சிங்காசாரி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிங்காசாரி (Singhasari, பொ.பி 1222 முதல் 1292 வரை சாவகத்தில் (இன்றைய இந்தோனேசியா) அமைந்திருந்த சைவ – பௌத்த அரசாகும். 1293 இல் மயாபாகித்து பேரரசு எழும்வரை இது நீடித்திருந்தது.
Remove ads
வேர்ப்பெயரியல்
பரராத்தன் உள்ளிட்ட சாவக நூல்களில், சிங்காசாரி பற்றிய குறிப்புகளைக் காணமுடிகின்றது.
இன்றைய மலாங் நகர் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிக்கு வழங்கப்பட்டிருந்த "துமாபெல்" எனும் பெயருக்கு மாற்றாக, "சிங்காசாரி" எனும் பெயர் கென் அரோக்கால், புதிய அரசு அமைக்கப்பட்டபோது சூட்டப்பட்ட பழஞ்சாவக – சங்கதக் கலப்புப் பெயர் ஆகும்.
"தூங்குதல்" அல்லது "சாரம்" எனப்பொருளுறும் சாவகச் சொல்லுடன் சிங்கம் இணைந்ததால், "சிங்கத்தையொத்த நகர்" அல்லது "தூங்கும் சிங்கம்" என்று இவ்வரசின் பெயருக்குப் பொருள் கோடலாம்.
Remove ads
தோற்றம்
1182 முதல் 1227/1247 வரை ஆண்டவனாகக் கருதப்படும் "கென் அரோக்" மன்னனால், சிங்கசாரி அரசிருக்கை அமைக்கப்பட்டது. அவனது வாழ்க்கை,பரராத்தன் நூலிலும், மத்திய மற்றும் கிழக்கு சாவக நாட்டுப்புறக் கதைகளிலும், மிகுந்த சுவாரசியத்துடன் வருணிக்கப்படுகின்றது. கேடிரியில் பிரமன் அருளால், "கென் எண்டோக்" எனும் பெண்மணிக்கு மகனாகப் பிறந்த கென் அரோக், ஏதிலியாகவே வளர்ந்தான்.
துமாபெல்லை ஆண்ட "துங்குல் அமேதுங்கன்" என்பவனுக்கு பணியாளாக வேலைபுரிந்த கென் அரோக், பின் துங்குல்லைக் கொன்று துமாபெல்லில் ஆட்சியமைத்தான். சிங்காசாரியையும், பின் மயாபாகித்தையும் ஆண்ட இராயச வமிசத்தின் முதல் மன்னன், கென் அரோக் என்றே கருதப்படுகிறான்.[1]
அனுசபதி
துங்குல்லின் கொலைக்குப் பழியாக, கென் அரோக், துங்குல்லின் மகன் "அனுசபதி"யால் படுகொலை செய்யப்பட்டான்.[2]:185-187 எனினும், அனுசபதியும் மீண்டுமொரு பழிவாங்கலாக,கென் அரோக்கின் மகன் "பஞ்சி தோக்செயனால்" கொன்றொழிக்கப்பட்டான். பஞ்சி தோக்செயனால் 1248இல். சிலமாதங்கள் மட்டுமே அரசுபுரிய முடிந்தது.
அவனது மைத்துனர்களான ரங்காவுனியும் மகிச சம்பகனும் கிளர்ச்சி செய்து அவன் ஆட்சியைக் கவிழ்த்ததுடன், மு்றையே "விஷ்ணுவர்த்தனன்", "நரசிங்கமூர்த்தி" என்ற பெயர்களில் அரசைக் கைப்பற்றி ஆண்டனர்.[2]:188
Remove ads
விரிவாக்கம்
1275 இல், சிங்காசாரியின் ஐந்தாவது மன்னனானப் பதவியேற்ற கர்த்தநகரன், பெருங்கனவு கொண்டிருந்ததுடன், தொடர்ச்சியான இலங்கை நோக்கிய கடற்பயணங்களாலும், சோழப் படையெடுப்புகளாலும் வளங்குன்றியிருந்த சிறீவிசய நாட்டுக்கெதிராககக் கப்பற்படை அனுப்பி அதைக் கைப்பற்றினான்.[2]:198
"பாமெலாயு முற்றுகை" எனப் புகழ்பெற்ற பயணத்தை மேற்கொண்டு, சீனப் பட்டுப்பாதையின் முக்கிய கடல்வழி மையங்களில் ஒன்றாக இருந்த சிறீவிசயத்தைக் கைப்பற்றியதுடன், அதன் மிஞ்சிய எச்ச சொச்சங்களையும், சாவகம் மற்றும் பாலியிலிருந்து அறவே இல்லாதொழித்தான்.
பாலியையும் சிறீவிசயத்தையும் கர்த்தநகரன் தன் ஆளுகையின் கீழ் கொணர்ந்த பின், சிங்காசாரி அரசு, மெல்ல மெல்ல, பின்னாளைய மயாபாகித்தாக வளர்வதற்கான முழுநிலப்பரப்பையும், தன் ஆளுகையின் கீழ் கொண்டுவரலாயிற்று. சம்பா (இன்றைய வியட்நாம்) அரசனுடனும் பின்னாளில் கர்த்தநகரன் கூட்டணி அமைத்துக்கொண்டான்.
மொங்கோலிய எதிர்ப்பு

1280இல், மொங்கோலியப் பேரரசனின் மன்னன் குப்லாய் கான், சிங்காசாரியிடம் திறைகேட்டு தூதனுப்பினான். இந்தோனேசியத் தீவுக்கூட்டத்திலேயே அப்போது பலம்வாய்ந்த அரசாக விளங்கிய சிங்காசாரி மன்னன் கர்த்தநாகரன், அதை அலட்சியம் செய்ததுடன், 1281 இலும் இறுதியாக 1289 இலும் கூட, குப்லாய் கானின் தூது, சிங்காசாரியை வந்தடைந்தபோதும், இந்த இரண்டு தடவையும், முன்பு போலவே நடந்தது.
அது மாத்திரமன்றி, குப்லாய் கானின் தூதனான மெங்கியின் முகத்தில் பச்சை குத்தி, காதுகளையும் அறுத்து, இழிவுபடுத்தி அனுப்பினான் கர்த்தநகரன்.[2]:198
இதனால், வெகுண்டெழுந்த குப்லாய் கான், 1292 இன் பிற்பகுதியில் பெரும் கடற்படையொன்றை சிங்கசாரி மீது ஏவினான். அதற்கெதிரான தயார்படுத்தல்களில் சிங்காசாரி ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, பழைய கேடிரி அரசிலிருந்து பெருங்கண்டம் ஒன்று வந்துகொண்டிருந்ததை, சிங்கசாரி அறியவில்லை.
Remove ads
சிங்கசாரியின் வீழ்ச்சி

கேடிரியின் கொடிவழியில் வந்த செயகாதவாங்கன் எனும் இளவரசன், ஆரிய வீரராசன் எனும் மதுராத் தீவு திக்கதிபனுடன் இணைந்து, கர்த்தநகரனைக் கொன்று சிங்காசாரியைக் கைப்பற்ற முடிவெடுத்தான்.[2]{{rp|199}
வடக்கு, தெற்கு எல்லைகளிலிருந்து கேடிரிப் படை, சிங்கசாரியை ஒரேநேரத்தில் தாக்கியது. வடபகுதியில் மட்டும் முற்றுகை நிகழ்வதாகக் கருதி தன் மருகன் நராரிய சங்கிராமவிசயனை கர்த்தநகரன் அங்கனுப்பினான். எதிர்பாரா விதமாக, செயகாதவாங்கனின் தென்பகுதி முற்றுகை வெற்றியீட்டி, ஏற்பாடுகள் எதுவுமின்றி இருந்த சிங்காசாரி நகர் அவனால் கைப்பற்றப்பட்டது.
அரசை வென்றுகொண்ட செயகாதவாங்கன், உடனடியாக தாந்திரீக வேள்வியொன்றை ஏற்பாடு செய்து, கர்த்தநகரனை நரபலியிட்டான். சிங்காசாரி அரசு வரலாற்றிலிருந்து துடைத்தெறியப்பட்டது.
செயகாதவாங்கன்
வடவெல்லையில் மோதிக்கொண்டிருந்த சங்கிராம விசயனும் அவனது தோழர்களான ரங்கலாவை, சோரன், நம்பி ஆகியோராலும் எதுவும் செய்ய முடியவில்லை. ரங்கலாவையும் சோரனும் நம்பியும், தம் தந்தையான ஆரிய வீரராசனிடம் சங்கிராம விசயனை அழைத்துச்சென்று தஞ்சம்புகச் செய்தனர்.
ஆரிய வீரராசனின் நயமான சொற்களில் மகிழ்ந்து விசயனை மன்னித்து விட்ட செயகட்வாங்கன், அவன், தன்னாட்சியின் கீழ் அருச்சுன மலையருகே ஆட்சி புரியவும் நிலம் வழங்கினான். துரதிட்டவசமாக, பின்னாளில் செயகாதவாங்கனுக்கே காலனாய் அமைந்த சங்கிராம விசயனால் அங்கு அமைந்த மயாபாகித்து எனும் நகர், பின்னாளில் பேரரசாக வளரலாம் என்பதை, செயகாதவாங்கன் அப்போது அறியக்கூடவில்லை.
Remove ads
மயாபாகித்து பேரரசு தோற்றம்

1293-இன் ஆரம்பத்தில், மொங்கோலிய குப்லாய் கானின் கப்பற்படை சாவகத்தை வந்தடைந்தபோது, அவனால் பழிவாங்க எண்ணப்பட்டிருந்த கர்த்தநகரன் உயிரோடு இருக்கவில்லை. எனினும், செயகட்வாங்கனை வீழ்த்தி, சிங்காசாரியைத் தன்வசமாக்க எண்ணினான் குப்லாய் கான்.
அவனோடு மார்ச்சு 1293-இல் கைகோர்த்துக் கொண்ட சங்கிராமவிசயன், அவர்களுடன் இணைந்து செயகாதவாங்கனின் கேடிரி அரசின் தலைநகரான தகாவைச் சூறையாடியதுடன், மொங்கோலியரிடம் செயகாதவாங்கன் சரணடைந்து, பின் அவன் தலைவெட்டிக் கொல்லப்படவும் காரணமானான்.
கர்த்தராயச செயவர்த்தனன்
செயகாதவாங்கன் கொல்லப்பட்ட அடுத்த கணமே, தன் படையை மொங்கோலியப் படைக்கெதிராகத் திருப்பிய விசயன், 1293 மே 31-இல், அவர்கள் சாவகத்தை விட்டு முற்றாக விட்டுவிலகும் வரை, ஓட ஓட விரட்டினான்.[2]:200-201
இவ்வாறு வெற்றியைத் தழுவிக்கொண்ட கர்த்தநகரனின் மருகன் விசயன், "கர்த்தராயச செயவர்த்தனன்" எனும் பெயருடன், 1293 நவம்பர் 12-ஆம் தேதியன்று, மயாபாகித்தில் முடிசூடிக் கொண்டான். இந்தோனேசியப் பேரரசுகளில் ஒன்றான "மயாபாகித்து பேரரசு" புதிதாக மலர்ந்தது.
Remove ads
சிங்காசாரி ஆட்சியாளர்கள்

மேலும் பார்க்க
அடிக்குறிப்புகள்
உசாத்துணைகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads