பெரியாரின் கொள்கைகள்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பெரியார் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு முக்கிய சமூக சீர்திருத்தவாதி, செயற்பாட்டாளர், சிந்தனையாளர் ஆவார். அவர் சமூக நீதி, சாதிய எதிர்ப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, இறைமறுப்பு, பகுத்தறிவு, பெண்கள் முன்னேற்றம், கல்வி ஆகியவை சார்ந்து கொண்டிருந்த சிந்தனைகளே பெரியார் கொள்கைகள் அல்லது பெரியார் சிந்தனைகள் என்றழைக்கப்படுகின்றன. இவரின் சமுதாயப் பங்களிப்பைப் பாராட்டி யூனஸ்கோ நிறுவனம் புத்துலக தொலை நோக்காளர், தென்கிழக்காசியாவின் சாக்ரடிஸ், சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, அறியாமை மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயங்கள், மட்டமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி என்று பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது.[சான்று தேவை]இவருடைய பகுத்தறிவு, சுயமரியாதைக் கொள்கைகள் தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும், தமிழக அரசியலிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியவை.[சான்று தேவை]

Remove ads

பெரியார் சிந்தனைகள் தொகுப்பு நூல்கள்

ஆனைமுத்துவின் தொகுப்பு

‎ஆனைமுத்து என்பவர் பெரியார் சிந்தனைகள் என்ற நூல் தொகுப்பை 1973 ஆம் ஆண்டு வெளியிட்டார். செப்டம்பர் 3, 1973இல் இதைப் பதிப்பிக்கும் உரிமையை பெரியார் திருச்சி சிந்தனையாளர் கழகத்துக்கு அளித்தார். அதன் இரண்டாம் பதிப்பு மார்ச், 2010இல் வெளிவந்துள்ளது. சென்னை பெரியார் ஈ. வெ. இராமசாமி - நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளை வெளியிட்டுள்ள இந்த இரண்டாம் பதிப்பு நூல் பொருளடிப்படையிலான ஏழு தொகுதிகளாக மொத்தம் 20 நூல்களைக் உள்ளடக்கியவையாகும். பெரியார் ஈ. வெ. ரா. சிந்தனைகள் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் பெரியார் நடத்திய இதழ்களிலும் அவரது சமகால இதழ்களிலும் வெளிவந்தவை. விருதுநகர் முத்துநாடார் நடத்திய நாடார் குலமித்திரன் (1922) இதழில் வெளியான பெரியார் தொடர்பான கட்டுரைகள் முதன்முதலில் இத்தொகுப்பில் சேர்ந்துள்ளன. 1925இல் தொடங்கி 1949 வரை சிறிது இடைவெளியுடன் வெளிவந்த குடிஅரசுவின் பெரும் பகுதி, விடுதலை (1935)யின் சில இதழ்கள், புரட்சி, பகுத்தறிவு இதழ்களின் குறிப்பிட்ட கட்டுரைகள், சுதேசமித்திரன் (1923), The Hindu (1924), Revolt (1928), திராவிடன் (1929), உண்மை (1970) சண்டமாருதம், புதுவை முரசு, கணையாழி என்று சில குறிப்பிட்ட இதழ்களின் ஓரிரு கட்டுரைகள் ஆகியவை இத்தொகுப்பில் உள்ளன. குடிஅரசு இதழ்களே இத்தொகுப்பில் அதிகமாக இருக்கின்றது.[1]

பெரியார் திராவிடர்க் கழகத்தின் தொகுப்பு

1925 ஆம் ஆண்டு முதல் 1938 ஆம் ஆண்டு வரை "குடி அரசு' இதழில் பெரியார் எழுதிய எழுத்துகள், பேச்சுகளை 27 தொகுதிகளாகத் தொகுத்து, ரிவொல்ட் எனும் ஒரு தொகுப்பையும் சேர்த்து 2008 செப்டம்பரில் வெளியிட பெரியார் திராவிடர்க் கழகம் முடிவு செய்தது. பெரியாரின் எழுத்துகள், பேச்சுகளை வெளியிடும் பதிப்புரிமை தங்களுக்கு மட்டுமே உள்ளதாகக் கூறி, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றார். நீதிபதி சந்துரு அவர்கள் குடி அரசை பெரியார் தி.க வெளியிட எந்தத் தடையும் இல்லை என தீர்ப்பு கொடுத்தார். அதை எதிர்த்து வீரமணி மேல் முறையீடு செய்தார். பெரியார் திராவிடர்க் கழகம் குடி அரசு தொகுப்புகளை வெளியிட எந்தத் தடையும் இல்லை என 09.06.2010 அன்று நீதியரசர்கள் இப்ராகிம் கலிஃபுல்லா, கிருபாகரன் ஆகியோர் தீர்ப்பளித்தனர். மேலும் 27 தொகுதிகளையும் தங்கள் அமைப்பின் இணையதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளவும் அந்த அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.[2][3]

திராவிடர்க் கழகத்தின் தொகுப்பு

திராவிடர்க் கழகத்தின் சார்பு அமைப்பான பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனம் சார்பில் "பெரியார் களஞ்சியம்' என்ற பெயரில் "குடி அரசு' நூல் தொகுப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் வெளியீட்டு விழா 8, மே, 2010 ஆம் ஆண்டு கோவையில் கி.வீரமணி தலைமையில் நடைபெற்றது. இதுவரை 30-க்கும் மேற்பட்ட தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன.[4]

Remove ads

பெண்ணுரிமை

பெண்ணுரிமைக்காக தந்தை பெரியார் சொன்ன புரட்சிகரமான கருத்துகளில் இதுவும் ஒன்று.

நம் பெண்கள் குறைந்த பட்சம் 20 வயது வரை படிக்க வைக்க வேண்டும். அவர்களுக்குக் கல்வியளிக்க வேண்டும். வாழ்விற்கு ஏற்ற வருவாயுள்ள தொழிலை அவர்களுக்குக் கற்பிக்கவேண்டும். அதன்பின் அவர்களாகத் தங்களுக்கேற்ற துணைவர்களை ஏற்றுக் கொள்ள அனுமதிக்க வேண்டும். வாழ்க்கையில் கவலையற்ற வாழ்வு வாழ வேண்டும். மனிதன் என்றால்-பகுத்தறிவுள்ளவன் என்றால், அதற்குப் பொருள் கவலையற்று வாழ்வதேயாகும்!.[5]

Remove ads

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads