திருமருகல் இரத்தினகிரீசுவரர் கோயில்
தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருமருகல் இரத்தினகிரீசுவரர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 80ஆவது சிவத்தலமாகும்.[1]
Remove ads
அமைவிடம் மற்றும் சிறப்பு
சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம் வட்டத்தில் திருமருகல் கிராமத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் பாம்பு கடித்து இறந்த வணிகனை சம்பந்தர் "சடையாய் எனுமால் " பதிகம் பாடி உயிர்த்தெழச் செய்தார் என்பது தொன்நம்பிக்கை. தாமன் என்ற வணிகன் தன் பெண் மக்கள் எழுவரில் ஒருத்தியை தன் மருமகனுக்குக் கொடுப்பதாக வாக்களித்துவிட்டு, பருவம் வந்த காலத்து ஒப்வொருத்தியாகப் பிறருக்கு மணம் செய்து கொடுத்து வந்தான். அதனை உணர்ந்த ஏழாமவள் தன்னையும் பிறருக்கு மணம் செய்வித்து தன் தாய் மாமனை தந்தை ஏமாற்றுவார் என்றெண்ணி, தாய் தந்தைக்குத் தெரியாமல் தன் தாய் மாமனோடு வீட்டை விட்டு வெளியேறினாள். இருவரும் திருமருகலை அடைந்தபோது இரவு நேரம் ஆதலால் இங்கிருந்த ஒரு மண்டபத்தில் தங்கினர். அன்றிரவு செட்டிக் குமரனை வினைவயத்தால் ஒரு பாம்பு தீண்டியது. அவன் இறந்தான். செட்டிப்பெண் இதனை கண்டு இறைவனை நோக்கி முறையிட்டு புலம்பினாள், அப்போது தரிசனத்திற்காக இத்தலத்திற்கு வந்திருந்த திருஞானசம்பந்தப் பெருமானின் திருவுள்ளத்தில் செட்டிப்பெண்ணின் அழுகை ஒலி அருள் பிறக்கச் செய்யவே, “ சடையாயெனுமால் சரண்நீயெனுமால் ” எனும் பதிகம் பாடி இறந்த வணிகனை உயிர்ப்பித்தருளி அவர்களுக்கு திருமணம் செய்வித்து வைத்ததனால் இத்தலம் திருமண நடை நீக்கும் தலமாக விளங்குகிறது. இன்றளவும் திருமணம் தடை நீங்க பரிகார அர்ச்சனை செய்யப்படுகிறது. அவ்வாறு செய்வதால் திருமண தடை நீங்கி திருமணம் நடைபெறும் என்பது சிறப்பு.
Remove ads
இறைவன், இறைவி
இக்கோயிலில் உள்ள இறைவன் மாணிக்க வண்ணர்,இறைவி வண்டுவார் குழலி.
அமைப்பு
கோயிலின் முன்பாக குளம் (லெட்சுமி தீர்த்தம்) உள்ளது. ராஜ கோபுரத்தை அடுத்து கொடி மர விநாயகரைக் கொண்ட கொடி மரம் உள்ளது. மூலவர் ரத்னகிரீஸ்வரர் சன்னதியின் வலது புறம் சோமாஸ்கந்தர் சன்னதி உள்ளது. மூலவர் சன்னதியின் நுழைவாயிலின் வலப்புறம் சனீஸ்வரர், உற்சவ விநாயகர், இடது புறம் செட்டிப்பெண், செட்டிப்பிள்ளை ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றில் செட்டிப்பெண், செட்டிப்பிள்ளை திருமண மண்டபம், பைரவர், சந்திரன், சூரியன், நவக்கிரகம், நாகர், செட்டிப்பெண், செட்டிப்பிள்ளை, சம்பந்தர், சண்டிகேஸ்வரர் சன்னதிகளும், அடுத்து நடராஜர் சன்னதியும், வண்டுவார்குழலி (ஆமோதளநாயகி) சன்னதியும் உள்ளன. அம்மன் சன்னதியின் திருச்சுற்றில் யமுனா சண்டிகேஸ்வரி சன்னதி உள்ளது. மூலவர் கோஷ்டத்தில் கணபதி, தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மா, துர்க்கை உள்ளனர். வெளிச்சுற்றில் சாஸ்தா, பிராம்ஹி, மாஹேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராகி, மாஹேந்திரி, சாமுண்டி, சுரம் தீர்த்த விநாயகர், சந்தான விநாயகர் ஆகியோர் உள்ளனர். மருகலுடையார்-சவுந்தரநாயகி சன்னதியும் இச்சுற்றில் உள்ளது. அதற்கு முன் நந்தி பலிபீடத்துடன், யாகசாலை, பராசரர் பூசித்த லிங்கம், காசி விசுவநாதர் உள்ளிட்டோர் உள்ளனர். 11 செப்டம்பர் 1974இல் குடமுழுக்கு ஆனதற்கான கல்வெட்டு உள்ளது.
மேற்கோள்கள்
இவற்றையும் பார்க்க
படத்தொகுப்பு
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads