண்மனைகளில் வசித்து வந்தனர். இப்போது முழு நினைவுச்சின்னமும் இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தின் கட்டுப்பாஅரண்மனைகளில் தங்கள் அலுவலகங்களையும் பிரதான வாயிலுக்கு மேல் ஒரு நூலகத்தையும் வைத்திருக்கிறார்கள். [4]
2012 ஆகஸ்ட் 21, அன்று, அப்போதைய இந்திய சுகாதார அமைச்சராக இருந்த குலாம் நபி ஆசாத், வளாகத்தில் உள்ள ஒரு மசூதியில் ஈத் பிரார்த்தனை செய்ய அனுமதி கோரினார். இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தின் (ஏ.எஸ்.ஐ) சட்டத்தின்படி, "பாதுகாக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நேரத்தில் இந்த நடைமுறை நடைமுறையில் இருந்தாலொழிய, மத்திய பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களில் பிரார்த்தனை அனுமதிக்கப்படாது" என்று கூறப்பட்டுள்ளதால் மறுக்கப்பட்டது. இது தில்லியில் உள்ள இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தின் 174 பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களில் ஒன்றாகும் . முன்னதாக, இந்திய துணைத் தலைவர் அமீத் அன்சாரி கல்லறையில் "ஈத் பிரார்த்தனை செய்ய" திட்டமிட்டார், ஆனால் அது "கடைசி நேரத்தில்" ரத்து செய்யப்பட்டது. [9]
கல்லறையில் நான்கு பக்கங்களிலும் தலா நான்கு நீரூற்றுகள் உள்ளன. டிசம்பர் 2013 இல், "நீரூற்றுகளை செயல்படுத்துவதற்கான" ஒரு திட்டம் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது, ஏனெனில் அவை "வேலை செய்யும் நிலையில் உள்ளன" என்று அதிகாரிகள் நம்பினர். ஆனால் "சமீபத்திய அகழ்வாராய்ச்சியில்", நீரூற்றுக்கு அருகிலுள்ள வடிகால் அமைப்பை இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் கண்டுபிடித்தது. அமைப்பு "இவற்றை மறுதொடக்கம் செய்ய அவர்களுக்கு உதவும்". நான்கு நீரூற்றுகள் இருந்தாலும், இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தின்படி, பிரதான நுழைவாயிலுக்கு எதிரே உள்ள ஒன்று மட்டுமே செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் எனத்தெறிகிறது. [10]
ஜூன் 2014 இல், இந்திய தொல்பொருள் ஆய்வு மைய அவர்களின் அலுவலகத்தை கல்லறையிலிருந்து இந்திய தேசிய இராணுவ காலனிக்கு அருகிலுள்ள பொது அலுவலகங்களுக்கு மாற்றியது. [11] அதே ஆண்டு நவம்பரில் "நகரத்தில் [ தில்லி ] குறைவாக அறியப்பட்ட ஆனால் கண்டுபிடிக்கப்பட்ட நினைவுச்சின்னங்களை மேம்படுத்துவதற்காக" கல்லறையில் புதிய பார்வையாளர் பலகைகள் நிறுவப்பட்டன. [12]
2013 இல் ஹாலிவுட் படமான ஜாப்ஸ் இந்தக் கல்லறையில் படமாக்கப்பட்டது. [13]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.