வெசெரியூபங் நடவடிக்கை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வெசெரியூபங் நடவடிக்கை (Operation Weserübung, இடாய்ச்சு: Unternehmen Weserübung) என்பது இரண்டாம் உலகப் போரின் போது இசுக்கேண்டிநேவியாவில் நிகழ்ந்த ஒரு படையெடுப்பு நடவடிக்கை. இதில் நாசி ஜெர்மனியின் படைகள் டென்மார்க் மற்றும் நார்வே மீது படையெடுத்து அவற்றைக் கைப்பற்றின.
செப்டம்பர் 1, 1939ல் நாசி ஜெர்மனியின் போலந்து படையெடுப்புடன் இரண்டாம் உலகப் போர் துவங்கியது. ஆனால் மேற்கத்திய நேச நாடுகள் உடனடியாக ஜெர்மனியைத் தாக்கவில்லையாதலால் ஐரோப்பிய நிலக்களத்தில் பெரிய மோதல்கள் எதுவும் ஏப்ரல் 1941 வரை நிகழவில்லை. இக்காலத்தில் இசுக்கேண்டிநேவியா நாடுகளான நார்வே மற்றும் டென்மார்க் இரண்டும் அச்சு மற்றும் நேச கூட்டணிகளில் சேராமல் நடுநிலை நாடாக இருந்தன. இரு தரப்புக்கும் உதவுவதில்லை என்ற நிலையைக் கொண்டிருந்தன. நார்வேயின் நார்விக் துறைமுகம் வழியாக சுவீடன் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இரும்புத் தாதுக்கள் நாசி ஜெர்மனியின் போர் முயற்சிக்குத் தேவைப்பட்டன. ஆனால் நார்வே நடுநிலையுடன் இருக்கும் வரை தடையின்றி அதைப் பெறமுடியாது என்று அந்நாட்டைத் தாக்கிக் கைப்பற்ற இட்லர் முடிவு செய்தார். மேலும் நார்வேயின் நடுநிலைமை குறித்து ஐயம் கொண்ட நேச நாடுகளும் நார்வே மீது படையெடுத்து அதனை ஆக்கிரமிக்கத் திட்டம் தீட்டி வந்தன. இந்தத் திட்டத்தை முறியடிக்க அவர்களுக்கு முன்னர் தாங்கள் நார்வே மீது படையெடுக்க ஜெர்மானியர்கள் முடிவு செய்தனர். நார்வே நாட்டைத் தாக்க டென்மார்க்கில் உள்ள படைத்தளங்கள் தேவைப்படுமென்பதால் டென்மார்க்கையும் தாக்கிக் கைப்பற்ற முடிவானது. இத்தாக்குதல் நடவடிக்கைக்கைக்கு வெசர் பயிற்சி நடவடிக்கை என்று குறிப்பெயரிடப்பட்டிருந்தது. ஏப்ரல் 9, 1940ம் தேதி இத்தாக்குதல் தொடங்கியது.
டென்மார்க் மீதான ஜெர்மானியத் தாக்குதல் சில மணி நேரங்களுள் முடிந்து விட்டது. மிகக் குறைந்த அளவே படைபலம் கொண்டிருந்த டென்மார்க் ஜெர்மானியப் படையெடுப்பு தொடங்கிய சில மணிநேரங்களில் சரணடைந்துவிட்டது. ஆனால் நார்வே நாட்டு ஆட்சியாளர்களும் படைகளும் சரணடைய மறுத்து இரு மாதகாலம் ஜெர்மானியப் படைகளை எதிர்த்துப் போரிட்டனர். நார்வே மீதான தாக்குதலை ஜெர்மானியத் தரைப்படையின் 21வது கோர் மேற்கொண்டது. இதில் ஆறு டிவிசன்கள் இடம்பெற்றிருந்தன. இவை ஜெர்மானியக் கடற்படைக் கப்பல்கள் மூலமாக நார்வேயின் கடற்கரையில் தரையிறங்கின. ஓஸ்லோ, பெர்கன், நார்விக் போன்ற பெருநகரங்களைக் கைப்பற்ற அவை உடனடியாக முயன்றன. இந்த தரையிறக்கம் நடந்து கொண்டிருந்த போது நார்வீஜிய அரச குடும்பமும், அரசும் நாசிப் படைகளின் கையில் சிக்காமல் தப்பிவிட்டனர். பின்னர் இங்கிலாந்து சென்று அங்கொரு நாடு கடந்த அரசை நிறுவினர். அவர்கள் தப்பிய பின்னர் நார்வேயில் நாசி கட்சி ஆதரவாளர்களின் தலைவரான குவிஸ்லிங் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றி ஜெர்மானியப் படைகளை வரவேற்பதாக அறிவித்தார். குவிஸ்லிங் போன்றவர்களின் ஆதரவு இருந்த போதிலும், முக்கிய நகரங்கள் பல தாக்குதலின் முதல் நாளன்றே வீழ்ந்த போதிலும் நார்வீஜிய படைகள் சரணடையவில்லை. வடக்கு திசையில் பின்வாங்கி பிற நேச நாட்டுப் படைகளின் துணையுடன் மேலும் இரு மாதங்கள் சண்டையிட்டு வந்தன. இவ்விரு மாதகாலத்துள் மேற்குப் போர்முனையில் அச்சுப் படைகள் பெரும்பாலான நேச நாடுகளைத் தோற்கடித்து விட்டன. இதனால் நார்வேயிலிருந்த நேசப் படைகள் பிரிட்டனுக்கு திருப்பி அழைத்துக் கொள்ளப்பட்டன. தனித்துப் போரிடும் நிலைக்கு ஆளான நார்வீஜிய தரைப்படை ஜூன் 10, 1940ல் சரணடைந்தது. இத்துடன் வெசெரியூபங் நடவடிக்கை முற்றுப்பெற்றது. குவிஸ்லிங் தலைமையில் நார்வேயில் நாசி ஆதரவு ஆட்சி ஏற்பட்டது. எனினும், நார்வீஜிய எதிர்ப்புப் படையினர் 1945ல் போர் முடியும் வரை குவுஸ்லிங் அரசையும், ஜெர்மானியப் படைகளையும் எதிர்த்தனர்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads