ராலேகாண் சித்தி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ராலேகாண் சித்தி (மராத்தி: राळेगण सिद्धी) இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலத்தின் அஹமத்நகர் மாவட்டத்திலுள்ள பார்னெர் வட்டத்திலுள்ள ஒரு சிற்றூர் ஆகும். இக்கிராமம் பூனே நகரிலிருந்து 87 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 982.31 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது இந்த கிராமம். சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு இவ்வூர் சிறந்த உதாரணமாகக் கருதப்படுகிறது. மரம் நடுதல், மண் அரிப்பைத் தடுக்க தடுப்பணைகள் கட்டுவது, மழை நீரை சேமிக்க வாய்க்கால் அமைப்பது போன்ற பல பணிகளை இக்கிராமத்து மக்கள் செய்துள்ளனர். சூரியமின் தகடுகள், காற்றாலை மற்றும் சமூகக் கழிப்பிடங்களில் இருந்து பெறப்படும் உயிரிவாயு போன்ற புதுப்பிக்கத்தக்க சக்திகளை கொண்டு தேவையான மின்சாரத்தை இந்த கிராமத்திலேயே தயாரிக்கின்றனர்.[1] இந்த கிராமம் ஒரு முன்மாதிரி கிராமமாகக் கருதப்படுகிறது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்திகளிலிருந்து மின்சாரம் தயாரிப்பதே இந்த கிராமத்தின் மிகப்பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது. இக்கிராமத்திலுள்ள தெருவிளக்குகள் அனைத்திலும் சூரியமின் தகடுகள் பொருத்தப்பட்டு, அதிலிருந்து பெறப்படும் மின்சாரத்திலேயே இயங்குகின்றன.[2] இந்த கிராம பஞ்சாயத்தின் தலைவரே கிராமத்தை வழிநடத்துகிறார்; அவர் மக்களால் சர்பஞ்ச் என்று அழைக்கப்படுகிறார்.
Remove ads
மக்கள் வகைப்பாடு
2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்த கிராமத்தில் 394 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அன்றைய நிலவரத்தின்படி இந்த கிராமத்தின் மக்கள்தொகை 2306 (1265 ஆண்கள் மற்றும் 1041 பெண்கள்).[3]
நீர்வடிகால் மேம்பாடு
1975 ஆம் ஆண்டு இக்கிராமம் வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதன் காரணமாக இங்கு ஏழ்மை மற்றும் கள்ளச் சாராயப் புழக்கம் மிக அதிகமாக இருந்து வந்தது. இக்கிராமத்தின் நீர்தேக்கத் தொட்டி பழுதடைந்து நீர் கசிந்ததால் அதில் நீரை சேமிக்க இயலவில்லை. எனவே புதிய வடிகால் தொட்டி கட்டும் வேலைகள் துவங்கப்பட்டது. அன்னா ஹசாரே இப்பணியில் கிராம மக்களையும் ஈடுபடுமாறு ஊக்கப்படுத்தினார். இப்பணி நிறைவடைந்ததும் அப்பகுதியில் இருந்த ஏழு கிணறுகள் கோடையிலும் முதன்முறையாக நிரம்பின.[4]
தற்போது ராலேகாண் சித்தியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் உள்ளது. மேலும் இந்த கிராமத்தில் ஒரு தானிய சேமிப்புக் கிடங்கு, ஒரு பால் சேமிப்பகம் மற்றும் ஒரு பள்ளியும் உள்ளன. வறுமை முற்றிலுமாக அகற்றப்பட்டுவிட்டது.[5]
Remove ads
முன்மாதிரி கிராமம்
ராலேகாண் சித்தி வறண்ட பகுதியில் அமைந்த மிக மோசமான மற்றும் ஏழ்மையான கிராமம் என்ற நிலையில் இருந்து மிகவும் வளமான கிராமமாக மாற்றம் அடைந்ததாக உலக வங்கிக் குழுமம் அங்கிகரித்துள்ளது. ராலேகாண் சித்தி 25 வருடங்களாக, உள்ளூர் பொருளாதாரத்தை கொண்டே இயற்கை வளங்களை சீரமைக்க முடியும் என்பதில் தேசத்திற்கே ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது.[6]
அன்னா ஹசாரே
இந்த கிராமத்தின் தலைவரான, இந்திய சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, இந்த கிராமத்தின் முன்னேற்றத்திற்குக் காரணமாக கருதப்படுகிறார். தனது கிராமத்தை முன்மாதிரி கிராமமாக மாற்றிய சாதனைக்காக இந்திய அரசு அவருக்கு 1992 ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருது வழங்கி கவுரவித்தது.[7]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads