வங்காளதேச நாடாளுமன்றம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜாதீய சங்சாத் என்று அழைக்கப்படும் வங்காளதேசப் நாடாளுமன்றம்,[3] வங்காளதேசத்தின் முதன்மை சட்டவாக்க அவை ஆகும். தற்போதைய நாடாளுமன்றத்தில் 350 உறுப்பினர்கள் உள்ளனர்.[4] இதில் 50 தொகுதிகள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறைப்படி அரசியல் கட்சிகளின் பெண் உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
2014ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டோர் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தொடர்கின்றனர். பதவி பறிக்கப்படாத பட்சத்தில், இவர்கள் ஐந்தாண்டு காலம் உறுப்பினராக இருக்க முடியும்.[5]
பெரும்பான்மை இடங்களைப் பெற்ற கட்சியின் சார்பாகவோ, அல்லது அதன் கூட்டணியின் சார்பாகவோ ஆளுங்கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். இவர் வங்காளதேசத்தின் பிரதமராக பொறுப்பேற்பார். பாராளுமன்றக் கூட்டங்கள் ஜாதீய சன்சாத் பவனில் நடைபெறுகின்றன.[6]
அவாமி லீக் கட்சியின் தலைவரான சேக் அசீனா வங்காளதேசப் பிரதமராக பொறுப்பேற்று இருந்தார்.
Remove ads
உறுப்பினர்
வங்காளதேச அரசமைப்புச் சட்டத்தின் 66வது கட்டுரையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஆவதற்கான தகுதிகளைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.
- வங்காளதேசக் குடிமகனாகவோ குடிமகளாகவோ இருக்க வேண்டும்.
- வயது இருபத்தைந்துக்கும் அதிகமாக இருக்க வேண்டும்.[7]
ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியில் இருந்தும் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். இவரை நேரடி வாக்கெடுப்பின் மூலம் பொதுமக்கள் தேர்ந்தெடுப்பர். அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டவராக அறிவிக்கப்படுவார். ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் ஐந்தாண்டு காலம் பதவியில் இருப்பர்.[7] ஐந்தாண்டு காலம் முடிந்ததும், அனைவரின் பதவிக்காலமும் முடிவடையும். நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டு புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படலாம். அவர் தனி வேட்பாளராகவோ, கட்சி சார்ந்த வேட்பாளராகவோ இருக்கலாம்.
ஒரு உறுப்பினர் தொடர்ந்து 90 நாட்கள் சபைக்கு வராத பட்சத்தில் அவரது பதவி பறிக்கப்படும் என்று 67வது கட்டுரையில்[7] குறிப்பிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினரின் தகுதியை வங்காளதேசத் தேர்தல் ஆணையம் சரிபார்க்கும்.
Remove ads
இரட்டை உறுப்பினத்துவம்
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட அனுமதி உண்டு என்று அரசமைப்புச் சட்டத்தின் 71வது கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெறும் பட்சத்தில், ஒரு தொகுதியைத் தவிர ஏனைய தொகுதிகளில் உறுப்பினர் பதவியில் இருந்து விலக வேண்டும். மறுதேர்தல் நடத்தப்பட்டு மற்றொருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.[7][8]
சேக் அசீனா, சில்லூர் இரகுமான் உள்ளிட்டோர் ஒரே தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிட்டுள்ளனர். கட்சித் தலைவர்களும், முக்கிய நபர்களும் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடுவது வழக்கமாக உள்ளது.[8]
Remove ads
அதிகாரமும், உரிமைகளும்
வங்காளதேசப் பிரதமரையும், அவரது அமைச்சரவையையும் குடியரசுத் தலைவர் நியமிப்பார். பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுபவரும், பிற அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்வானவர்களாக இருக்க வேண்டும்.[9][10] குடியரசுத் தலைவர் நாடாளுமன்ற அவையில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவை பெற்றவரை பிரதமராக நியமிப்பார்.[10] அமைச்சரவை தன் செயல்பாடுகளுக்கான விளக்கத்தை நாடாளுமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.[7]
பொது வாக்கெடுப்பு முறையில் நாடாளுமன்ற உறுப்பினர்களால் வங்காளதேசக் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.[11] நாடாளுமன்றத்தின் மூன்றில் இரு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே குடியரசுத் தலைவரின் பதவியை பறிக்கப்படும்.[7] இதுவரையில் குடியரசுத் தலைவரின் பதவி பறிக்கப்பட்டதில்லை.[12]
சட்ட முன்வரைவுகளை ஆய்வதற்காகவும், சட்டங்களை சீரமைக்கவும், உறுப்பினர்களைக் கொண்ட குழுக்கள் அமைக்கப்படலாம்.[7]
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் பேசிய பேச்சு, அளித்த வாக்குகள், செயல்பாடுகள் உள்ளிட்டவற்றை நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டியதில்லை என்று அரசமைப்புச் சட்டத்தின் 78வது கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.[7]
இதனையும் காண்க
சான்றுகள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads