தாதாபாய் நௌரோஜி
இந்திய விடுதலைப் போராட்ட வீரர் / From Wikipedia, the free encyclopedia
தாதாபாய் நௌரோஜி (Dadabhai Naoroji, செப்டம்பர் 4, 1825 – ஜூன் 30, 1917) இந்தியாவின், அரசியல் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர். 1886, 1893, 1906 ஆகிய கால கட்டங்களில் இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகச் செயல்பட்டார். 1892 முதல் 1895 வரை ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இவரது பிரித்தானிய தன்மையற்ற ஆட்சியும், இந்தியாவின் வறுமையும் (Poverty and Un-British Rule in India) என்கிற நூல் பிரித்தானிய அரசின் கொடுங்கோன்மையைப் பற்றிய உண்மைகளை உலகிற்கு உணர்த்தியது.[1][2]
மாண்புமிகு தாதாபாய் நௌரோஜி | |
---|---|
தாதாபாய் நௌரோஜி c. 1889 | |
ஐக்கிய இராச்சியத்தின், நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1892–1895 | |
முன்னையவர் | பிரடெரிக் தாமஸ் பெண்டன் |
பின்னவர் | வில்லியம் மாஸ்ஸி-மெயின்வேரிங் |
தொகுதி | பின்ஸ்புரி |
பெரும்பான்மை | 5 |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1825-09-04)4 செப்டம்பர் 1825 நவ்சாரி, மும்பை மாகாணம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | (1917-06-30)30 சூன் 1917 (வயது 91) பம்பாய், மும்பை மாகாணம், பிரித்தானிய இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | லிபரல் கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | இந்திய தேசிய காங்கிரஸின் இணை நிறுவனர் |
துணைவர் | குல்பாய் |
வாழிடம் | இலண்டன் |
முன்னாள் கல்லூரி | மும்பை பல்கலைக்கழகம் |
வேலை | கல்வியாளர், அரசியல்வாதி, வர்த்தகர் |
கையெழுத்து | |
பெருந்தலைவர்களாகப் போற்றப்பட்ட பால கங்காதர திலகர், காந்தி உட்பட முன்னணித் தலைவர்கள் பலர் தங்களுக்கு வழிகாட்டியாக தாதாபாய் நௌரோஜியை குறிப்பிட்டுள்ளனர். காரணம், தாதாபாய் நௌரோஜியின் பொருளாதாரக் கருத்துகள் இன்றளவும் எண்ணிப் போற்றுகின்ற அளவிற்கு மிகவும் ஆழமான, அறிவு செறிந்த அணுகுமுறைகளைக் கொண்ட கருத்துகளாகும். இந்தியாவின் வள ஆதாரங்களையும், வரிவிதிப்பு, கடன் போன்ற முக்கிய நிதியியல் ஆதாரங்களையும், வெள்ளையர்கள் கொள்ளை கொண்டதைப் புள்ளியியல் ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டினார் தாதாபாய். 1870 ஆம் ஆண்டு, இந்தியாவின் தலா வருமானத்தைக் கணக்கிட்டு ரூ.20தான் என்று சுட்டினார். இந்தியாவிற்குள் இருவிதமான பொருளாதார அமைப்புகள் இயங்கி வருவதாகக் குறிப்பிட்டார். பிரித்தானிய ஆட்சியாளர்கள், இராணுவத்தினர், முதலாளிகள், வணிகர்கள் ஆகியோர் தங்களுடைய மூலதனம், ஊதிய வருமானம், வரி வருவாய், இலாபம், வட்டி, ஓய்வூதியத் தொகை ஆகியவற்றை இங்கிலாந்திற்கு எடுத்துச் சென்று செல்வத்தைக் குவிக்கிறார்கள் என்றும் கூறினார். இந்தியாவின் பொருளாதார வள ஆதாரங்கள் சுரண்டப்படுகின்றன என்று முதன் முதலில் பட்டியலிட்டார். இந்தியாவின் பொருளாதாரத்தின் மற்றொரு பிரிவில் ஏழைகள், விவசாயிகள் என்று சுரண்டப்பட்ட பெரும்பான்மை மக்கள் பெரும் துன்பத்திலும், வறுமையிலும் வாழ்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.
காங்கிரஸ் பேரியக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றிய பெருந்தலைவர் பால கங்காதர திலகர், தாதாபாய்தான் தனக்குத் தலைவர் என்றும் வழிகாட்டி என்றும் குறிப்பிட்டார். தாதாபாய் நௌரோஜி காலத்திலிருந்து நேரு காலம் வரை காங்கிரஸ் பேரியக்கத்தில் தீவிரவாத, மிதவாத மற்றும் பொதுவுடைமை இயக்கத் தலைவர்கள் ஈடுபட்டுப் பல்வேறு மாறுபட்ட கொள்கை, அணுகுமுறை வேறுபாடுகளுக்கு இடையிலும் இந்தியா விடுதலை அடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு பல்வேறு தியாகங்களைப் புரிந்தனர். நீண்ட இந்திய விடுதலைப் போராட்டத்தின் விளைவாகத்தான் இந்தியாவின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அந்நிய நாடுகளின் கட்டுப்பாடுகளுக்கு உட்படாத ஒரு சுயசார்பான பொருளாதாரம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்து அனைவர் மத்தியிலும் உருவாயிற்று.