பத்தேப்பூர் சிக்ரி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஃபத்தேப்பூர் சிக்ரி (Fatehpur Sikri, Hindi: फतेहपूर सिकरी, Urdu: فتحپور سیکری) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நகரம் முகலாயப் பேரரசர் அக்பரால் கிபி 1570 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இது 1571 ஆம் ஆண்டு முதல் 1585 ஆம் ஆண்டுவரை பேரரசின் தலைநகரமாகச் செயற்பட்ட இது பின்னர் கைவிடப்பட்டதற்கான காரணங்கள் தெளிவாகத் தெரியவரவில்லை. எஞ்சியிருக்கும் அரண்மனையும், மசூதியும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வருவதோடு யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.[1][2]
Remove ads
வரலாறு
முகலாயப் பேரரசரான அக்பரின் தந்தை உமாயூனுக்குப் பின்னர் அக்பர் பேரரசர் ஆனார். தனது தந்தையும் பாட்டனும் இருந்து அரசாண்ட ஆக்ராவிலேயே அவரும் இருந்து ஆட்சி நடத்தினார். 1560 களில் ஆக்ரா கோட்டையை அக்பர் மீளமைத்தார். அவரது இந்து மனைவியான மரியம்-உஸ்-சமானி மூலமாக அவருக்கு முதலில் ஒரு மகனும் பின்னர் இரட்டைக் குழந்தைகளும் பிறந்தன. ஆனால், அந்த இரட்டைக் குழந்தைகள் இறந்துவிட்டன. அக்பர் சூஃபி பெரியாரான சலிம் சிசுத்தி என்பவருடன் இது குறித்து ஆலோசித்தார். இந்தப் பெரியார் ஆக்ராவுக்கு அருகில் இருந்த சிக்ரி என்னும் சிறிய நகரில் ஒதுங்கி வாழ்ந்து வந்தார். சலிம், அக்பருக்கு இன்னொரு மகன் பிறப்பான் என்று எதிர்வு கூறினார். அவ்வாறே 1569 இல் ஒரு மகன் சிக்ரியில் பிறந்தான். பெரியாரைக் கௌரவிக்குமுகமாக அவனுக்கு சலிம் எனப் பெயரிடப்பட்டது. இக் குழந்தையே பின்னர் செகாங்கீர் என்னும் பெயருடன் பேரரசனாகியது. அடுத்த ஆண்டில், அப்போது 28 வயதினராக இருந்த அக்பர், அப் பெரியாரை கௌரவிப்பதற்காக, சிக்ரியில் ஒரு அரண்மனையையும், அரச நகரத்தையும் அமைக்க எண்ணினார். சலிம் சிசுட்டியின் சமாதி, ஜுமா மசூதியின் வளாகத்துக்கு உள்ளேயே அமைந்துள்ளது.
"ஃப்ஃத்தே" என்னும் சொல் அரபு மொழியில் "வெற்றி" என்னும் பொருள் கொண்டது. உருது, பாரசீக மொழி ஆகியவற்றிலும் இதே பொருளே. ஃபத்தேப்பூர் சிக்ரியும், ஆக்ராவும் தலைநகரத்துக்குரிய கடமைகளைப் பகிர்ந்து செய்துவந்தன. பேரசின் நிதிக் கழஞ்சியத்தின் ஒரு பகுதி பாதுகாப்புக்காக சிக்ரியின் செங்கோட்டையில் வைக்கப்பட்டிருந்தது. தேவை ஏற்படும்போது விரைவாகவே 28 மைல்களுக்கு அப்பால் உள்ள ஆக்ராவுக்குக் கொண்டுபோக முடியும்.

ஃபத்தேப்பூர் சிக்ரியிலேயே அக்பரும் அவரது புகழ் பெற்ற அரச சபையினருமாகிய ஒன்பது மணிகள் பற்றிய கதை உருவானது. இங்கேயே, நிலவரி, நாணயம், படை ஒழுங்குகள், மாகாண நிர்வாகம் என்பவை தொடர்பான புதுமைகள் உருவாயின.
1585 ஆம் ஆண்டில் ஃபத்தேப்பூர் சிக்ரி கைவிடப்பட்டு தலைநகரம் லாகூருக்கு மாற்றப்பட்டது. இதற்கான காரணம் இன்னும் தெளிவற்றதாகவே உள்ளது. நீர் வளங்கள் வரண்டு போனது ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் அல்லது ஆப்கானிலிருந்தும், பாரசீகத்திலிருந்தும் வரக்கூடிய படையெடுப்புகளுக்கு அண்மையாக இருப்பதற்காக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
பேரரசர் அக்பர் விட்டுச்சென்ற கட்டிடக்கலை மரபுகளின் உச்சம் ஃபத்தேப்பூர் சிக்ரி எனக் கருதப்படுகிறது. முகலாயர்களுக்கே உரித்தான ஆக்கத்திறன், அழகியல் என்பன சார்ந்த அக்பரின் உணர்வுகளை இங்குள்ள பல அரண்மனைகளும், மண்டபங்களும், மசூதிகளும் திருப்திப்படுத்தின எனலாம். இது ஒரு உலக பாரம்பரியக் களமாக யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
Remove ads
மேலும் படங்கள்
- ஃபத்தேப்பூர் சிக்ரியின் கட்டிடம்.
- கேட்போர் மண்டபங்கள். அனுப் தாலாவோ இடப்புறத்தில் உள்ளது.
- ஐந்து மாடிகள் கொண்ட பாஞ்ச் மகால்
- செதுக்கு வேலைப்பாடு
- ஃபத்தேப்பூர் சிக்ரியினூடான காட்சி
- "திவான்-இ-காசு" என்னும் காடிடத்தின் நடுத் தூண்.
- ஃபத்தேப்பூர் சிக்ரியில் உள்ள ஒரு மரம்.
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads