From Wikipedia, the free encyclopedia
போகுடு கான் (Bogd Khan, மங்கோலிய மொழி: Богд Живзундамба Агваанлувсанчойжинямданзанванчүг, Bogd Jivzundamba Agvaanluvsanchoijinyamdanzanvanchüg; 1869–1924), சீனப் புரட்சிக்குப் பிறகு சிங் அரசமரபிடமிருந்து விடுதலை பெற்றதாக அறிவித்துக் கொண்டு திசம்பர் 29, 1911இல் மங்கோலிய ககனாக (அரசராக) அரியணை ஏறியவராவார். இவர் திபெத்தில் பிறந்தவர். 8ஆவது ஜெப்ட்சுந்தம்பா குடுக்டுவான இவர் திபெத்திய பௌத்த அடுக்கதிகாரத்தில் தலாய் லாமாவையும் பஞ்சென் லாமாவையும் அடுத்த மூன்றாமிடத்தில் உள்ளார்; னவே இவரை "போக்டொ லாமா" எனவும் அழைக்கின்றனர். மங்கோலியாவின் திபெத்திய பௌத்த சமயத் தலைவராக இருந்தார். இவரது மனைவி சென்டீன் டொண்டொகுலாம், ஏக் தாகினா ("டாகினி அன்னை")யை போதிசத்வா வெள்ளைத் தாராவின் அவதாரமாகக் கருதினர்.
போகடு கான் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
மங்கோலியாவின் ககன் (அரசர்) | |||||||||
ஆட்சிக்காலம் | 29 திசம்பர் 1911 – 1919 1921 – 20 மே 1924 | ||||||||
அரியணை ஏறுதல் | 29 திசம்பர் 1911 | ||||||||
முன்னையவர் | எஜெய் கான் | ||||||||
பின்னையவர் | குடியரசாக அறிவிப்பு | ||||||||
பிறப்பு | c. 1869 திபெத்து | ||||||||
இறப்பு | 20 மே 1924 (அகவை 54–55) உலான் பத்தூர், மங்கோலியா | ||||||||
துணைவர் | சென்டீன் டொண்டொகுலாம் | ||||||||
| |||||||||
மதம் | திபெத்திய பௌத்தம் |
பின்னாள் போகடு கான் 1869இல் திபெத்திய அலுவலர் குடும்பமொன்றில் பிறந்தார்.[2] 13வது தலாய் லாமா, பஞ்சென்லாமா முன்னிலையில் இச்சிறுவன் போகடு கெகனின் அவதாரமாக கண்டறியப்பட்டார்.[3] இந்தப் புதிய போகடு கெகென் மங்கோலியாவின் தலைநகர் ஊர்காவிற்கு 1874இல் வந்தடைந்தார். இதன்பிறகு தம் வாழ்நாள் முழுமையும் மங்கோலியாவிலேயே வாழ்ந்திருந்தார்.
அந்நாளைய கூற்றின்படி,
"...லாமாக்களின் கையில் பொம்மையாக இவர் செயல்படவில்லை, ஆனால் அவர்களை தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். இளமையிலிருந்தே மங்கோலியாவில் செங்கிசு கான் பேரரசை மீட்பதையும் சீனர்களிடமிருந்து விடுதலை பெறுவதையும் விரும்பினார். உள்ளூர் இளவரசர்கள் இவரைக் கண்டு அஞ்சினர், ஆனால் பொதுமக்கள் அவரை விரும்பினர்.... தன்னிச்சையான, அறிவார்ந்த அரசரை திபெத்தும் சீனாவும் ஏற்கவில்லை".[4]
இதனால் இளமையிலிருந்தே சிங் அலுவலர்களின் கவனத்தை ஈர்த்தவராக போகடு கெகென் இருந்தார். பின்னர் மங்கோலியப் பொதுவுடைமையாளர்களின் பரப்புரைகளில் இவரை விமரிசித்து வந்தனர்; இவர் குழந்தைப் பாலியலாளர் என்றும் ஒழுக்கமற்றவர் என்றும் குற்றம் சாட்டினர். இருப்பினும் மங்கோலிய, உருசிய காப்பகங்களில் உள்ள ஆவணங்களை ஆய்வு செய்ததில் இதற்கான சான்றேதும் கிட்டவில்லை.[5][6]
துறவியாக, போகடிற்கு அதிகாரமேதும் இருக்கவில்லை; இருப்பினும் சில எதிரிகள் இறை நிந்தனைக்காக கொல்லப்பட்டனர். போலந்து பயணி பெர்டினண்டு அந்தோணி ஓசென்டொவ்சுக்கி "இளவரசர்களின் ஒவ்வொரு எண்ணமும், நகர்வும் அவருக்கெதிரான எந்தச் சதியும் அவருக்குத் தெரிந்திருந்தது; எதிராளி அன்புடன் ஊர்காவிற்கு அழைக்கப்பட்டு பின்னர் உயிருடன் அனுப்பப்படவில்லை." என பதிந்துள்ளார்.[7] இருப்பினும் ஓசென்டொவ்சுக்கிக்கு போகடு கெகெனுடன் இருந்த அணுக்கம் குறித்து அரவது நூல்களிலிருந்தும் கையெழுத்துப் பிரதிகளிலிருந்தும் உறுதி செய்யப்படவில்லை.[8]
1919இல் சீனத் துருப்புகள் நாட்டைக் கைப்பற்றியபோது போகடு கெகென் பதவியிழந்தார். 1920இல் உங்கெர்ன் பிரபுவின் படைகள் ஊர்காவை மீட்கத் தவறியபோது போகடு வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டார். 1921இல் உங்கெர்ன் இவரை விடுவித்து அரியணை ஏற்றினார்.[9] 1921இல் ஏற்பட்ட மங்கோலியப் புரட்சியை அடுத்து போகடு, 1924இல் தமது மரணம் வரை, கட்டுப்படுத்தப்பட்ட அரசதிகாரத்துடன் தொடர்ந்திருக்க அனுமதிக்கப்பட்டார்.[10][11] 1923இல் அவரது மனைவி மரணமடைந்தார்.
நவம்பர் 26, 1924இல் போகடின் மறைவிற்குப் பிறகு அரசு அவரது அதிகாரத்தை மேற்கொண்டது; மங்கோலிய மக்கள் குடியரசு உருவானது.[12]
சோவியத் சார்பு பொதுவியலாளர்கள் பெரும்பான்மையான மக்கள் குடியரசில் அவரது அவதாரமாக வேறொருவர் கண்டறியப்படுவது தடுக்கப்பட்டது. இருப்பினும், அதே ஆண்டு வடக்கு மங்கோலியாவில் ஜெப்ட்சிந்தம்பா குடுக்டு மீளவும் அவதரித்திருப்பதாக வதந்திகள் கிளம்பின.[13] ஆனால் எந்தவொரு மரபுசார் தேடலும் நடத்தப்படவில்லை. மீண்டும் 1925இல் மற்றொரு வதந்தி பரவியது. நவம்பர் 1926இல் இத்தகையத் தேடல்களை தடை செய்து மங்கோலிய மக்கள் குடியரசின் நாடாளுமன்றம் சிறப்புத் தீர்மானத்தை நிறைவேற்றியது.[6] இறுதியான தடை ஐந்தாவது நாடாளுமன்றத்தால் 1928இல் நிறைவேற்றப்பட்டது.[14]
இலுப்பினும், அடுத்த போகடு கெகெனாக திபெத்தின் லாசாவில் 1932இல் பிறந்த சிறுவன் கண்டறியப்பட்டான். இது சோவியத் ஒன்றியத்தின் கலைக்கப்படும் வரையும் 1990இல் மங்கோலியாவில் ஏற்பட்ட சனநாயக புரட்சி வரையும் வெளியுலகிற்கு அறிவிக்கப்படவில்லை. 1991இல் 14வது தலாய் லாமா டென்சின் கியாட்சோ தரம்சாலாவில் 9ஆவது ஜெப்ட்சிந்தம்பா குடுக்டுவை பதவியில் அமர்த்தினார்; இவர் 1999இல் உலான் பத்தூரில் அரியணை ஏறினார்.
போகடு கானின் குளிர்கால அரண்மனை பாதுகாக்கப்பட்டு உலான் பத்தூரிலுள்ள முதன்மை சுற்றுலாத் தலமாக விளங்குகின்றது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.