பிக்கு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
புத்த பிக்குகள் பௌத்தம் உலகம் முழுக்க பரவுவதற்குக் காரணமாயிருந்தவர்கள். பெளத்த மதம் காட்டும் வழிகாட்டுதல்கள் யாவும் சுய மறுப்பையும் உலகு துறப்பையுமே அடிப்படையாகக் கொண்டுள்ளன. ஆகையால் புத்த பிக்குகளுக்கு பல்வேறு கடினமான பயிற்சிகளை புத்தம் அறிமுகப்படுத்தியது.

நான்கு விசயங்களை விட்டு முற்றிலும் விலகியிருத்தல் வேண்டும்.
- ஆண்-பெண் கலவி கூடாது.
- புல்லைக் கூட திருடக் கூடாது.
- உயிருள்ள சின்னசிறு உயிருக்கும் தீமை பயத்தலாகாது.
- இயற்கைக்கு மாற்றாக அருஞ்செயலைத் தன்னால் செய்ய இயலுமென்று காட்டலாகாது.
துறவற வாழ்க்கையை மேற்கொண்ட பிறகு புத்தாடைகளை அணியலாகாது. குப்பைகளில் வீசப்பட்ட பழந்துணிகளையும் பிணங்களைப் போர்த்திய ஆடைகளையும் பொறுக்கி அவற்றை விரிப்பாக்கிக் கொள்ள வேண்டும். இத்தகைய கந்தலாடைகளும் மூன்றுக்கு மேல் இருக்கக் கூடாது. வருமானம் ஈட்ட எந்த முயற்சியும் செய்யக் கூடாது. பிச்சைப் பாத்திரமேந்தி (திருவோடு) வீடு வீடாகச் சென்று பிச்சை எடுக்க வேண்டும். புத்த பிக்குகளைப் பொறுத்தவரை இதுவே தூய உணவாகும். புத்த பிச்சைகள் என்பதே மருவி புத்த பிக்குகள் என மாறியிருக்க வேண்டும்[1].
Remove ads
தமிழ்நாட்டில் பிக்குகள்
தமிழகத்தில் புத்த பிக்குகள் ஆங்காங்கிருந்த அரசர், வணிகர், செல்வந்தர் முதலானவர்களின் பொருளுதவி பெற்று புத்த விகாரைகளையும், பள்ளிகளையும், சேதியங்களையும், ஆசிரமங்களையும் நிறுவினார்கள்.
மடங்களில் வாழும் பௌத்தத் துறவிகள் மருத்துவம் பயின்று, தம்மிடம் வரும் பிணியாளர்களுக்கு இலவசமாக மருந்து கொடுத்துத் தொண்டு செய்து வந்தார்கள். அன்றியும் தமது பள்ளிகளில் பாடசாலைகளை அமைத்துச் சிறுவர்களுக்குக் கல்வியையுங் கற்பித்து வந்தார்கள். பௌத்தருக்குரிய நன்னாட்களில் நாட்டுமக்களைத் தமது பள்ளிக்கு அழைத்து, மணல் பரப்பிய முற்றங்களில் அமரச் செய்து, திரிபிடகம், புத்த ஜாதகக் கதைகள்' புத்த சரித்திரம் முதலான நூல்களை ஓதிப் பொருள் சொல்லியும் மக்களுக்கு மதபோதனை செய்துவந்தனர். மற்றும் குருடர், செவிடர், முடவர் முதலானவருக்கும், ஏழைகளுக்கும் உணவு கொடுத்துதவ அறச்சாலைகளை அரசர் செல்வந்தர் முதலானோர் உதவி பெற்று நிறுவினார்கள்.[2]
பெண் புத்த பிக்குகள்
ஆரம்ப கால புத்த மதத்தில் பெண் புத்த பிக்குகள் இல்லை. பிற்காலத்தில் பெண்களும் புத்த பிக்குகள் ஆயினர். மணிமேகலை காப்பிய நாயகி புத்த பிக்குணி ஆவாள். மணிமேகலை கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இருந்த கோவலன்-கண்ணகி இணையரின் மகள் ஆவாள். பௌத்த மதம் புகுந்து துறவு பூண்டு, புகார்ப்பட்டினத்துக்கு அருகில் இருந்த சக்கரவாளக் கோட்டத்தைச் சேர்ந்த உலக அறவி என்னும் அம்பலத்தில் இருந்த குருடர், முடவர், பசிநோய்கொண்ட வறியவர் முதலியவர்களுக்கு உணவு கொடுத்து ஆதரித்த செய்தி மணிமேகலை 17ஆம் காதையில் காணப்படுகிறது. அன்றியும், மணிமேகலை சிறைக்கோட்டம் சென்று சிறையில் வாடும் மக்களுக்கு உணவு கொடுத்து உண்பிக்க, அதனை அறிந்த சோழ அரசன் அவளை அழைத்து, நான் உனக்குச் செய்யவேண்டுவது என்ன என்று கேட்க, அவள், சிறைக் கோட்டத்தை அறக்கோட்டமாக்க வேண்டும் என்று கேட்க, அரசனும் அவ்வாறே சிறைக் கோட்டத்தை அறக்கோட்டமாக்கிக் கொடுத்தான் என்று மணிமேகலை 19ஆம் காதையில் உள்ளது.
Remove ads
மேற்கோள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads