அன்பு
From Wikipedia, the free encyclopedia
அன்பு (ஒலிப்புⓘ) (Love) என்பது உணர்ச்சி மற்றும் மனநிலை சார்ந்த பல்வேறு வகையான உணர்வுகளையும் அனுபவத்தையும் குறிக்கிறது. பொதுவாக அன்பு வலுவாகவும், நேர்மறையான அனுபவமாகவும் இருக்கிறது. எளிமையான மகிழ்ச்சி முதல் ஆழ்ந்த தனித்தன்மையான பாசம் வரை அன்பு பல பரிமாணங்களில் வெளிப்படுகிறது. அன்பு என்ற சொல் குறிக்கும் பொருள்களின் எல்லைகளை விளக்க வேண்டுமெனில் இவ்எளிய எடுத்துக்காட்டை எண்ணி உணரலாம். ஒருவன் தன் தாயின் மீது கொண்ட அன்புக்கும், தன் காதலியிடம் கொண்டுள்ள அன்புக்கும், அவன் ஒரு வகையான உணவின் மீது கொண்டுள்ள அன்புக்கும் உள்ள வேறுபாடுகளைப் புரிந்து கொள்வதால் அன்பின் ஒருசில பரிமாணங்களை உணரலாம். பொதுவாக அன்பு என்பது ஒரு வலுவான ஈர்ப்பு மற்றும் தனிப்பட்ட உறவுமுறை இணைப்பின் உணர்வைக் குறிக்கிறது [1].
மனிதநேயம், இரக்கம், பாசம் ஆகியவற்றை குறிக்கும் ஒரு நல்லொழுக்கமே அன்பு எனப்படுகிறது. மேலும், மற்றொருவரின் நன்மைக்காக பரிபூரணமான அக்கறையும் தன்னலமற்ற விசுவாசம் கொண்ட ஒரு ஒழுக்கமான மனநிலையை அன்பு எனலாம் [2]. மற்ற மனிதர்களிடம் அல்லது விலங்குகளிடம் சுயநலமின்றி செலுத்தப்படும் கருணை மற்றும் பாசமுள்ள செயல்களையும் அன்பு என்று விவரிக்கலாம் [3].
பண்டைய கிரேக்க தத்துவவாதிகள் நான்கு விதமான அன்பை அடையாளம் கண்டனர்: அவை, குடும்ப உறவு (கிரேக்கத்தில் – storge), நட்பு (கிரேக்கத்தில் – philia) காதல் (கிரேக்கத்தில் – eros) மற்றும் தெய்வீக அன்பு (கிரேக்கத்தில் – agape) என்பனவாகும். இனக்கவர்ச்சி, தற்காதல், விசுவாசம் என நவீன எழுத்தாளர்கள் அன்பின் வகைகளை மேலும் வேறுபடுத்தி காட்டியுள்ளனர். மேற்கத்திய நாடுகள் அல்லாத பாரம்பரியத்தினரும் இந்த அன்பின் மாறுபாடுகள் அல்லது அறிகுறிகளை வேறுபடுத்தியுள்ளனர் [4][5]. கூடுதலாக அன்பு என்பது மதம் அல்லது ஆன்மீகம் சார்ந்த பொருளையும் உள்ளடக்கியுள்ளது. இத்தகைய பன்முகத்தன்மை கொண்ட பொருளும் பயன்களும் சேர்ந்துள்ள உணர்வுகளின் சிக்கலான தன்மையால் அன்பு என்ற சொல்லை வரையறுப்பது மிகவும் கடினமானச் செயலாக உள்ளது.
இரு நபர்களுக்கிடையேயும் தனிமனித உறவு சார்ந்தும் அன்பு அதன் பல்வேறு வடிவங்களில் முக்கிய உதவியாளராகச் செயல்படுகிறது. மைய உளவியல் சார்ந்த முக்கியத்துவம் காரணமாக படைப்பு கலைகளிலும் அன்பு மிகவும் பொதுவான கருத்துக்களில் ஒன்றாகத் திகழ்கிறது [6].
மனிதர்கள் மனிதர்களுக்கு எதிராக ஈடுபடும் கெடுதல்களை மன்னித்து அவர்களை ஒன்றாக இணைக்கவும், இனங்களாக ஒன்றுபட்டு ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்வதை எளிதாக்கும் ஒரு செயல்பாடாகவும் அன்பை புரிந்துகொள்ளலாம்[7].