ஜான் கால்வின்
From Wikipedia, the free encyclopedia
ஜான் கால்வின் (பிரெஞ்சு மொழி: Jean Calvin, (இயற்பெயர்: ஷெஹான் கோவென் [Jehan Cauvin]) (பிறப்பு: சூலை 10, 1509; இறப்பு: மே 27, 1564) புரட்டஸ்தாந்து சீர்திருத்த இயக்க காலத்தைச் சார்ந்த பிரான்சிய கிறித்தவ மேய்ப்பரும், தலைசிறந்த இறையியல் வல்லுநரும் ஆவார்.
கிறித்தவ இறையியல் சார்ந்த "கால்வினியம்" (Calvinism) என்னும் அமைப்பு உருவாவதற்கு ஜான் கால்வின் முக்கிய காரணமாக அமைந்தார். கால்வின் மறுமலர்ச்சி மனித நேய இயக்கத்தின் (Renaissance Humanism) பின்புலத்தில் ஒரு வழக்குரைஞராகத் தேர்ச்சி பெற்றிருந்தார். ஆனால் அவர் 1536இல் கத்தோலிக்க திருச்சபையினின்று பிரிந்தார்.
பிரான்சு நாட்டில் புரட்டஸ்தாந்து சபையினருக்கு எதிர்ப்பு எழுந்தபோது கால்வின் சுவிட்சர்லாந்தின் பாசல் நகருக்குத் தப்பிச் சென்றார். அங்கு கால்வின் "கிறித்தவ சமயக் கோட்பாடுகள்" (The Institutes of the Christian Religion) என்னும் நூலை 1536ஆம் ஆண்டு வெளியிட்டார்.
ஜெனீவா நகரில் கிறித்தவ சபையைச் சீர்திருத்தி அமைக்க வில்லியம் ஃபாரெல் என்பவர் கால்வினைக் கேட்டுக்கொண்டார். அவர்களுடைய கருத்துகளை ஜெனீவா நகர மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே இருவரும் வெளியேற்றப்பட்டனர். அப்போது மார்ட்டின் பூசெர் என்பவர் கால்வினை ஸ்ட்ராஸ்புர்க் நகருக்கு வருமாறு அழைத்தார். அங்கு கால்வின் பிரஞ்சு அகதிகள் கூடிய ஒரு சபைக்கு மேய்ப்பர் ஆனார். ஜெனீவாவில் திருச்சபைச் சீர்திருத்தம் நிகழ கால்வின் ஆதரவு அளித்தார். இறுதியில், ஜெனீவா சபையை வழிநடத்தும்படி அழைப்புப் பெற்றார்.