புனித ஜார்ஜ் கோட்டை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
புனித ஜார்ஜ் கோட்டை (Fort St. George) இந்தியாவில் பிரித்தானியரின் முதலாவது கோட்டையாகும்.பிரான்சிஸ்டே, ஆண்ட்ரூ கோகன் என்ற ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த இரு அதிகாரிகளின் முயற்சியால் 1639 ஆம் ஆண்டில் கரையோர நகரான மதராசில் (இன்றைய சென்னை நகரம்) கட்டத் தொடங்கப்பட்டது. வெறுமனே கிடந்த இப் பகுதியில் கோட்டை கட்டப்பட்டதால், புதிய குடியேற்றங்களும், வணிக நடவடிக்கைகளும் நடைபெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டது. இன்றைய சென்னை நகரம் இக் கோட்டையைச் சுற்றியே உருவானது எனக் கூற முடியும்.


1600 ஆம் ஆண்டில் வணிக நோக்குடன் இந்தியாவுக்குள் நுழைந்த பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனி சூரத்தில் அனுமதி பெற்ற வணிக நடவடிக்கைகளைத் தொடங்கியது. இதன் வணிகக் கப்பல்களையும், வாசனைப் பொருள் வணிகத்தில் அவர்களுடைய நலன்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காக, மலாக்கா நீரிணைக்கு அண்மையில் துறைமுகம் ஒன்றின் தேவையைக் கம்பனியினர் உணர்ந்தனர். மேற்குக் கடற்கரைப் பகுதியில் மதராஸ்பட்டினம் அல்லது சென்னபட்டினம் என அழைக்கப்பட்ட ஒரு நிலப்பகுதியை அவர்கள் அப்பகுதித் தலைவர் ஒருவரிடமிருந்து விலைக்கு வாங்கி அதிலே ஒரு துறைமுகத்தையும், கோட்டை ஒன்றையும் கட்டத் தொடங்கினர். புனித ஜார்ஜ் கோட்டை நாளான ஏப்ரல் 23 ஆம் தேதி கட்டி முடிக்கப்பட்டதால், இதற்கு புனித ஜார்ஜ் கோட்டை எனப் பெயரிடப்பட்டது.
கடலையும், சில சிறிய மீனவர் ஊர்களையும் நோக்கிக் கொண்டிருந்த இக் கோட்டைப் பகுதி விரைவிலேயே வணிக நடவடிக்கைகளின் ஒரு மையமானது. இக் கோட்டை, இப் பகுதியிலே ஜார்ஜ் டவுன் என்னும் புதிய குடியேற்றப் பகுதி உருவாகக் காரணமாயிற்று. இது அங்கிருந்த ஊர்களையெல்லாம் தன்னுள் அடக்கி வளர்ந்து சென்னை நகரம் உருவாக வழி வகுத்தது. இது கர்நாடகப் பகுதியில் பிரித்தானியரின் செல்வாக்கை நிலை நிறுத்தவும், ஆர்க்காடு மற்றும் ஸ்ரீரங்கப்பட்டின அரசர்களையும், பாண்டிச்சேரியில் இருந்த பிரெஞ்சுக்காரரையும் கண்காணிப்பில் வைத்திருக்கவும் உதவியது. 6 மீட்டர் உயரமான சுவர்களைக் கொண்டிருந்த இக் கோட்டை, 18 ஆம் நூற்றாண்டில் இடம்பெற்ற பல தாக்குதல்களைச் சமாளித்தது.
1640 முதல் தற்காலம் வரை இக்கோட்டையின் உட்பகுதியில் பல கட்டடங்கள் எழுந்துள்ளன. ஆங்கில ஆளுநர்களின் தலைமையிடமாக விளங்கிய இக்கோட்டைப் பகுதியில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம், அமைச்சர் அலுவலகங்கள், சட்டமன்றம் ஆகியவை உள்ளன. கோட்டைக்கு உள்ளே வர மூன்று வாயில்கள் உள்ளன. கோட்டையைச் சுற்றி அகழி உள்ளதை இன்றும் காணலாம். இவை தவிர புனித மேரி கிறித்தவ ஆலயம், கிளைவ் மாளிகை, மற்றும் கோட்டை அருங்காட்சியகம்[2] ஆகிய மூன்று முக்கியக் கட்டடப் பகுதிகள் உள்ளன.[3]
Remove ads
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads