பெண் உறுப்பு சிதைப்பு
From Wikipedia, the free encyclopedia
பெண் உறுப்பு சிதைப்பு (ஆங்கிலம்: Female genital mutilation) என்பது பெண்ணின் நரம்புகள் குவிந்த கந்து முனையை வெட்டி அகற்றுவதாகும். இது உகாண்டா, சோமாலியா உள்ளிட்ட ஆப்பிரிக்கப் பழங்குடி மக்களிடையே சிறுமிகளுக்கு நடைபெறும் ஒரு சடங்கு ஆகும். இது வழமையான அகற்றுவோரால் கத்தியைக் கொண்டு மயக்க மருந்து கொடுத்தோ, கொடுக்காமலோ செய்யப்படுகின்றது. ஆப்பிரிக்காவின் 27 நாடுகளிலும் இந்தோனேசியா, ஈராகி குர்திசுத்தான், யேமன் நாடுகளிலும் இது செறிவாக உள்ளது; ஆசியா, நடு கிழக்கு, மற்றும் உலகின் பிற பகுதிகளில் இவ்வினத்தோர் வாழுமிடங்களில் இது நடைபெறுகின்றது.[4]
உகாண்டாவில் சாலை அறிவிப்பு, 2004 | |||||||
வரையறுப்பு | உலக சுகாதார அமைப்பு, ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் மற்றும் ஐக்கிய நாடுகள் மக்கள்தொகை நிதியம் 1997இல் வரையறுத்தபடி "வெளிப்புற பெண்ணுறுப்பை பகுதியாகவோ முழுமையாகவோ நீக்குவதும் மருத்துவமல்லாத காரணங்களுக்காக பெண்ணுறுப்பிற்கு காயம் விளைவிப்பதும்" ஆகும்.[1] | ||||||
---|---|---|---|---|---|---|---|
நிலப்பகுதிகள் | ஆப்பிரிக்காவின் 27 நாடுகளில் செறிவாகவும், இந்தோனேசியா, ஈராக்கிய குர்திஸ்தான், யெமன் நாடுகளிலும்[2]:5[3] | ||||||
எண்ணிக்கை | இந்த 30 நாடுகளில் 200 மில்லியனுக்கும் கூடுதலான பெண்களும் சிறுமியரும், 2016 நிலவரப்படி[3] | ||||||
அகவை | பிறந்த சில நாட்களிலிருந்து பருவமடையும் வரை[2]:50 | ||||||
பரவியுள்ளமை | |||||||
| |||||||
|
கந்து அகற்றம் நடத்தப்பட்ட ஒரு பெண், வாழ்வில் ஒருபோதும் கலவி இன்பத்தை அனுபவிக்கவே முடியாது. அவள் கலவிக்குத் தகுதியானவளாக இருந்தாலும் அப்பெண்ணால் புணர்ச்சிப் பரவசநிலையை (Orgasm) அடைய முடியாது. இந்த வழக்கத்தால் கந்து அகற்றப்பட்ட சிறுமிகளுக்கு உடல் மற்றும் மன ரீதியான பல பிரச்சினைகள் இருப்பதாக அறியப்பட்டுள்ளது.[5]
ஆப்பிரிக்காவில் 28 நாடுகளில் இந்த வழக்கம் தற்போதும் பின்பற்றப்படுகிறது. 13 கோடி பெண்களுக்குக் கந்து அகற்றல் நடத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது. மேலும் நாளொன்று 6000 பெண்கள் இதற்கு ஆட்படுவதாகச் சொல்கிறது. பிளேடு, கத்தி, உடைந்த கண்ணாடிச் சில்லுகள் மூலம்தான் கந்து அகற்றப்படுகிறது.[6]
சேதப்படுத்தும் முறை இனக்குழுக்களைப் பொறுத்து மாறுபடுகின்றது. பெண்குறித்தலை மற்றும் பெண்குறிக் காம்பு நீக்கம், உட்புற சிற்றுதடுகள் நீக்கம், வெளிப்புற பேருதடுகள் நீக்கம் மற்றும் பெண்குறி மூடுதல் என பல்வேறு நிலைகளில் சேதப்படுத்தப்படுகின்றன. கடைசி முறையில் பெண்ணின் சிறுநீர்/விடாய் பாய்மம் செல்ல சிறுதுளை மட்டுமே விடப்படுகின்றது; பாலுறவிற்காகவும் குழந்தைப் பிறப்பிற்காகவும் யோனி தேவையானயளவிற்கு திறக்கப்படுகின்றது. செய்முறைக்கேற்ப உடல்நலம் பாதிக்கப்படுகின்றது. அடிக்கடி நேரும் தொற்றுகள், நீங்கா வலி, கட்டிகள், குழந்தைப் பேறின்மை, குழந்தைப் பிறப்பின்போது சிக்கல்கள், உயிராபத்தான குருதிப்போக்கு என்பவை சிலவாம்.[7] இதனால் எந்தவொரு உடல்நலச் சீரும் இல்லை.[8]
பாலினச் சமனிலையின்மை, மகளிர் பாலுணர்வைக் கட்டுப்படுத்துதல், கற்பு, தூய்மை, அழகியல் போன்ற கருத்தியல்கள் இதன் பின்னணியாக உள்ளன. இது பொதுவாக தாய்மார்களால் செய்யப்படுகின்றது. தங்கள் மகள்களுக்கும் பேத்திகளுக்கும் சேதப்படுத்தாவிட்டால் சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்படுவார்களோ என்ற அச்சமும் செய்தமையால் பெருமையும் இதற்கு தூண்டுதலாக உள்ளது.[n 1] 2016 நிலவரப்படி கிட்டத்தட்ட 30 நாடுகளில் குறைந்தது 200 மில்லியன் பெண்களும் சிறுமியரும் இதற்கு ஆளாகியுள்ளனர்.[3] ஐக்கிய நாடுகள் மக்கள்தொகை நிதியத்தின் 2010ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி பாதிக்கப்பட்ட பெண்களில் 20% வரை பெண்குறி அடைக்கப்பட்டுள்ளனர்; இது வடகிழக்கு ஆப்பிரிக்காவில் குறிப்பாக சீபூத்தீ, எரித்திரியா, எதியோப்பியா, சோமாலியா மற்றும் வடக்கு சூடான் நாடுகளில் கடைபிடிக்கப்படுகின்றது.[10][11]:13
பெண்ணுறுப்புச் சிதைப்பு இது கடைபிடிக்கப்படும் பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது அல்லது மட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும் இச்சட்டங்கள் தீவிரமாக செயல்படுத்தப்படுவதில்லை. 1970களிலிருந்து இதை கைவிடத் தூண்டும் பன்னாட்டு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன; ஐக்கிய நாடுகள் பொதுச் சபை, 2012இல் பெண்ணுறுப்புச் சேதம் மாந்தவுரிமை மீறலாக அறிவித்து இதற்கெதிரான முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது.[12]