அறிவியலின் மெய்யியல்
From Wikipedia, the free encyclopedia
அறிவியலின் மெய்யியல் (philosophy of science) என்பது மெய்யியலின் ஒரு கிளையாகும். இது அறிவியலின் அடிப்படைகள், முறைகள், விளைவுகள் பற்றிப் பயிலும் மெய்யியலாகும். இப்புலத்தின் மைய வினாக்கள் அறிவியல் திறம் பற்றிய வரன்முறை, அறிவியல் கோட்பாடுகளின் நம்பகத் தன்மை, அறிவியலின் அறுதிக் குறிக்கோள் ஆகியவை ஆகும். இது உண்மைக்கும் அறிவியலுக்கும் இடையில் உள்ள உறவை ஆயும்போது மீவியற்பியல், உள்ளியல், அறிவாய்வியல் ஆகிய புலங்கள் பின்னிப் பிணைகின்றன.
அறிவியலின் மெய்யியல் குறித்த மையக் கருப்பொருள்கள் பற்றிய பொதுக் கருத்தேற்பு ஏதும் இன்னமும் உருவாகவில்லை. நோக்கமுடியாத பொருள்கள் பற்றிய நடப்பியல் உண்மையை அறிவியலால் வெளிப்படுத்தமுடியுமா? அறிவியலில் விரிநிலை உய்த்துணர்வுச் சிக்கலைக் (problem of induction) கருதுகையில் அறிவியல் பகுத்தறிவு முறையைச் சரியென நிறுவமுடியுமா? ஒட்டுமொத்தமான அறிவியலைப் பற்றிய இவ்வகைப் பொதுக் கேள்விகளைத் தவிர, சில அறிவியலின் மெய்யியலாளர்கள் உயிரியலின் மெய்யியல், இயற்பியலின் மெய்யியல் போன்ற தனித்தனி அறிவியல் புலங்களின் சிக்கல்களைக் கருப்பொருளாகக் கருதுகின்றனர். சில அறிவியலின் மெய்யியலாளர்கள் இக்கால அறிவியலின் முடிவுகளைக் கொண்டு மெய்யியலின் முடிவுகளை அடைகின்றனர்.
மெய்யியலின் வரலாறு குறைந்தது அரிசுட்டாட்டில் காலம்வரை சென்றாலும், அறிவியலின் மெய்யியல் தனித்துறையாக மலர்ந்தது 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில்தான். குறிப்பாக, ஏரண நேர்க்காட்சிவாத இயக்கம் அனைத்து மெய்யியல் உரைகளுக்கும் உரிய வரைமுறைகளையும் பொருளுடைமையும் புறநிலையில் வைத்து மதிப்பிடத் தொடங்கிய பிறகுதான் எனலாம். தாமசு குஃன் என்பவரது நூலான அறிவியற் புரட்சிகளின் கட்டமைப்பு "கருத்தோட்டம்" (சிந்தனைச் சட்டகம்) என்ற கருத்துப்படிமத்தைப் பொதுநடைமுறைக்குக் கொணர்ந்தது. சிந்தனைச் சட்டகம் என்பதன் பொருள் குறிப்பிட்ட காலத்தில் அறிவியல் புலத்தை வரையறுக்கப் பயன்படுத்தும் நடைமுறைகளின் கணம் அல்லது தொகுதி என்பதாகும். இந்த நூல் பகுத்தறிவு முறையில் தேர்வுசெய்த செய்முறைகளில் இருந்து பெறப்படும் படிபடியாகத் திரளும் அறிவே அறிவியலின் முன்னேற்றம் என்ற ஏற்கனவே நிறுவப்பட்டிருந்த கண்ணோட்டத்தைக் கேள்விக்குள்ளாக்கினார்".[1]
இன்று சிலர் இயற்கையின் சீர்மை போன்ற அடிக்கோளியல் கற்பிதங்களில் அறிவியலை நிலைநிறுத்தப் பார்க்கின்றனர். பலர் ஒருங்கியைபு அணுகுமுறையை (coherentism) அறிவியலுக்குப் பயன்படுத்தப் பார்க்கின்றனர். இதில் நோக்கீடுகளை ஒருங்கியைந்த முழுமையின் ஒரு பகுதியாக கோட்பாடு பொருட்படுத்தினால் அல்லது பொருள்தர வழிவகுத்தால் அந்தக் கோட்பாடு சரியானதாகக் கருதப்படும். பவுல் ஃபேயர்பெண்டு "அறிவியல் முறை" என்றே ஏதும் கிடையாது. எனவே அறிவியல் ஆய்வில் அனைத்து அணுகுமுறைகளையும் பயன்படுத்தலாம். ஏன், இயற்கையிகந்த முறைகளையும் கூடப் பயன்படுத்தலாம் என்கிறார். (பேயர்பெண்டு கண்ணோட்டம் அறிவியலின் மெய்யியலாரால் விதிவிலக்காகவே கருதப்படுகிறது.) டேவிட் புளூர், பாரி பார்னெசு போன்ற அறிஞர்கள் சமூகவியல் கண்ணோட்டத்தில் அறிவு எப்படி உருவாக்கப்படுகிறது என்ற வேறொரு அணுகுமுறையால் அறிவியலை விளக்கப் பார்க்கின்றனர். இறுதியாக, மாந்தரினப் பட்டறிவை முனைப்போடு பகுப்பாய்வு செய்யும் கண்ணோட்டத்தில் இருந்து அறிவிலை அணுகும் ஐரோப்பிய மெய்யியல் (continental philosophy) மரபும் நிலவுகிறது.
தனி அறிவியல் புலங்களின் மெய்யியல், ஐன்சுடைனின் பொது சார்பியல் எழுப்பிய காலச் சிக்கல் குறித்த மெய்யியலில் இருந்து, பொது அறிவியல் கொள்கைக்கான பொருளியல் வரையிலான பல கருப்பொருள்களில் ஆழ்கிறது. ஒரு மையக் கருப்பொருள் ஓர் அறிவியல் புலம் மற்றொன்றின் முறைகளுக்குச் சமனாகக் குறைக்கமுடியுமா என்பதாகும். அதாவது, வேதியியலை இயற்பியலுக்குக் குறைக்கமுடியுமா, அல்லது சமூகவியலை தனி மாந்தனின் உளவியலின் மெய்யியலுக்குக் குறைக்கமுடியுமா? என்பதே. தனி அறிவியலில் அறிவியலின் மெய்யியல் சார்ந்த பொதுக் கேள்விகளும் கூடுதல் கூர்மையுடன் எழுகின்றன. எடுத்துக்காட்டாக, புள்ளியியலின் அடிப்படைகளில் அறிவியலின் சிந்தனை முறைமையின் சரித்தன்மை பற்றிய கேள்வி எழுகிறது. குறிப்பாக எது அறிவியல் எதை அதிலிருந்து நீக்கவேண்டும் என்ற கேள்வி மருத்துவ மெய்யியலில் வாழ்வா சாவா என்ற நிலைக்குத் தள்ளிவிடுகிறது. மேலும் கூடுதலாக உயிரியல், உளவியல், சமூகவியல் சார்ந்த மெய்யியல்களில் மாந்தனின் இயல்பை அறிவியல் ஆய்வுகளால் புறநிலையாக முடிவுசெய்ய முடியுமா அல்லது அவை தனி மாந்தனின் சொந்த,பண்பாட்டு விழுமியங்களாலும் சமூக உறவுகளாலும் முடிவு செய்யப்படுகின்றனவா? என்ற தேடல் தொடர்கிறது.